Saturday, December 22, 2012

பதவியேற்பு


 
மஹாபராதத்தில் பீஷ்மர், சாவை தேர்ந்தெடுக்க கூடிய வரமுடையவர், ஆதலால்.,  அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டு, தான் இறக்கும் நாளை நோக்கி நாட்களை கழித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு நாட்கள் சண்டை முடிந்து, யூதிஷ்டர் பட்டம் சூட்டிக் கொண்ட பின், பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ண பரமாத்மாவுடன் அவரைத்  தேடி வந்தார்கள். அவரும் தன் ராஜதானியான ஹஸ்தினாபுரம்இனி தர்மராஜன் ஆட்சியில் நல்வகையில் இருக்கும் என்ற நம்பிக்கையில் சந்தோஷமானார். கண்ணன் அவரை யூதிஷ்டருக்கு ராஜ நீதி மற்றும் ராஜ தர்மத்தை உபதேசிக்க வேண்ட அவர் “பரந்தாமா! உனக்குத் தெரியாத எதை நான் சொல்ல முடியும?” என்று வினவ கண்ணன் “என்னிடம் ஞானம் இருக்கின்றது. ஆனால் அனுபவமில்லை. உங்களுக்கு ஞானமும் அனுபவுமும் சேர்ந்திருக்கின்து. அதனால் நீங்கள் தான் புதிய சக்ரவர்த்திக்கு ஆசியும் அறிவுரையும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

பீஷ்மர் “தனி மனித தர்மம் மற்றும் நீதிக்கும், ராஜ தர்மத்திற்கும் நீதிக்கும் வேறுபாடு இல்லை.  நான் என் விரதத்தை தவறாக புரிந்து கொண்டு அரசனுக்குகாக நாடு என்று இருந்துவிட்டதில், அரக்கு மாளிகை, ராஜ்ஜியம் இரண்டாக பிரிக்கப்பட்டது, சூதாட்டம் மற்றும் எல்லாவற்றிக்கும் மேலாக திரௌபதியின் துகிலுரிவிற்கும் காரணாமாகி, குருக்ஷேத்திர யுத்தம் அதன் சர்வநாசத்திற்கும் பொறுப்பானேன். நீ அந்த மாதிரி எந்த சிக்கல்களிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது. நாட்டிற்காகத் தான் குடிமக்கள் என்பது போல் நாட்டிற்காதத்தான் அரசன். அரசன் என்பவன் எந்த விதத்திலும் குடிமக்களை விட மேலானவன் அல்ல. சாதாரண குடிமக்களுக்கான சட்டத்திட்டங்கள் மற்றும் நீதியும், அரசனுக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து புதிய யுகத்தை நீ அமைக்க வேண்டும்.” என்று கூறி தன் நாட்டின் வளத்திற்கு எந்த குறையுமில்லாமல் இயற்கை ஒத்துதுழைக்க வேண்டும் என்றும் வேண்டி வணங்கி, தாய் மண்ணை கிருஷணண் தலையில் இட, தன் சாவின் நேரத்தை தேர்ந்தெடுத்தார். குடிமக்கள் அன்றிலிருந்து புது யுகம் வரும், வரும் என்று நம்பிக் கொண்டேயிருக்கின்றனர். 


ஆகஸ்ட் 14 தேதி மாலை சூரியாஸ்தமனத்திற்கு பிறகு, தென்நாட்டின் மங்கள இசையான நாதஸ்வரம் முன்னால் முழங்க, டெல்லியின் மக்கள் கூட்டம் மிகுந்த நெரிசலான சாலைகளின் வழியே ஒரு ஃபோர்ட் டாக்ஸியின் ஊர்வலம் புறப்பட்டது. நூறு கெஜத்திற்கு ஒரு தரம் தார் சாலையில் அமர்ந்து நாதஸ்வர வாத்தியக்காரர் வாசிக்க, காருக்குள் அமர்ந்திருந்த இரு துறவிகள் இது எதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் நேராக பார்த்துக் கொண்டிருந்தனர். மேல் அங்கி அணியாத மார்புடன், நெற்றியில் பட்டையாக அணிந்த திருநீருடன், சடாமுடி தோளில் சரிந்து கழுத்தில் விழ, பெரிய ருத்திராட்ச மாலை அணிந்த அவர்கள் பழமையான இந்தியாவின் பிரதிநிதிகளாய் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தன்னுடையது என்று சொல்லிக் கொள்ளக் கூடிய ஏழு கணுக்களுடன் கூடிய மூங்கில் கோல்(தண்டம்), திருவோடு(உணவு சாப்பிடும் பாத்திரம்), மற்றும் மான் தோல் அவர்களுடனிருந்தது. பெண்களின் உறவையும் சகவாசத்தையும் ஒதுக்கிய அவர்கள் தூய சன்யாசிக்குறிய முறையில் பிக்‌ஷை ஏந்தி, பகல் பொழுது மட்டும் போஜனம், அதுவும் நின்று கொண்டு சாப்பிடும், கடுமையான துறவு வாழ்க்கையை மேர்கொண்டவர்கள். பெண்கள் தவறி காரின் ஜன்னல் அருகில் நின்று பார்த்தாலும் அவர்களின் பார்வையை முற்றிலுமாகத் தவிர்த்தனர்.  தினமும் காலையும் மாலையும் திருநீறணிந்து அவ்வபோது பஞ்சகவ்யம்(பசுவின் பால், தயிர், நெய், மூத்டிரம் மற்றும் சாணம் ஆகியவற்றின் கலவை) நீரை மட்டுமே உண்ணும் கடுமையான விரதம் மேற்கொண்ட தபசிகளில் ஒருவர் பெரிய வெள்ளி தாம்பாளத்தில், வெண்பட்டில் தங்கச்சரிகையுடன் கூடிய இறைவனுக்கு அணிவிக்கும் பீதாம்பரத்தை வைத்திருந்தார். மற்றவர் 5 அடி உயரமுள்ள செங்கோலையும், காவிரி நதியின் புனித நீரையும், நடராஜருக்கு படைக்கபட்ட பிரசாதத்தையும் வைத்திருந்தார்.

மெதுவாக ஊர்ந்தபடி இந்த ஊர்வலம் நெம்பர் 17 யார்க் ரோடையடைந்தது. புதிய இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் பிரதமமந்திரி, திரு. ஜவஹர்லால் நேருவுடன் அவர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்பு எப்படி ரிஷிகள் இராஜனுக்கு அதிகாரத்தையளித்தார்களோ, அவ்வகையில் இவர்களும் புதிய பாரதத்தைப் படைக்கும் நேருவுக்கு ஆசிகூற வந்திருந்தனர்.


அங்கு அவர்கள் நேருவிற்கு புனித காவிரியின் நீரைத் தெளித்து, திருநீற்றையும் குங்குமத்தையும் நெற்றியில் பூசி பீதாம்பரத்தை தோள்களில் அணிவித்து, செங்கோலை கையில் குடுத்து, தில்லையம்பதி நாதனுக்கு படைக்கப்பட்ட பொங்கல் பிரசாதத்தையும் கொடுத்து வாழ்வாங்கு வாழந்தி பாரத தேசத்தையும் உய்விக்க வேண்டும் என்று வாழ்த்தி ஆசி ங்கினர்.

பண்டிதநேரு இம்மாதிரி விஷயங்களில் சிறிதும் நம்பிக்கையற்றவர். அதுமட்டுமின்றி தன் மதசார்பின்மைக்கு எந்த விதத்திலும் மாறாக நடக்க மறுத்தவர். ஆயினும் அன்று தன் தேசம் புதிதாய் பிறக்கும் போது தன் நாட்டின் வழி வழி வந்த மரபையும் மதிக்கத் தெரிந்தவர், என்பது மட்டுமின்றி தான் வழிநடத்தப் போகும் நாட்டின் நிர்மாணத்திற்கு உதவி எந்த விதத்தில் வந்தாலும் அதை தவறவிடக்கூடாது என்ற காரணத்திற்காவும், உற்சாகமாக அவ்விழாவில் பங்கேற்றார்.

இந்திய அரசியலமைப்பு சபையின் அங்கத்தினரும் நாட்டின் முதல் ஜனாதிபதியுமான திரு. இராஜேந்திர பிரசாத் அவர்கள் வீட்டில், வேதியர்கள் வேத மந்திரங்களைச் சொல்லி முறைப்படி ஹோமம் வளர்த்தனர். அக்னிக்கும் வருணனுக்கும் மந்திரங்களை வேதியர் முறையாக முழங்க, மெத்தப் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஹோமத்தை வலம் வந்தனர். இவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் நேருஜியின் சுதந்திர இந்தியாவில் பதவியேற்கப் போகும் மந்திரிகள். வேறு ஒரு வேதியர் இவர்களின் மேல் புனித நீரைத் தெளித்தார். ஒரு பெண்மனி, செம்பு பாத்திரத்தில் மாவிலைக் கட்டியிருக்க, ஆரத்தி கழித்து திரிஷ்டி கழிய நெற்றியின் நடுவில் சிந்தூரம் அணிவித்தார். இப்படி ஆசிர்வதிக்கப்பட்ட இவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு கடமையாற்ற இந்திய அரசியமைப்பு சபைக்குள் நுழைந்தனர்.

ஆதீனம் புறப்பட்டு போன பின் நேருஜி நன்றாக்ழுவி குளித்துவிட்டு வந்தபோதிலும் நெற்றியில் குங்குமத்தின் சிகப்பு நிறம் இருந்தது. அப்போது லாகூரிலிருந்து அவருக்கு போன் வந்தது. மோசமான தகவல் தொடர்பினால் ரொம்பவே நேருஜி சத்தம் போட்டு பேசவேண்டியதாயிற்று. வந்த செய்தியோ லாகூர் பற்றியெறிந்து கொண்டிருந்ததை பற்றியது. நிலைகுலைந்து இடிந்து போய் நாற்காலியில் உட்கார்ந்தார். இன்னும் சிறிது நேரத்தில் பேசவேண்டிய உரையைகூட தயார் செய்யும் மனநிலை அவரிடமில்லை. தன் மனதில் எழுந்த உணர்சிகளையே அவர் பேசினார்.


உலகம் உறங்கும் இந்த நள்ளிரவு நேரத்தில் சுதந்திர வாழ்க்கை கண் விழிக்கிறது. சுதந்திரமும் அதிகாரமும் நம்முள் பொறுப்பு உணர்வை உருவாக்கியுள்ளன. இந்தியாவுக்குத் தொண்டாற்றுவது என்பது வறுமையில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்குத் தொண்டு செய்வதாகும். வறுமையும் அறியாமையும் பிணியும் சமத்துவம் இன்மையும் போக்கப்பட வேண்டும். அற்பமான, அழிவுக்கு வழிவகுக்கும் விமர்சனங்களில் ஈடுபடவும் ஒருவரை ஒருவர் குறை கூறவும் இது நேரமில்லை. இந்தியத் தாயின் எல்லாக் குழந்தைகளும் இன்புற்று வாழும் புனிதம் செறிந்த இருப்பிடமாக நமது நாட்டைக் கட்டமைக்கும் வேள்வியில் நாம் அனைவரும் இன்று முதல் ஈடுபட வேண்டும்.என்ற முதல் பிரதமர் நேருவின் முதல் சுதந்திர தின உரை 20ஆம் நூற்றானடின் தலை சிறந்த உரைகளில் ஒன்றானது.

எம் ஜீ ராமசந்திரன் திமுகவிலிருந்து 1972 வெளியேற்றப்பட்டபோது கடலூரில் மற்ற சில மாணவர்களுடன் “பையன் நடித்ததோ “பிள்ளையோப் பிள்ளை”. அப்பன் அடிப்பதோ கொள்ளையோ கொள்ளை” என்று ஒரு ஞாயிறு மதியம் சைக்கிளில் கத்திக் கொண்டே நண்பர்களுடன் ஊர்வலம் போனேன். எம்ஜியாருக்கு பிள்ளைகள் இல்லை; குடிப்பதில்லை; சிகெரெட் பிடிப்பதில்லை; ரிக்‌ஷாகாரர்கள் எல்லோருக்கும் ரெயின் கோட் வாங்கி கொடுத்திருக்கின்றார் என்பது போன்று பல நல்ல விஷயங்கள் அவருக்குப் பக்கபலமாகவிருந்தது. அவர் நடித்த திரைப்டங்களின் மூலமும். பாடல்களின் மூலமும், அவர் கொடை வள்ளல், பாட்டாளிகளின் தோழன் என்பது போன்ற வலிமையாக கட்டமைக்கப் பட்ட ஒரு பிம்பமும் அவருக்கு மிகவும் உதவியது. ”உலகம் சுற்றும் வாலிபன்” என்ற திரைப் படத்தைத் தயாரித்து அவர் வெளியிட மு. க. வின் அன்றைய அரசாங்கம் அறங்கேற்றிய அராஜகம், அடுத்த பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதிபடுத்தியது. எலெக்‌ஷன் போது அவர் தன் ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர்க்ளுக்கு அதிகமாக சீட் அளித்தார். இவர்கள் சாதராண பின்னணியிலிருந்து வந்தவர்கள். விழுப்புரம் எம் எல் ஏ கிருஷ்ணன் என்பவர் சோடாக்கடை வியாபாரி. கடலூரில் தி மு க விலிருந்து வந்த ரகுபதி என்பவர் எம் ஜி சக்ரபாணியை பார்த்து எப்படியோ கடலூரில் சீட் வாங்கி விட்டார், எம் ஜி யாருக்கு வேறு ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் முடியாமல் போய்விட்டது. அப்போது அவர் ரகுபதியை அழைத்து “நான் ஒரு செருப்பை நிக்க வைச்சா அது கூட ஜெயிக்கும்.” என்று சொல்லி மிரட்டியதாக வதந்தியிருந்தது.


அண்ணாசிலையருகே லட்சோபலட்சம் மக்கள் பார்வையாளாராக இருக்க எம் ஜி ஆர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். மக்களோ இவருக்கு பிள்ளயோ குட்டியோயில்லை. சினிமாவிலேயே நிறைய சம்பாதித்தவர்” என்று நம்பிக்கையிலிருந்தனர். அவரும் முதல் இரண்டு ஆண்டுகள் நிறைய செய்ய முயன்றார். லஞ்சம் வாங்குவதற்கும் பயம் வந்தது. இந்த சமயத்தில் தான் என் தந்தைக்கு வெள்ளம் மற்றும் வறட்சிப் பணிகளை செம்மையாகச் செய்ததற்காக சுதந்திர தின விழாவில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இடஒதுக்கீட்டில் ஜாதியை மட்டும் பார்க்காமல் பொருளாதார சூழ்நிலையைம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சட்டம் கொணர்ந்தார். உடனேயே தி க வும் தி முக வும் பெரும் போராட்டத்தில் அவர்களின் சுயநலம் கருதி இறங்க, அதை வாபஸ் பெறவேண்டியதாயிற்று. கருணாநிதியினால் கொண்டு வரப்படட மதுக்கடைக்களை மூட பூரண மதுவிலக்கு கொணர்ந்து அதை தீவிரமாகவும் கடைபிடித்தார். ஆனால் மதுக்கடைகளின் மூலம் பணம் சம்பாதித்து கொண்டிருந்த தி மு க வினர், போலிசைக் கைக்குள் போட்டுக் கொண்டு கள்ளச்சாரயத்தில் இறங்கினர்.  இந்திரா காந்தியுடன் கூட்டு வைத்துக் கொண்டு பாரளுமன்றத் தேர்தலில் வென்ற தி மு கவின் நிர்பந்தத்தால் ஆட்சியைக் கலைத்தார் இந்திரா காந்தி. எம் ஜி யார் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் தேர்தலை சந்திக்கவேண்டும். தேர்தல் என்றாலே பணம் என்றான பின், எம் ஜி யா ருக்கும் வேறுவழியில்லை. தி மு க வில் கொள்ளையடித்தவர்கள் எல்லோரும் மீண்டும் பணம் சம்பாதிக்க இவருடைய கட்சிக்கு வருவதையும் இவரால் தடுக்க முடியவில்லை. இவருக்கும் தி மு க விற்கும் நாளடைவில் வித்தியாசமே இல்லாமல் போய்விட்டது. இவர் முதல்வாராயிருக்கும் வரை சேத்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரியின் வாசலில் எப்போதும் இரண்டு போலிஸ் வேன்கள் சூழ்ந்து நின்று கொண்டிருக்கும். அந்த பஸ் நிறுத்ததில் மாணவர்களின் அநாகரீக அராஜகத்திற்கு முடிவு கட்டப்பட்டது. முன்பெல்லாம் இரண்டு மூன்று வாசல்கள் வழியாக வந்து கல்லெறிந்து போராடும் மாணவர்கள் ஒரு திட்டி வாசலுக்குள் நுழைந்துதான் கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்தது. பொதுவாகவே சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாகவிருந்தது. இவர் உயிரோடிருக்கும் வரை தமிழக மக்கள் மூன்று முறையும் இவரையே முதல்வராக்கினர். இவர் மறைந்த பின்னும் செல்வி ஜெயலலிதா மூன்று முறை முதல்வராக முடிந்தது இவரால்தான்.

மக்கள் அன்றிலிருந்து இன்று வரைக்கும் தங்களை உய்விக்க ஒரு நல்ல தலைவன் வரமாட்டானா என்று ஏங்கி ஓவ்வொரு முறை தலைவன் பதவியேற்கும் போதும் எதிர்ப்பார்ப்பையும் கனவுகளையும் சுமந்து ஏமாந்து கொண்டேயிருக்கின்றார்கள்.

இராமன் பட்டாபிஷேகத்தின் போதும் மக்கள் ஏமாந்தனர். ஆனால் அதற்கு காரணம் சிறிய தாய் செய்த சதி. ஒன்றும் அறியாமல் மக்கள்  உறங்கி கொண்டிருக்க விழிதெழும் மிருகத்தின் வழியாகவும் குவியும் குமுதத்தின் வழியாகவும் கவி கைகேயின் செயலைக் குறித்து வருத்தப்படுகின்றான்.

சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த இன் துயில் செய்தபின்,
வாம மேகலை மங்கையொடு வனத்துள், யாரும் மறக்கிலா
நாம நம்பி, நடக்கும்என்று நடுங்குகின்ற மனத்தவாய்,
யாமும் இம் மண் இறத்தும்என்பனபோல் எழுந்தன - யானையே.
யானைகள் துயில் எழுந்திருக்குபோதே ”அழகிய மேகலையணிந்த சீதையுடன் எவராலுமே மறக்கமுடியாத நாமத்தையுடைய இராமன் காட்டிற்குப் போகப் போகின்றான். நாமும் அவனுடனேயே புறப்பட்டு போவோம்” என்பது போல் எழுந்தது என்று கூறுகின்றார்.

சாய் அடங்க, நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும்
போய் அடங்க, நெடுங் கொடுங் பழிகொண்டு, அரும் புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல்கண்டு, சீரிய நங்கையார்.
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த - வண் குமுதங்களே.
தன் பெருமையும், தன் குலப்பெருமையும் அழியவும், நெடுங்காலம் பழி சுமக்கவும், பெருதற்கறிய புகழைச் சிதறுகின்ற கைகேயின் தீச்செயலைப் பார்த்து சிறந்த பெண்களின் வாய்கள் அடங்கி மூடினார் போல் செவ்வாம்பல் மலர்கள் வாய் மூடின.

இதையெல்லாம் ஒன்றுமறியா மக்களோ

மாதர்கள், கற்பின் மிக்கார், கோசலை மனத்தை ஒத்தார்;
வேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் ஊர்ச்
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார்.
ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் என்பதினால் பெரும்பாலான மக்கள் அவனுடைய தாய் தந்தையரைப் போலவும், சீதையைப் போலவுமே உணர்ந்து மகிழ்ந்தனர் என்று கவி மிக அழகாகக் கூறினார்.

முடிசூட்டுவிழாவுக்கு வந்திருந்த மன்னவர்கள் அனைவரும் மண்டபத்தையடைந்தனர். வராத மன்னவர்கள் என்று கவி
நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறுந் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் -
இலங்கையின் நிருதரே; இவ் ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும், ஆசை நின்ற விடா மத விலங்கலேயால். அரக்கர்களும், அஃறிணைப் பொருள்களான மலைகளும், திசையானைகளும் மட்டுமே வரவில்லை என்பதால் பிறர் எல்லாரும் வந்தனர் என்பதாம். அரக்கர் பகையானும், மலைகள், அசைதலின்மையானும், திசையானைகள் திசைகளைச் சுமத்தலைவிட்டு வரக்கூடாமையானும் வரவில்லை.

முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டபடியால் தசரதனை அழைத்து வர சுமந்திரன் கைகேயியின் இல்லத்தையடைந்தான். பெண்டிரில் கூற்றம் அன்னாள், ‘பிள்ளையைக் கொணர்கஎன்றாள்.. வனை கொல்லத் துணிந்தவள் என்பதினால் மகளிருள் யமனைப் போன்றவள் என்கின்றான் கவி.

சுமந்திரனும் இராமனை வாழ்த்தி அவனை தசரதனுடனேயே அனுப்பிவைக்க வேண்டியே கைகேயி வரச்சொல்லியிருக்கின்றாள் என்று பேருவுகைப் பொங்க வேகமாக தேரை ஒட்டிக் கொண்டு இராமனிடம் செல்ல இராமனும் உடனே தேர் மீது ஏறிச் சென்றான். இவன் செல்வதை பார்பத்ற்காக கூடியிருக்கும் மக்கள் கூற்றாக கவி

தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள,
ஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால்,
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது?’ என்பார்.
”கோசலையிடம் இவன் வளரவில்லை.; வளர்ந்தது மாதவம் செய்த கைகேயியிடம், அவள் உள்ளத்தில் பேருவகை சொல்லவும் முடியுமோ என்று நினைத்தார்கள்” என்கின்றான். POETIC IRONYக்கு.இது ஒரு மிகச்சிறந்த உதாரம், கைகேயியைப் பார்த்து இவன் முடிதுறந்து கானகம் போகப் போகின்றான். இன்னும் சிறிது நேரத்தில் எல்லோரும் கைகேயியை தூற்றப்போகிறார்கள். ஆயினும் கவி இராமனை கைகேயி வளர்த்தது அவள் செய்த மாதவத்தால் என மக்களின் கூற்றாக வைக்கின்றான்.

தசரதனை தேடி இராமன் மாளிகையில் நிற்கையில் கைகேயி வருதல்.
ஆயன நிகழும் வேலை, அண்ணலும் அயர்ந்து தேறாத்
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி,
நாயகன் உரையான் வாயால்; நான் இது பகர்வென்என்னா,
தாய் என நினைவான் முன்னே கூற்று எனத் தமியள் வந்தாள்.

தமியள்- நிகரற்ற
அன்பு பொழியும் தாய் என்று கருதுபவன் முன்னே துன்பம் தரும்
எமன் போல வந்தாள் கைகேயி.நாயகன் உரையான் வாயால்.
இராமனுக்கு நன்மை பயப்பனவற்றையே சொல்லிப் பழகியவாய் என்று அறிவித்தற்கு கூறினார். ”இது என்றது. அவள் பெற்ற இருவரங்களைத் தெரிவித்தலைச் சுட்டியது.

வந்தவள் தன்னைச் சென்னி மண் உற வணங்கி, வாசச்
சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து, மற்றைச்
சுந்தரத் தடக் கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்-
அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான்
மாலைப்பொழுதில் வந்து சேர்ந்த  தாய்ப்பசுவைக் கண்ட பசுவின்
கன்றைப் போன்ற இராபிரான்  தன் முன்னே வந்த அக்கைகேயியை நெற்றி தரையில் பொருந்த விழுந்து வணங்கி மணம் வீசுவதும் சிந்தூரத்தையும் பவளத்தையும் போன்ற சிவந்த வாயை  சிவந்த (வலக்) கையால் பொத்திக் கொண்டு மற்றொன்றாகிய அழகுபொருந்திய பெரிய இடக் கையானது ஆடையை மடக்கிக்கொள்ள வணங்கி நின்றான். இப்பாட்டு இராமபிரானுடைய அடக்கத்தைக் காட்டுகிறது. அடக்கம் என்பது உயர்ந்தோர்முன்பணிந்த மொழியும், தணிந்த நடையும், தாளை மடக்கலும், வாய் புதைத்தலும், தலைதாழ்த்திநிற்றலும் கொண்டு அடங்கியொழுகுதலாம். இராமபிரான் அடக்கத்திற்கு விளக்கம் தருவதுபோல நிற்றல் போற்றி மகிழத்தக்கது.

நின்றவன்தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர்இன்றிக் கொடுமை பூண்டாள்,
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின், ஆகும்:
ஒன்று உனக்கு உந்தை, மைந்த! உரைப்பது ஒர் உரை உண்டுஎன்றாள்
இரும்பினால் ஆகிய மனத்தோடு உயிர்களைக் கொன்று திரியும் எமன் என்னும் பெயர்மட்டும் இல்லாமல் வனுடைய கொடுந்தன்மையை மேற்கொண்டவளாகிய கைகேயிமகனே உன் தந்தை உனக்குச் சொல்வதாகிய சொல் ஒன்று உள்ளது. ப்பொழுது எனக்கு (உன்னிடம் அதைச்)சொல்வது பொருத்தமானது என்று நீ கருதினால் நான் அதனைத்தெரிவிக்கலாம் என்றாள்.

கைகேயி தான் சொல்லப்போவது இன்னாத சொல்லாதலின் அதனை விரையக் கூறாது, இராமனுடைய இசைவு பெற்றுத் தெரிவிக்க எண்ணி நயமாகப் பேசுகிறாள். இது கைகேயியின் வஞ்சக மனத்தைக்காட்டுகிறது

எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல்,
உய்ந்தனென் அடியேன்; என்னின் பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே; தலைநின்றேன்; பணிமின்என்றான்.
என் தந்தையாரே கட்டளையி (அதனை) நீரே தெரிவிக்க இசைவதானால்;
நான் ஈடேறிவிட்டேன்  என்னைச் காட்டிலும் (மேன்மைஅடையும்படி) பிறந்தவர்
வேறொருவர் இருக்கின்றாரோ? (இல்லை);என் முன்னைத் தவத்தால் உண்டாகிய பயன்

வந்துவிட்டது  இதனினும் சிறந்ததாக வரக்கூடிய நற்பயன் பிறிதொன்று உள்ளதோ? (இல்லை); எனக்கு நன்மையானவற்றைச் செய்யும் தகப்பனும், இனிமையானவற்றைச் செய்யும் தாயும் நீரே ஆவீர்  நீர்சொல்லப்போவதைத் தலைமேற் கொண்டு நின்றேன் கட்டளையிடுங்கள்.


 ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி
,
ஏழ் - இரண்டு ஆண்டின் வாஎன்று, இயம்பினன் அரசன்என்றாள். இது, கைகேயியின் மனத்தையும் அவள் பேச்சின் நயத்தையும் காட்டுகிறது. பரதனே என்பதில்உள்ள பிரிநிலை ஏகாரம் அவள் ஆசையைக் காட்டுகிறது. தாழ்இருஞ் சடை தாங்குதல், தவம்

மேற்கொள்ளல், கானம் சேர்தல், புண்ணியத் துறைகள் ஆடுதல் முதலிய நற்பயன்கள் கிட்டவே அரசன் இவ்வாறு பணித்தான் என்று கூறித் தான் வரங்கேட்டதை மறைத்தலின் அவளது வஞ்சகம்தெரிகிறது. பதினான்கு ஆண்டுகள் என்னாதுஏழ் இரண்டு ஆண்டுஎன்று சுருக்கிக் கூறுதல் அவளது கரவுப் பேச்சைப் புலப்படுத்துகிறது. தான் பழியற்றவள் என்பதைக் காட்டுவதற்காக இயம்பினன்அரசன்என்றாள். மேலும் தந்தை

இப் பொழுது, எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தா மரையினை வென்றது அம்மா!
இராமனுடைய முகத்திலே ஏமாற்றமோ வருத்தமோ சிறிதும் இலலை. தந்தை அரசு பதவி ஏற்றுக் கொள் எனும் போது எப்படி, மகிழ்ச்சியோ சந்தோஷமோ இல்லாமல் அரசன் கட்டளை என்று நினைத்தானோ, இப்போதும் அப்படியே இருக்கின்றான். இரமனுடைய முகத்தை செந்தாமரை மலருக்கு நிறையவிடங்களில் கவி ஒப்பிட்டுக் கூறுகின்றான். இவ்விடத்தில்  கைகேயின் பேச்சைக் கேட்பதற்கும் கேட்ட பின்னும் ஒரே போலத்தான் இருந்தது. அவ்வாசகம் உணரக்கேட்டபோது அப்பொழுது அலர்ந்த செந்தாமரை மலரையும் வென்றதம்மா என்னும் அற்புதமான வரிகளை பிரயோகிகின்றான் கவி. பெரும்பாலான உரைகளில் ”அன்று மலர்ந்த செந்தாமரை போலிருந்ததம்மா” என்றுதான் உரை எழுதுகின்றார்கள். அப்படியெனில் கவி பேசாமல் அன்று மலர்ந்த செந்தாமரை என்றே கூறியிருக்கலாமே? ஏன் கூறவில்லை? மலர்தல் ஒரு தொடர் நிகழ்வு. அலர்தல் அந்நிகழ்வின் முடிவு பெற்ற நிலை, என்பதுதான் காரணம்.

 இராமனுடைய முகமோ எப்போதும் செந்தாமரையை போலவிருக்கும். கைகேயி வாசகம் கூறுவதற்கு முன்பு  ஓவ்வொரு இதழாக அவிழ்ந்து முகத்தாமரை மலரத் தொடங்கியது. அது உரைக் கேட்டபின்னும் தொடர்கின்றது. அவ்வாசகத்தை அவன் உள் வாங்கி உணர, எப்படியும் பல நொடிகளோ இல்லை சில நிமிஷங்களோ ஆகும். அதுவரையில் மலர்தல் என்ற தொடர் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. கைகேயின் உரையை உணர்ந்த பின் அந்நிகழ்வு முழுமையடைந்து முகத்தாமரை மலர்ந்து முடித்து விட்டது என்பதை குறிக்கவே அவன் அலர் என்ற வார்த்தையை பயன் படுத்தியிருக்க வேண்டும். (நண்பர் குருநாதன் அவர்கள் ”அவன் அலர்ந்த என்ற வார்த்தைக்கு மலர்ந்த என்ற பொருளையே பலர் குறிக்கின்றார். ஆனால் இது இரண்டுமே வேறு. மலர்தல் .  ஒரு தொடர் நிகழ்வு. அலர்தல் என்பது இந்த தெடர் நிகழ்ச்சி முழுமையடைந்தை மலர்ந்த நிற்கும் தாமரயைக் குறிக்கும் .(அலர்- fully blown) ” என்று இலக்கிய வட்டத்தில் கூறினார். அதனடிப்படையில் நான் என் சிற்றரிவிற்கு ஏற்ப விரித்து கொண்டது.       

 மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப் பணி தலைமேல் கொண்டேன்;
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.
அரசன் கட்டளை அன்று என்றாலும் நுமது கட்டளையை யான்
செய்யமாட்டேன் என்பேனோ?; என் தம்பி பரதன் அடைந்த பேறு நான் அடைந்தது அன்றோ? இதற்குப் புறம்பான நன்மை வேறு யாது?
இக்கட்டளையைத் தலையின்மேல் ஏற்றுக்கொண்டேன் மின்னல் போல வெயிலொளி வீசும்காட்டிற்கு இப்பொழுதே போகின்றேன் நும்மிடம் விடையும் பெற்றுக்கொண்டேன்.

இவன் உடனேயே கிளம்பி தாய் கௌசல்யையின் மாளிகையடைந்தான். கைகேயியின் மிகத் திறமையான வாக்கு சாதூர்யத்தைப் பார்தோம். இவள் வளர்த்த இராமன் மட்டும் இவளுக்கு சற்றும் குறைந்து விடுவானா வாக்கு சாதூர்யத்தில்?



                                                                                                                                                                            தொடரும்

Friday, December 7, 2012

கூத்து


என்னுடைய சிறுவயதில் சிறு நகரங்களில் மட்டுமே வாழ்ந்திருக்கின்றேன். கிராமம் என்றும் சொல்ல முடியாது பெரிய டவுன் என்றும் சொல்ல முடியாது.  நான் இருந்த ஊர்களில் மாவட்ட தலைநகரங்கள் என்றால் அது திருச்சி, வேலூர் மற்றும் கடலூர்தான். மீதி எல்லாமே தாலுக்கா ஹெட்குவார்ட்டர்ஸ். பெரும் கோவில் சார்ந்த ஊர் திருவண்ணாமலை. அங்கு நடக்கும் தீபப் பெருவிழா, நவராத்திரி திருவிழா, திரூஊடல் மற்றும் அருணகிரி நாதர் திருவிழா என்று எல்லா விழாக்களும் பெரும்பான்மையாக பத்து நாட்களுக்கு குறையாமல் நடக்கும். அச்சமயம் பட்டி மன்றம், பெரிய இசை கலைஞர்களின் இசை மற்றும் பாட்டு கச்சேரிகள், புலவர் கீரன், திரு முருக கிருபானந்த வாரியார், பால கிருஷ்ண சாஸ்திரிகள் போன்றவர்களின் உபன்யாசங்களும் கோவில் மண்டபத்தில் நடை பெறும்.
ஊரை சுற்றியிருக்கும் கிராமங்களில் திரௌபதி அம்மன் விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். கடைசியில் தீமிதி இருக்கும். அந்த பத்து நாட்களும் கரகாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை நிகழ்சிகளுடன் கூத்தும் நடைபெறும். கூத்தில் முக்கியமாக அரவான் பலி, திரௌபதி துகிலுரிதல், கீசக வதம், பீஷமர் வதம் மற்றும் துரியோதன வதம் போன்றவை இடம் பெறும். வேறு சில அம்மன் கோவில்களில் இராமயண நிகழ்சிகள் நடை பெறும். அதுவும் விடுமுறை நாட்களாக இருந்து விட்டால் நள்ளிரவு வரை நீடிக்கும்.

கூத்து நடைபெரும் இடம் கோவில் வெளித்திட்டாகவோ அறுவடை முடிந்த நிலமாகவோ இருக்கும்.. நீளமான மூங்கில் கழிகள் இரண்டு நட்டு அதில் ஆயிரம் வாட்ஸ் பல்பு லைட்டுகளைக் கட்டுவார்கள். இதை சுற்றி அரை வட்டமாக பார்வையாளர்கள் உட்காருவார்கள். கூத்திற்கு இன்றியமையாதது பின்பாட்டுக் காரர்கள். ஆண்களே பெண்களுக்கும் பின் பாட்டு பாடுவர். அவ்வபோது ராகம் போட்டு வசனங்களையும் கூறுவர். வசனங்கள் பல சமயம் பேச்சு வழக்கில் தான் இருக்கும். பாடல்கள் நாடகத் தமிழில் இருக்கும். அருமையாக கதை நிகழ்வுக்கு ஏற்ப அமைந்திருக்கும் எல்லா வரிகளிலும் மிகையுணர்ச்சி அதிகமாகவிருக்கும். இசைக்கும் கருவிகள் என்றால் பெரும்பாலும் ஆர்மோனியம் மத்தளம், ஜால்ரா ஆகியவைதான்.

நடித்து முடித்தவுடன் நடிப்பவர்கள்  டீக் குடித்து விட்டு மறுபடியும் தங்கள் காட்சி வரும் போது போய் நடித்து விட்டு வருவர். அவர்களுடைய உடையலங்காரம் பளிச்சென்ற வண்ணத்தில் தான் இருக்கும். பெரிய ஷோல்டர் பேடுடன் கூடிய கழுத்து அங்கி, பம்பரம் போன்ற பாவாடை, கலர் கலராக மணி மாலைகள், ரோஸ் பவுடர் பூசிய முகம், ஆண்களும் கண்ணுக்கு மையிட்டுக் கொண்டு, உதட்டில் சாயம் பூசிக் கொண்டு தெளிவாக இவன் நல்லவன் அல்லது கெட்டவன் என்பது போல் தான் இருக்கும். ஒவ்வொரு வேடத்திற்கும் ஒரு நிறம் இருக்கும். துரியோதனனுக்கு கருப்பு, துச்சாதனுக்கு மஞ்சள், கிருஷ்ணருக்கு பச்சை என்று, அவர்கள் உடைகளின் வண்ணம் அதற்கு இசைவாக அமையும். கடவுள் வேடமிருப்பவர்கள் விரதம் இருந்து வேடமிட்டு நடிப்பார்கள். அசைவத்தையும் தவிர்த்துவிடுவார்கள் என்பது நான் கேள்விப்பட்டது. எனக்கு இராமயணம் மாஹாபாரதம் இரண்டும் மிக அதிகமாக அறிமுகமானது தெருக்கூத்தின் மூலம் தான். பாட்டி என்ன தான் கதைகள் சொன்னாலும், நானே படித்திருந்தாலும் நிகழ் கலையாக அதை பார்க்கும் போது என் கற்பனை மேலும் விரிவடைந்தது. சித்தூருக்கு போகும் போது என்னுடய கற்பனையும் கொஞ்சம் சேர்த்து நான் பார்த்த கதைகளை ஆடி பாடி பாராட்டும் பெறுவேன்.

இந்தோனேஷியா ”பாலித்” தீவில் தினம் பல்வேறு இடங்களில் அவர்களுடைய நடனம் நடைபெறுகின்றது. இந்த நாட்டிய நடனங்கள் எல்லாமே நம் ஊரில் உள்ள கூத்துடன் நெருங்கியத் தொடர்புடையவையாகாவே எனக்கு பட்டது. என் மனைவியோ “ நம்ம ஊர் தெருக்கூத்தே தான் இது.  நம்ம ஊரிலே இதையெல்லாம் காசு கொடுத்து பார்ப்போமா. இங்கு வந்து இவ்வளவு காசை தண்டம் பண்ணி பாக்கறோம்” என்று அலுத்துக் கொண்டாள். நம்மூரில் சினிமா மற்றும் டீவியின் தாக்கத்தால் தேங்கி அழிந்து போகும் நிலைக்கு வந்துவிட்டது வேதனையளிக்கின்றது. மிகவும் நுணுக்கமான இந்த கலை.யில் இன்றைக்குக் கூட கூத்து “ வாத்தியாரை” வெற்றிலை வாழைப் பழம் மற்றும் தேங்காய் வைத்து அழைத்து நிச்சயம் பண்ணும் வழக்கம் இருக்கின்றது. அதை பழமை என்று ஒதுக்கிவிடும் இளைஞர்களையும், அவர்களை மரியாதை இல்லாமல் நடத்தும் அவலத்தையும் நம் பாராம்பரியத்தை புரிந்து கொள்வதிலோ அல்லது பராமரிப்பதிலோ சிறிதும் அக்கரையில்லாத சமூக மாற்றத்திற்கும் என்ன காரணம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அரசாங்கம் இந்த கலைகளை தினமும் நடக்கும் நிகழ் கலையாகவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையாகவும் அதே சமயம் வருவாயையும் பெருக்கும் விதமாகவும் நடத்தலாம். ஞானமுள்ள சிலர் இருக்கும் போதே அவரகளுக்கும் நிரந்தர மற்றும் நல்ல வருமானம் உள்ள தொழிலாகவும் இதை கட்டாயம் மாற்ற முடியும்.

பாலியில்” நடைபெறும்  நாட்டித்தில் ஒன்று “ரங்குடா” எனும் பாதி நாய் பாதி சிங்கம் போன்ற உருவத்துடன் இருக்கும், குறும்புடன் கூடிய ஆனால் நல்லதை மட்டுமே மனிதர்களுக்கு நினைக்கும் புராண விலங்கிற்கும் ”ப்ரோங்” எனப்படும் விதவை சூனியக்காரிக்கும் நடைபெறும் போராட்டமாகும். கடைசியில் யமனின் உதவியுடன் ரங்குடா போராட்டத்தில் வென்று பரோங்கை துரத்திவிடும். இதில் ரங்குடா பாத்திரத்தின் அந்த உருவத்தை இருவர் இயக்குவர்.
 

மற்றொன்று “உபூட்” பகுதியில் குரங்கு கோவிலில் நடைபெறும் ”கேச்சாக்” என்பது. இதில் சீதை பொன் மானை வேண்டும் என்று கேட்பதிலிருந்து சீதையின் தீக்குளிப்பு வரை நடந்த நிகழ்ச்சிகளை சொல்வது. எந்த விதமான வாத்தியக் கருவிகளும் கிடையாது. அதற்கென பாரம்பரிய பயிற்சி பெற்றவர்கள் வாயினாலும் கையினால் மார்பு தோள், தொடைகளைத் தட்டுவதனாலெழும்  ஓசைகளே பிண்ணனியிசையாகும். நம் ஊரில் உள்ளதை போலவேத்தான் அவர்களின் உடைகளும், கால் கை அங்க அசைவுகளும். கை முத்திரைகளும் தெருக்கூத்துடன் நெருங்கிய தெடர்புடையது. இதற்கு பின்படுதாவாகவிருப்பது பச்சையும் நீலமும் கலந்த கலரில் இருக்கும் இந்தியப் பெருங்கடல். சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு ஆரம்பித்து சூரியஸ்தமனத்திற்கு பிறகு முடிவடைகின்றது. நடன அசைவுகளில் பயங்கர நிதானமும் மெண்மையும் இருக்கும். அரங்கத்தில் 60 70 பேர் ஒரே மாதிரி கீழ்வஸ்திரம் மட்டும் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்து அரை வட்டமாக அமர்கின்றனர். பின்னர் ஒரு பெரிய விளக்கை ஏற்றி வைக்க ஒரு பூசாரி வந்து நான்கு திசைகளுக்கும் நாட்டியத்தில் நடிப்பவர்களுக்கும் தண்ணீர் தெளித்து ஆசிர்வதித்து அவர்கள் பாலி பாஷையில் கதை அறிமுகம் செய்விக்கின்றார். சீதை வருவதிலிருந்து ராம லக்‌ஷ்மனர் வருகை, ஒரு பெண் பெண்மானாக ஒடி வந்து சீதை அதை தனக்கு வேண்டும் என்பதிலிருந்து நாட்டியம் தொடங்குகின்றது. கடைசியில் சீதையின் அக்னி பிரவேசம் நடைபெறும் போது பெரிய தீச்சுவாலை பற்றி எறியவிடப்பட்டு அதை அக்னி பகவான் வந்து அணைப்பதுடன் நடனம் முடிவுறுகின்றது. இது நடைபெரும் இடம் கடல் மட்டத்தில் இருந்து 500 600 அடி உயரத்தில் செங்குத்தான மலையின் மீது ஏறியதில் களைத்திருந்த  மேறிகிலிருந்து முகத்தில்அடித்த வெய்யில் உடம்பையும் சேர்த்தே தீய்த்தது. அரை மணி நேரம் கழிந்தபின்  கடல் காற்றின் குளுமையால் வெக்கை மறைந்தது. கேசாக் நாட்டிய கோரஸ்காரர்கள் எழுப்பும் சத்தம் பாறைகளில் மோதும் கடல் அலைககளின் சத்தத்தையும் அடக்கிக் கொண்டிருந்தது. செக்க சிவந்திருந்த வானம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரஞ்சு கலரை இழந்து கரு நீலமாக மாறிக் கொண்டிருந்தது. கடைசியில் ஒரே ஒரு கீற்று போல் இருந்த ஆரஞ்சு கலர் மறைந்து மின்வெட்டால் இருளில் மிதக்கும் தமிழகத்தின் சிற்றூர்கள் போலானது. ஜெனெரேட்டர் வைத்திருக்கும் பாக்கியவான்களின் கடைகளில் எரியும் விளக்கு போல், வானத்தில் நட்சத்திரங்கள் மினுமினுத்தன.

தமிழகத்தில் பழங்கலைகளை வளர்த்தெடுக்கும் முயற்ச்சியாக “சங்கமம்” என்ற நிகழ்சி ”கனிமொழியின்” முயற்ச்சியால் கடந்த திமுக ஆட்சியாளர்களின் முழு ஆதரவுடன், பொங்கல் விடுமுறை சமயத்தில் நடைப்பெற்றது. பரவலாக வரவேற்பும் பெற்றது. ஜெயலலிதாவின் காழ்ப்புனர்ச்சிகாரனமாக ”சங்கமம்” அஸ்தமித்தது. சங்கமத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் குறைகளை களைந்து, வளர்த்தெடுப்பதை விடுத்து, ஒரேயடியாக ஒழித்துவிட்ட ஜெயாவின் அராஜகப் போக்கை சங்கம் வளர்த்த தமிழகம் மட்டுமின்றி, நிகழ்கலைகளையே மூச்சாகக் கொண்டு வாழும் கலைஞர்களும், ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். அவர்களின் சாபம் ஒரு போதும் வீணாவதில்லை.  

மாணவர்களை மார்க் வாங்கும் மெஷின்களாக மாற்றும் பள்ளிகள், அவர்களுக்கு நுண்கலைகளில் ஏன் பயிற்சியளிப்பதில்லை?. நம் பாரம்பரிய சங்கீதத்தை, இசையை ரசிக்கும் ரசனையை ஏன் அளிப்பதில்லை.? நாடகத்தை அதன் பல்வேறு கூறுகளை ஏன் அறிமுகம் செய்து அவர்களின் ரசனை தளத்தை உயர்த்துவதில்லை?. சினிமாவை இரசிப்பதையும் கூட இன்றைய சூழ்நிலையில் இருக்கும் தொழில் நுட்பம் காரணமாக பரவலாக அறிமுகப்படுத்த முடியும் என்ற போதும் ஏன் செய்வதில்லை.? மாணவர்களை பணம் காய்ச்சி மரமாக கல்விச் சாலை நடத்துபவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் நினைப்பதுமே காரணம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. . வெளிநாடுகளில் அதுவும் சர்வதேச பள்ளிகளில் மாணவர்களுக்கு மிகவும் சுதந்திரமாகவும் கல்வியை விரும்பி கற்பவர்களாகவும், அவர்களுக்கு இசையிலும் நாடகத்திலும் ரசனையை சிறு வயது முதற்கொன்டு வளர்ப்பதைப் பார்கின்றேன்.

ஏன்? நான் ”டேனிஷ் மிழனில்” படிக்கும் போது நெசவிலிருந்து, நாடகம், ஓவியம் மற்றும் சங்கீதம் (அதுவும் கர்நாடக சங்கீதம்) மட்டுமின்றி நீதிபோதனை வகுப்புகளும் இருந்தது, எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயம் பெரிய மைதானம் இருந்தது. கிரிக்கெட், வாலிபால் புட்பால் போன்ற விளையாட்டுகள் விளையாட எல்லா வசதிகளும் பள்ளியில் இருந்தது. வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் எல்லா வகுப்பு மாணவர்களும் விளையாட வழியும் இருந்தது. ஏன் எதற்காக இது மாறியது?. இன்றைக்கு இது தான் நியதி., எனக்கு பிடிக்கின்றதோ இல்லையோ நான் இந்த வேடத்தைதான் அணிய வேண்டும் என்று தள்ள படுகின்றனர். எல்லோருமே யாராலோ மனமாற்றத்திற்கு உள்ளாகி நம் சுய புத்தியை தொலைத்து, வாழ்க்கையையும் தொலைக்கின்றோம்.

“அரசரில் பிறந்து அரசரில் வளர்ந்து பின் அரசரில் புகுந்து பேரரசியானவள்” கைகேயி.. அவள் வெறும் ஒரு வேலைக்காரி சொன்னதால் மட்டும் மனம் மாறிவிடக்கூடியவளா? கூனியும் லேசுபட்டவள் இல்லை. அவளுடைய வாதங்களை, அவள் சொன்ன வரிசையில் வைத்துப் பார்த்தால் ஒரு பெரிய மனவியல் நிபுணராகவே காட்சியளிக்கின்றாள். பெரும்பாலும் வீட்டில் நடக்கும் விஷயங்கள் மொத்தம் வெளியே போவதும் அதே போல் சில வீடுகளில் வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகள் அல்லது வயதானவர்களுக்கு உதவிக்கு இருப்பவர்கள் ஆட்டுவிக்கின்றபடி ஆடும் எஜமானர்களும் உண்டு. சசிகலா ஜெயலலிதாவை ஆட்டுவிப்பது போல. சிலவருடங்களுக்கு முன்னால் பெங்களூரில் வசித்து வந்த ரஷ்யாவை சேர்ந்த ஓவியரின் மனைவி தேவிகா ராணி அவர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் அவள் வீட்டில் வசித்து வந்த உதவியாளர் ஒருவரினால் சுருட்டப்படது. ஆயினும் மிக பெரிய மனிதர்கள் அந்த டிரஸ்டில் இருந்த்தால் மீட்கப்பட்டது.




கூனி கைகேயிடம் முதலில் கேடு காலம் வரும் போது அதை அறியாமல் உறங்கி கொண்டிருக்கின்றாயே என்றாள்; அவள் கேடு காலம் என்றது இராமனுக்கு பட்டாபிஷேகம் என்பதையே. கைகேயியோ “ இராமனை பெற்ற எனக்கு என்ன தீங்கு வர முடியும்”? என்றவுடன் இராமனை குறை கூறி காரியம் நடவாது என்று முடிவுக்கு வந்தாள்.

தசரதன் ஏன் பரதனை தூரதேசத்திற்கு அனுப்பினான் என்பது எனக்கு இன்று புரிந்தது என்று தசரதனை சூழ்ச்சிக்காரனாக சித்தரித்தாள். அதுவும் எடு படவில்லை. பெற்ற பிள்ளை பாசத்தை தூண்டுகின்றாள்;  ”நீ பரதனை பெற்று என்ன பயன்? அசராட்சியில்லாமல் அவன் வாழ்வதைக் காட்டிலும் இறந்து போகலாம்” என்று. கைகேயி அதற்கும் மசியாமல் “மயில் முறை குல முறைமையைப் பற்றி பேச அரம்பித்து விடுகின்றாள்.

மூத்தவனுக்கு பட்டம் என்பது முறை. முறை தவறினால் பழி நேரிடும். மூத்தவன் என்பதை மந்தரை திருத்தி, வயதில் மூத்தவர் என்றால் தசரதன் உயிரோடு இருக்கும் போதே இளையவனான் இராமனுக்கு முடிசூட்டும் போது பரதனுக்கு முடிசூட்டுவதில் என்ன முறை திரும்பிவிடும்? என்று கேட்கவும் கைகேயின் மனம் தடுமாறியது.

கூனி சளைக்காமல் சக்களத்தி சண்டையை தூண்ட  முயற்சிக்கின்றாள். ”கௌசல்யைக்கு வாழ்வு வரும் நீ தாழ்ந்து விடுவாய். உன்னை அண்டும் உன் உறவினர்களுக்குக் கூட நீ ஒன்றும் செய்ய முடியாது. நீ கோசலையிடம் சென்று இரந்து வாங்க வேண்டும்” என்கின்றால். இதிலும் அவள் மனம் மாறவில்லை.

கடைசியாக பிரம்மாஸ்திரத்தை ஏவுகின்றாள். உன் தந்தைக்கும் இராமனின் மாமானாரான ஜனகனுக்கும் ஏற்கெனெவே பகையுண்டு. தசரதன் உன் கணவன் என்பதினால் ஜனகன் பேசாமலிருந்தான். இராமன் அரசனாகிவிட்டல் அவன் உன் தந்தைக்கு உதவமாட்டான். உன் தந்தை மற்றும் குடும்பத்தின் கதி அதோ கதி” என்றவுடன் கைகேயின் மனதில் மாற்றம் வருகின்றது...

போரிலே ஈடுபட்டு லாவகமாக தசரதனின் உயிரைக் காப்பாற்றக் கூடிய அறிவாளியானவளான கைகேயி இப்படி பட்டவர்தனமாக திரிக்கப்பட்ட வாதத்திலா மனம் மாறுவாள். பிறந்த வீட்டிலுள்ளவர்களுக்கு புகுந்த வீட்டினரால் தீங்கு வரும் எனும் போது எந்த பெண்ணும் அதை எப்பாடுபட்டாவது தடுக்க முயல்வது முறை. அதிலும், சாதராண இடத்தில் பிறந்து, உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்ட பெண்களுக்கு ஒரு வகையான தாழ்மையுணர்ச்சி இருக்கும். அதை யாரேனும் சுட்டிக் காட்டிவிட்டால், காலம் கனிந்தவுடன், புலி போல் பாய்ந்துவிடுவார்கள்

கேகேயன் ஒரு சிற்றரசன் மட்டுமே. ஆனால் தசரதன் சக்கரவர்த்தி.(இதிலும் கூட வேறு சில புராணக்கதைகளின் படி தசரதன் காசியருகில் இருந்த ஒரு சிறு தேசத்திற்கு அதிபதி. அவன் கோசலையிடம் மனம் பறிகொடுத்து, அவளை மன்முடித்து, ஆண்வாரிசில்லாத கோசல தேசத்தையடைந்து அதனால் தான் அவன் சக்கரவர்த்தியானான்.) கேகேயனை விட ஜனகனே கூட பெரிய அரசன் தான். அதைத்தான்  மிக அழகாக சரியான நேரத்தில் கூனி ஞாபகப்படுத்தினாள்.  

கைகேயி கூனியினால் மனம் திரிந்து செய்த தவறு  மன்னிக்கப்பட வேண்டியது.  இவர்கள் பொதுவாக தீங்கிழைப்பவர்கள் அல்லர் என்றாலும் சூழிநிலை காரணமாக தீங்கிழைத்துவிடுகின்றனர். இதைச் சுட்டி காட்ட வேண்டிய பொறுப்பும் கவிஞனுக்கு இருக்கின்றது. கூனியை கூற “”கொடுமனக் கூனி” ”மூன்றுலகினுக்கும் ஒர் இறுதி மூட்டுவாள்” ”காலக் கோளனாள்” “வெவ்விடம் அனையவள்” ”சூழ்ந்த தீவனை” ”வேதனைக் கூனி” ”தீய மந்தரை” என்று பல்வாறாக அர்ச்சனை செய்கின்றான்.

அவனே கைகேயியை குறிக்கும் போதோ ”தெய்வக்கற்பினாள்” ”ஆழந்த பேரன்பினாள்” கேகேயர்கிறை திருமகள்” ”தேவி” என்ற அடைமொழிகள் கொடுக்கின்றான். அவன் அவளை அறிமுகபடுத்தும் போது அவள் உறங்கி கொண்டிருக்கின்றாள். சாதராணமாக விழித்திருக்கும் போது நம் அறிவின் துணை கொண்டு நாம் தீய சிந்தனைகளை அடக்கி, நம் முகம் எனும் கண்ணாடி அச்சிந்தனையை காட் டாமல் மறைக்கமுடியும் ஆனால் உறங்கும் போது அவ்வாறு செய்யவியலாது. எப்பேற்பட்ட உலக அழகியாகவேயிருந்தாலும் உறங்கும் போது அழகுடன் விளங்க மாட்டார்கள்.

இந்நிலைக்கு மாறக யாரவது உறங்கும் நிலையில் அழகாகாத் தோன்றினால் அவர் மிகசிறந்த எண்ணமும் பண்பும் உடையவர் என்பதேயாகும். குழந்தைகள் உறங்கும் போதும் அதே பொலிவுடன் விளங்குவதையும் பார்க்கலாம்.

கம்பன் அவளை அறிமுகபடுத்தும் போதே
நாற்கடல் படுமணி நளினம் பூத்தது ஓர்
பார்கடல் படுதிரை பவளவல்லியே
போர்க்கை கண் அருளி – அருள் பொழியப் பொங்கு அணை
மேற்கடந்தாள்  தனி விரைவில் எய்தினாள்

கடைக் கண்களில் அருள் வழிந்து ஓடியது அவள் உறங்கும் போதே என்றால், அவள் விழித்திருக்கும் போது எவ்வளவு அருளுடன் விளங்குவாள் என்பதை கவி நம் கற்பனைக்கே விட்டு விடுகின்றான். தனக்கு சம்பந்தமேயில்லாதவர்களிடத்தும் அருளுடையவளாக கைகேயி இருப்பதால் தான் “அளி” என்ற சொல்லை கம்பன் கூறுகின்றான். அப்படிப் பட்டவளே மனம்திரிந்து கல்னெஞ்சத்தவளாகி தீங்கிழைத்தாலும் அதற்குக் காரணம் “அரக்கர்தம் பாவமும் நல் அந்தணர் தம் தவமும்”. அவள் மனம் திரிந்தது என்கின்றார் கவி. அறமும் பாவமும் எப்போதும் ஒன்றாக சேராதவை. அவையே ஒன்றாக சேரும் போது கைகேயினால் என்ன செய்யமுடியும்.? (இது அ.ச ஞா 1957 ஆம் ஆண்டில் எழுதிய கேகேயன் மடந்தை என்ற கட்டுரையை அடியொட்டியது.)

இதே அ ச ஞா அவர்களே 40 ஆண்டுகள் கழித்து மறுபடியும் மரபு முறையை விட்டு வாசிக்கும் போது கைகேயி முற்றிலும் குற்றமற்றவளாக தோன்றுகின்றாள் என்கின்றார், “நாடக மயில்” என்று அவர் எழுதிய கட்டுரையில். பின்வருவன அக்கட்டுரையை அடியொட்டி எழுதப் பட்டது.

கம்பன் இரு பெண்களை மயிலுக்கு ஒப்பிடுகின்றான். ஒன்று மலைகுல மயில். இதை மலைசூழந்த கிட்கிந்தையில் வாழும் வாலியின் மனைவிக்கு ஒப்பிடுவது சாலப் பொருத்தமே. இன்னொன்று “ நாடக மயில்”. இதை உவமையாக கைகேயிக்கு கூறுகின்றான். மந்தரை போன பின்னும் தசரதன் நள்ளிரவு வருவதற்குமிடையில் அவள் தரையில் கிடந்ததை

நவ்வி வீழ்ந்தென, நாடக மயில்      துயின்றென்ன,
கவ்வை கூர்தரச் சனகி ஆம்      கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்என்று அயோத்தி வந்து      அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள்,      கேகயன் தனையை.
ஆடுமயில் என்றோ நாட்டிய மயில் என்றோ கூறியிருந்தால் அதில் புதுமையில்லை. ஆனால் ஒரு அதி முக்கியமான கட்டத்தில் கம்பன் ஏன் அதிமுக்கியமான ஒருபாத்திரத்தை “நாடகமயில் என்று குறிப்பிடவேண்டும்” நாடகம் நடிப்பவர்கள் ”தாம் யார் என்பதை மறைத்துக் கொண்டு அந்த பாத்திரத்திற்குறிய வேடத்தை புனைந்து நடித்தல் வேண்டும். மயில் தன்னுடைய இயல்பான மென்மை. நளினம், அழகு ஆகியவற்றை மறைத்துக் கொண்டு நாடகத்தில் நடிப்பதற்காகாக ஏதோ ஒரு வேடத்தைப் புனைந்துக் கொண்டு நடிக்கத் தொடங்கிவிட்டது என்ற பொருளை பெற வைக்கின்றான். எனவே எந்த பாத்திரத்தை நாடக மயில் என்று உருவகித்தானோ அந்த பாத்திரம் தன் சுயத்தை மறைத்துக் கொண்டு. ஏற்றுக் கொண்ட ஏதோ ஒரு பாத்திரத்தின் வேடத்தை நடிக்கத் தொடங்கிவிட்டது.

அதே போல் கைகேயியை பெண் மானாக உருவகிப்பதும் நோக்கத் தக்கது. மான் இயல்பாகவே மருண்ட பார்வையும் குறிக்கோள் அற்ற முறையில் இங்கும் அங்கும் ஒடித்திரியும் இயல்புடையது. மருண்ட பார்வை அச்சத்தின் காரணமாகவே வருகின்றது,. இன்னது செய்வது என்ற முடிவுக்கு உறுதியுடன் வர முடியாமையால் இங்கும் அங்குமாக ஓடுகின்ற இயல்பைப் பெற்றுள்ளது. இதே குணாதிசயத்தை கைகேயிற்கு ஏற்றிப் பார்க்கலாம்.

இதுவரை கைகேயியின் வாழ்க்கை தெளிந்த அமைதியான நீரோட்டம் போல் சென்று கொண்டிருந்தது. மன்னர் மன்னனாகிய தசரதன் கணவன். புவிக்கெல்லாம் வேதமே யான இராமன் மைந்தன். அவள் வாழ்க்கையில் மருட்சிக்கேயிடமில்லை. ஆனால் இப்போது ஒரு தலை கீழ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கணவனின் விருப்பதிற்கு மாறாக நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பிரியமான மைந்தன் இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இவை இரண்டையும் செய்வது சரியா தவறா என்ற எண்ணம் மனப்போராட்டமாக அமைந்து விடுகின்றது. இதுவே, உறங்கும் போது கூட கடைக்கண்ணில் அருள் வழியும் அதே கண்களில் மருட்சி தோன்ற காரணம். தான் மேற்கொண்ட முடிவினால் யார் யாருக்கு என்ன விளையுமோ என்ற அச்சம் காரணமாக அவள் கண்ணில் மருட்சி தோன்றலாயிற்று. அவளுடைய மனப்போராட்டத்தையும் கண்ணிலுள்ள மருட்சியையும் விரிவாக கூறாமல் ”நவ்வி வீழ்ந்தென” என்ற ஒரு சொல் மூலமாக கவிஞன் கூறிவிடுகின்றான்.

இந்த போராட்டம் கூனி போன பிறகிலிருந்து தசரதன் வருவதற்கு சற்று முன் வரையிலிருந்தது. இதன் முடிவில் கைகேயி ஒரு முடிவிற்கு வந்து விடுகின்றாள். அவளுடைய உடல வாகு, மென்மைதன்மை, அருள் நிரம்பிய மனம் அனைத்தும் அவளுடைய இயல்பான தன்மைகளாகும். அவள் முடிவை நிறைவேற்ற வேண்டுமானால். வலிமை பொருந்திய உடம், கருமமே கண்ணாகியிருக்கும் உணர்ச்சியற்ற வரண்ட உள்ளமும் கொண்ட பாத்திரமாக எது நிகழந்தாலும் மாறி, நடிக்க வேண்டும். மயில் போன்ற சாயலையுடைய கைகேயி இந்த வன்கண்மையுடை பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும். இதைத் தான் கவி “ நாடக மயில் என்று குறிப்பிடுகின்றான்.

அப்படியானால் நான்காம் அடியிலுள்ள மூதேவி என்று அவளைக் குறிப்பதேன்? அவளுடைய உள்ளகிடக்கை தெரிந்தவுடன் கவி கோபம் கொண்டு அவ்விதம் அவளை மூதேவி என்று ஏசினான் என்றே கேகேயன் மடந்தை கட்டுரையில் அ ச ஞா குறிப்பிட்ருந்தார். அவரே 40 ஆண்டுகள் கழித்து வேறு நோக்கில் பார்க்கும் போது அது கைகேயியைக் குறித்த சொல் அல்ல அது அவள் ஏற்றுக் கொண்ட வேடத்தைக் குறித்தது என்கின்றார். மானும் மயிலும் வேடத்தை மேற் கொண்ட வேடதாரியையும், மூதேவி என்பது ஏற்றுக் கொண்ட வேடத்தையும் குறிக்கும்.

இவ்வாறு பொருள் கொள்ள இப்பாடல் இடமளிக்குமா என்றால், வரங்கள் கேட்டு முடிந்த பின்னர் எந்த நிலையிலும் அவள் தன் மனதை மாற்றிக் கொள்ள தாயாரகவில்லை என்ற பகுதியை விளக்கவேண்டியுள்ளது. 

அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க, நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்;
இரக்கம் இன்மை அன்றோ, இன்று, இவ் உலகங்கள், இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே?
கைகேயி தனக்கு இயல்பாக உள்ள அருளை துறந்து விட்டாள். அதற்கு காரணம் அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் என்ற இரண்டு மட்டுமே அவள் இந்த வேடத்தைப் புனைய காரணமாயின என்கின்றான். வேடம் போட்டுக் கொண்ட பின் அவள் பேசிய சொற்களுக்கு அவளை குறை சொல்லி பயனில்லை. ”நல்லருள் துறந்தனள் தூ மொழி மடமான்”. என்று நம்மை எச்சரிக்கின்றான்.

அவசரப்பட்டு நல்லருள் துறந்தனள் என்ற முடிவுக்கு வர வேண்டாம் என்று. இரண்டு வரங்கள் வேண்டும் என்றதும் ஒரு வரத்தினால் பரதன் நாடாள்வதும் மற்றொன்றினால் சீதையின் கேள்வன் காடாள்வதும் மற்ற அரசர்கள், தன் பாதம் பணியும் தசரத சக்கரவர்த்தி இவள் காலில் விழுந்து கெஞ்சும் போதும் விட்டு கொடுக்காமல் பிடிவாதமாக இருப்பவளின் பேச்சு எப்படி தூமொழியாகும்? இதன் விளைவுகள் தசரதன் உயிரிழந்தான்; இவளும் விதவையானாள்; இராமன் காட்டிற்கு சென்றான்;.பரதனும் முடிசூட்டிக் கொள்ளவில்லை; இவளுக்கோ தீராத பழி நேர்ந்தது இவள் பேசிய சொற்களால் எனும் போது அவை எப்படி தூ மொழியாகும்? அவை கடுஞ்சொற்கள்தான் என்றால் கவிஞன் ஏன் தூமொழி என்று கூறவேண்டும்?

தசரதன் கைகேயியை மணக்க கேகேய மன்னனிடம் கேட்கும் போது அவன் தன் மகளின் மகன் பட்டத்திற்கு வரமுடியாது என்பதனால் மறுத்துவிடுகின்றான். தசரதன் கைகேயிற்கு பிறக்கும் மகனுக்கே அரசு முடி சூட்டுவேன் என்று திருமணவாக்குறுதியாக (கன்யா சுல்கம்) அளித்த பின் தான் திருமணம் புரிந்து கொண்டான். ஆனால் இராமன் பிறந்த தினம் முதற் கொண்டு அதை அடியோடு மறந்துவிடுகின்றான். கம்பன் இதை வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் ஒரேயடியாக இதை மறைக்கவுமில்லை. கைகேயி வேண்டுமென்றால் கன்யா சுல்கத்தை நினைவுருத்தியிருக்கலாம். அப்படி செய்தால் இவளுடைய பழி நீங்கும்; ஆனால் தசரதன் பொய்யனாகிவிடுவான். தசரதனே கூட ” உன் கழுத்தின் நாண், உன மகற்கு காப்பின் நாண் ஆம்” எனும் மாபெரும் சாபமிட்டதையுயும் கூட  பொருட்படுத்தாமல் மனதை கல்லாக்கி கொண்டு, தான் விதவை ஆவதையும் கூட பொருட்படுத்தாமல்.தன் மகனே தன்னை வெறுத்தாலும் கலங்கிடாமல் தான் ஏற்று கொண்ட வேடத்தை கன் கச்சிதமாக முடிப்பதைத்தான் “ நாடக மயில்” என்ற அடை மொழியின் மூலம் கூறுகின்றான் கவிஞன். கன்யா சுல்கத்தை பற்றி யார் யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் புரியும் படி கூறிவிட்டு வெளிப்படையாக கம்பன் கூறவில்லை. மயில் முறை குல உரிமை என்றால் தசரதன் 14 பாடல்களில் இராமனை வேண்டி வற்புறுத்த அவசியமேயில்லை. அது அவனுடைய உரிமையும் கூட.

இராமன் தாயார் கொசல்யையிடம் விடைப் பெற்றுக் கொள்ள செல்லும் போது
சிறந்த தம்பி திருவுற எந்தையை
மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின்,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? ”எந்தந்தையை மறந்தும் பொய்யிலனாக்கி” என்று சொற்றொடர் கட்டாயம் இந்த கன்யா சுல்கத்தைதான் குறிப்பிடுகின்றது” என்று ஐயுருவதற்கு வழிவகுக்கின்றது.

பரதன் ராமனை காட்டில் சந்திக்கும் போது இந்த இராஜ்ஜியம் உனது நீ வந்து ஆள வேண்டும் என்று பல பாடல்களில் வற்புறுத்தும் போது இராமன் ஒரு பாடலில்
வரன் நில் உந்தை சொல் மரவினால், உடைத்
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்,
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்,
அரசு நின்னதே; ஆள்கஎன்னவே,- 
.இது கன்யா சுல்கத்தின் போது தசரதன் கைகேயிக்கு கொடுத்த சொல் மரபினால் இப்புவி உனது அது மட்டுமில்லாமல் நீ பிறந்த போது இது உன்னுடையது ஆள்க என்ற மறை பொருளையும் கைகேயிக்கு இப்போது கொடுத்த வரத்தால் உன்னுடையது நீயே ஆள்க எனும் நேரிடைப் பொருளையும் தரும். இராஜ்ஜியத்தை திருப்பி கொடுக்க வந்த பரதன் மறு பேச்சே இல்லாமல்சரி இராஜ்ஜியம் எனது. நான் இப்போது அரசன்,. நான் உனக்கே இராஜ்ஜியத்தை தருகின்றேன் எனக் கூறுவது அவனும் கன்யா சுல்கத்தை பற்றி அறிந்திருக்கின்றான் என்பததையே உண்ர்த்துகின்றது. கன்யா சுல்கத்தை மறைத்து கைகேயி எனும் நாடக மயில் தசரதனை பழிக்கு ஆளாக்காமல் வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தவனாக செய்து விட்டாள். அதனால்தான் அவள் பேசிய மொழிகள்தூமொழிஎன்கின்றான் கவிஞன்.

வால்மீகியில் கன்யா சுல்கம் விரிவாகாவே இராமனால் பேசப்படுகின்றது. கம்பனின் காப்பியப் போக்கின் நெடுகிலும் இராமன் வனவாசம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தைப் பலருக்குச் சொல்ல வேண்டியிருக்கின்றது. கவி ஒரிடத்தைத் தவிர மீதியிடங்களில் இலக்குவன் வாயினாலேயே அதை பேசவைக்கின்றான். இராமனே சொல்வதாக காட்டப்படுவது பரத்துவாஜ முனிவரை சந்திக்கும் போது மட்டும் தான்..

ஒரு புது பார்வை என்றாலும், கம்பன் அவ்வாறு நினைத்துதான் எழுதியிருப்பானா என்பது சந்தேகமே. கூனியால் மனமாற்றம் கைகேயிக்கு ஏற்பட்டது என்பதை இராமன் பதிணாண்கு ஆண்டுகள் காட்டில் இருக்கும் போதும் மறக்கவில்லை. இராமன் சுக்ரீவனுக்கு அரசியல் நீதி பற்றிக் கூறும் போது தான் கூனியின் கூன் மேல் மண்னுருண்டை அம்பு விட்டதே தான் காட்டிற்கு வந்து பிராட்டியையும் தொலைத்து துன்புற்றதற்கு காரணம் என்று கூறி யாரையும் சிறியவர் என்று என்ன வேண்டாம் என்று அறிவுறைக் கூறுகின்றான்.  காப்பியத்தின் இறுதியில் சீதா பிராட்டியும் கூனியை எண்ணிப் பார்க்கிறாள். இராணவன் அழிவு நிகழ்கிறது. அவன் அழிந்ததும் அனுமன் சீதை உள்ள இடத்தை நோக்கி வருகிறான். அவளிடத்தில் இராமனின் வெற்றியைக் கூறி அவளை மீட்டுச் செல்ல அசோக வனத்திற்கு வருகிறான். அசோக வனத்தில் அப்போதும் அரக்கியர்கள் காவலுக்கு நிற்கின்றனர். சீதையிடம் வெற்றி வாசகத்தைச் சொன்ற அனுமன் அவளிடம் ஒரு வேண்டுகோளை வைக்கின்றான்.  இராவணனின் ஏவல்படி தினமும் சீதையைச் சொல்லாலும், செயலாலும் வருத்தி வந்த அசோகவனத்து அரக்கியரை தான் கொன்றுவி அனுமதி வேண்டும்  என்று அனுமன் கேட்க அதற்கு அவள் பதில் கூறுகின்றாள்.
யான் இழைத்த வினையின் இவ்விடர்
தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
கூனியின் கொடியர் அலரே இவர் ( மீட்சிப்படலம், 35).

ஆனாலும் இப்பார்வையில் ஒரு புதிய நயம் இருப்பதை மறுப்பதற்கில்லை.


                                                                                                                                                            தொடரும்