Saturday, December 22, 2012

பதவியேற்பு


 
மஹாபராதத்தில் பீஷ்மர், சாவை தேர்ந்தெடுக்க கூடிய வரமுடையவர், ஆதலால்.,  அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டு, தான் இறக்கும் நாளை நோக்கி நாட்களை கழித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு நாட்கள் சண்டை முடிந்து, யூதிஷ்டர் பட்டம் சூட்டிக் கொண்ட பின், பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ண பரமாத்மாவுடன் அவரைத்  தேடி வந்தார்கள். அவரும் தன் ராஜதானியான ஹஸ்தினாபுரம்இனி தர்மராஜன் ஆட்சியில் நல்வகையில் இருக்கும் என்ற நம்பிக்கையில் சந்தோஷமானார். கண்ணன் அவரை யூதிஷ்டருக்கு ராஜ நீதி மற்றும் ராஜ தர்மத்தை உபதேசிக்க வேண்ட அவர் “பரந்தாமா! உனக்குத் தெரியாத எதை நான் சொல்ல முடியும?” என்று வினவ கண்ணன் “என்னிடம் ஞானம் இருக்கின்றது. ஆனால் அனுபவமில்லை. உங்களுக்கு ஞானமும் அனுபவுமும் சேர்ந்திருக்கின்து. அதனால் நீங்கள் தான் புதிய சக்ரவர்த்திக்கு ஆசியும் அறிவுரையும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

பீஷ்மர் “தனி மனித தர்மம் மற்றும் நீதிக்கும், ராஜ தர்மத்திற்கும் நீதிக்கும் வேறுபாடு இல்லை.  நான் என் விரதத்தை தவறாக புரிந்து கொண்டு அரசனுக்குகாக நாடு என்று இருந்துவிட்டதில், அரக்கு மாளிகை, ராஜ்ஜியம் இரண்டாக பிரிக்கப்பட்டது, சூதாட்டம் மற்றும் எல்லாவற்றிக்கும் மேலாக திரௌபதியின் துகிலுரிவிற்கும் காரணாமாகி, குருக்ஷேத்திர யுத்தம் அதன் சர்வநாசத்திற்கும் பொறுப்பானேன். நீ அந்த மாதிரி எந்த சிக்கல்களிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது. நாட்டிற்காகத் தான் குடிமக்கள் என்பது போல் நாட்டிற்காதத்தான் அரசன். அரசன் என்பவன் எந்த விதத்திலும் குடிமக்களை விட மேலானவன் அல்ல. சாதாரண குடிமக்களுக்கான சட்டத்திட்டங்கள் மற்றும் நீதியும், அரசனுக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து புதிய யுகத்தை நீ அமைக்க வேண்டும்.” என்று கூறி தன் நாட்டின் வளத்திற்கு எந்த குறையுமில்லாமல் இயற்கை ஒத்துதுழைக்க வேண்டும் என்றும் வேண்டி வணங்கி, தாய் மண்ணை கிருஷணண் தலையில் இட, தன் சாவின் நேரத்தை தேர்ந்தெடுத்தார். குடிமக்கள் அன்றிலிருந்து புது யுகம் வரும், வரும் என்று நம்பிக் கொண்டேயிருக்கின்றனர். 


ஆகஸ்ட் 14 தேதி மாலை சூரியாஸ்தமனத்திற்கு பிறகு, தென்நாட்டின் மங்கள இசையான நாதஸ்வரம் முன்னால் முழங்க, டெல்லியின் மக்கள் கூட்டம் மிகுந்த நெரிசலான சாலைகளின் வழியே ஒரு ஃபோர்ட் டாக்ஸியின் ஊர்வலம் புறப்பட்டது. நூறு கெஜத்திற்கு ஒரு தரம் தார் சாலையில் அமர்ந்து நாதஸ்வர வாத்தியக்காரர் வாசிக்க, காருக்குள் அமர்ந்திருந்த இரு துறவிகள் இது எதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் நேராக பார்த்துக் கொண்டிருந்தனர். மேல் அங்கி அணியாத மார்புடன், நெற்றியில் பட்டையாக அணிந்த திருநீருடன், சடாமுடி தோளில் சரிந்து கழுத்தில் விழ, பெரிய ருத்திராட்ச மாலை அணிந்த அவர்கள் பழமையான இந்தியாவின் பிரதிநிதிகளாய் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தன்னுடையது என்று சொல்லிக் கொள்ளக் கூடிய ஏழு கணுக்களுடன் கூடிய மூங்கில் கோல்(தண்டம்), திருவோடு(உணவு சாப்பிடும் பாத்திரம்), மற்றும் மான் தோல் அவர்களுடனிருந்தது. பெண்களின் உறவையும் சகவாசத்தையும் ஒதுக்கிய அவர்கள் தூய சன்யாசிக்குறிய முறையில் பிக்‌ஷை ஏந்தி, பகல் பொழுது மட்டும் போஜனம், அதுவும் நின்று கொண்டு சாப்பிடும், கடுமையான துறவு வாழ்க்கையை மேர்கொண்டவர்கள். பெண்கள் தவறி காரின் ஜன்னல் அருகில் நின்று பார்த்தாலும் அவர்களின் பார்வையை முற்றிலுமாகத் தவிர்த்தனர்.  தினமும் காலையும் மாலையும் திருநீறணிந்து அவ்வபோது பஞ்சகவ்யம்(பசுவின் பால், தயிர், நெய், மூத்டிரம் மற்றும் சாணம் ஆகியவற்றின் கலவை) நீரை மட்டுமே உண்ணும் கடுமையான விரதம் மேற்கொண்ட தபசிகளில் ஒருவர் பெரிய வெள்ளி தாம்பாளத்தில், வெண்பட்டில் தங்கச்சரிகையுடன் கூடிய இறைவனுக்கு அணிவிக்கும் பீதாம்பரத்தை வைத்திருந்தார். மற்றவர் 5 அடி உயரமுள்ள செங்கோலையும், காவிரி நதியின் புனித நீரையும், நடராஜருக்கு படைக்கபட்ட பிரசாதத்தையும் வைத்திருந்தார்.

மெதுவாக ஊர்ந்தபடி இந்த ஊர்வலம் நெம்பர் 17 யார்க் ரோடையடைந்தது. புதிய இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் பிரதமமந்திரி, திரு. ஜவஹர்லால் நேருவுடன் அவர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்பு எப்படி ரிஷிகள் இராஜனுக்கு அதிகாரத்தையளித்தார்களோ, அவ்வகையில் இவர்களும் புதிய பாரதத்தைப் படைக்கும் நேருவுக்கு ஆசிகூற வந்திருந்தனர்.


அங்கு அவர்கள் நேருவிற்கு புனித காவிரியின் நீரைத் தெளித்து, திருநீற்றையும் குங்குமத்தையும் நெற்றியில் பூசி பீதாம்பரத்தை தோள்களில் அணிவித்து, செங்கோலை கையில் குடுத்து, தில்லையம்பதி நாதனுக்கு படைக்கப்பட்ட பொங்கல் பிரசாதத்தையும் கொடுத்து வாழ்வாங்கு வாழந்தி பாரத தேசத்தையும் உய்விக்க வேண்டும் என்று வாழ்த்தி ஆசி ங்கினர்.

பண்டிதநேரு இம்மாதிரி விஷயங்களில் சிறிதும் நம்பிக்கையற்றவர். அதுமட்டுமின்றி தன் மதசார்பின்மைக்கு எந்த விதத்திலும் மாறாக நடக்க மறுத்தவர். ஆயினும் அன்று தன் தேசம் புதிதாய் பிறக்கும் போது தன் நாட்டின் வழி வழி வந்த மரபையும் மதிக்கத் தெரிந்தவர், என்பது மட்டுமின்றி தான் வழிநடத்தப் போகும் நாட்டின் நிர்மாணத்திற்கு உதவி எந்த விதத்தில் வந்தாலும் அதை தவறவிடக்கூடாது என்ற காரணத்திற்காவும், உற்சாகமாக அவ்விழாவில் பங்கேற்றார்.

இந்திய அரசியலமைப்பு சபையின் அங்கத்தினரும் நாட்டின் முதல் ஜனாதிபதியுமான திரு. இராஜேந்திர பிரசாத் அவர்கள் வீட்டில், வேதியர்கள் வேத மந்திரங்களைச் சொல்லி முறைப்படி ஹோமம் வளர்த்தனர். அக்னிக்கும் வருணனுக்கும் மந்திரங்களை வேதியர் முறையாக முழங்க, மெத்தப் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஹோமத்தை வலம் வந்தனர். இவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் நேருஜியின் சுதந்திர இந்தியாவில் பதவியேற்கப் போகும் மந்திரிகள். வேறு ஒரு வேதியர் இவர்களின் மேல் புனித நீரைத் தெளித்தார். ஒரு பெண்மனி, செம்பு பாத்திரத்தில் மாவிலைக் கட்டியிருக்க, ஆரத்தி கழித்து திரிஷ்டி கழிய நெற்றியின் நடுவில் சிந்தூரம் அணிவித்தார். இப்படி ஆசிர்வதிக்கப்பட்ட இவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு கடமையாற்ற இந்திய அரசியமைப்பு சபைக்குள் நுழைந்தனர்.

ஆதீனம் புறப்பட்டு போன பின் நேருஜி நன்றாக்ழுவி குளித்துவிட்டு வந்தபோதிலும் நெற்றியில் குங்குமத்தின் சிகப்பு நிறம் இருந்தது. அப்போது லாகூரிலிருந்து அவருக்கு போன் வந்தது. மோசமான தகவல் தொடர்பினால் ரொம்பவே நேருஜி சத்தம் போட்டு பேசவேண்டியதாயிற்று. வந்த செய்தியோ லாகூர் பற்றியெறிந்து கொண்டிருந்ததை பற்றியது. நிலைகுலைந்து இடிந்து போய் நாற்காலியில் உட்கார்ந்தார். இன்னும் சிறிது நேரத்தில் பேசவேண்டிய உரையைகூட தயார் செய்யும் மனநிலை அவரிடமில்லை. தன் மனதில் எழுந்த உணர்சிகளையே அவர் பேசினார்.


உலகம் உறங்கும் இந்த நள்ளிரவு நேரத்தில் சுதந்திர வாழ்க்கை கண் விழிக்கிறது. சுதந்திரமும் அதிகாரமும் நம்முள் பொறுப்பு உணர்வை உருவாக்கியுள்ளன. இந்தியாவுக்குத் தொண்டாற்றுவது என்பது வறுமையில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்குத் தொண்டு செய்வதாகும். வறுமையும் அறியாமையும் பிணியும் சமத்துவம் இன்மையும் போக்கப்பட வேண்டும். அற்பமான, அழிவுக்கு வழிவகுக்கும் விமர்சனங்களில் ஈடுபடவும் ஒருவரை ஒருவர் குறை கூறவும் இது நேரமில்லை. இந்தியத் தாயின் எல்லாக் குழந்தைகளும் இன்புற்று வாழும் புனிதம் செறிந்த இருப்பிடமாக நமது நாட்டைக் கட்டமைக்கும் வேள்வியில் நாம் அனைவரும் இன்று முதல் ஈடுபட வேண்டும்.என்ற முதல் பிரதமர் நேருவின் முதல் சுதந்திர தின உரை 20ஆம் நூற்றானடின் தலை சிறந்த உரைகளில் ஒன்றானது.

எம் ஜீ ராமசந்திரன் திமுகவிலிருந்து 1972 வெளியேற்றப்பட்டபோது கடலூரில் மற்ற சில மாணவர்களுடன் “பையன் நடித்ததோ “பிள்ளையோப் பிள்ளை”. அப்பன் அடிப்பதோ கொள்ளையோ கொள்ளை” என்று ஒரு ஞாயிறு மதியம் சைக்கிளில் கத்திக் கொண்டே நண்பர்களுடன் ஊர்வலம் போனேன். எம்ஜியாருக்கு பிள்ளைகள் இல்லை; குடிப்பதில்லை; சிகெரெட் பிடிப்பதில்லை; ரிக்‌ஷாகாரர்கள் எல்லோருக்கும் ரெயின் கோட் வாங்கி கொடுத்திருக்கின்றார் என்பது போன்று பல நல்ல விஷயங்கள் அவருக்குப் பக்கபலமாகவிருந்தது. அவர் நடித்த திரைப்டங்களின் மூலமும். பாடல்களின் மூலமும், அவர் கொடை வள்ளல், பாட்டாளிகளின் தோழன் என்பது போன்ற வலிமையாக கட்டமைக்கப் பட்ட ஒரு பிம்பமும் அவருக்கு மிகவும் உதவியது. ”உலகம் சுற்றும் வாலிபன்” என்ற திரைப் படத்தைத் தயாரித்து அவர் வெளியிட மு. க. வின் அன்றைய அரசாங்கம் அறங்கேற்றிய அராஜகம், அடுத்த பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதிபடுத்தியது. எலெக்‌ஷன் போது அவர் தன் ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர்க்ளுக்கு அதிகமாக சீட் அளித்தார். இவர்கள் சாதராண பின்னணியிலிருந்து வந்தவர்கள். விழுப்புரம் எம் எல் ஏ கிருஷ்ணன் என்பவர் சோடாக்கடை வியாபாரி. கடலூரில் தி மு க விலிருந்து வந்த ரகுபதி என்பவர் எம் ஜி சக்ரபாணியை பார்த்து எப்படியோ கடலூரில் சீட் வாங்கி விட்டார், எம் ஜி யாருக்கு வேறு ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் முடியாமல் போய்விட்டது. அப்போது அவர் ரகுபதியை அழைத்து “நான் ஒரு செருப்பை நிக்க வைச்சா அது கூட ஜெயிக்கும்.” என்று சொல்லி மிரட்டியதாக வதந்தியிருந்தது.


அண்ணாசிலையருகே லட்சோபலட்சம் மக்கள் பார்வையாளாராக இருக்க எம் ஜி ஆர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். மக்களோ இவருக்கு பிள்ளயோ குட்டியோயில்லை. சினிமாவிலேயே நிறைய சம்பாதித்தவர்” என்று நம்பிக்கையிலிருந்தனர். அவரும் முதல் இரண்டு ஆண்டுகள் நிறைய செய்ய முயன்றார். லஞ்சம் வாங்குவதற்கும் பயம் வந்தது. இந்த சமயத்தில் தான் என் தந்தைக்கு வெள்ளம் மற்றும் வறட்சிப் பணிகளை செம்மையாகச் செய்ததற்காக சுதந்திர தின விழாவில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இடஒதுக்கீட்டில் ஜாதியை மட்டும் பார்க்காமல் பொருளாதார சூழ்நிலையைம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சட்டம் கொணர்ந்தார். உடனேயே தி க வும் தி முக வும் பெரும் போராட்டத்தில் அவர்களின் சுயநலம் கருதி இறங்க, அதை வாபஸ் பெறவேண்டியதாயிற்று. கருணாநிதியினால் கொண்டு வரப்படட மதுக்கடைக்களை மூட பூரண மதுவிலக்கு கொணர்ந்து அதை தீவிரமாகவும் கடைபிடித்தார். ஆனால் மதுக்கடைகளின் மூலம் பணம் சம்பாதித்து கொண்டிருந்த தி மு க வினர், போலிசைக் கைக்குள் போட்டுக் கொண்டு கள்ளச்சாரயத்தில் இறங்கினர்.  இந்திரா காந்தியுடன் கூட்டு வைத்துக் கொண்டு பாரளுமன்றத் தேர்தலில் வென்ற தி மு கவின் நிர்பந்தத்தால் ஆட்சியைக் கலைத்தார் இந்திரா காந்தி. எம் ஜி யார் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் தேர்தலை சந்திக்கவேண்டும். தேர்தல் என்றாலே பணம் என்றான பின், எம் ஜி யா ருக்கும் வேறுவழியில்லை. தி மு க வில் கொள்ளையடித்தவர்கள் எல்லோரும் மீண்டும் பணம் சம்பாதிக்க இவருடைய கட்சிக்கு வருவதையும் இவரால் தடுக்க முடியவில்லை. இவருக்கும் தி மு க விற்கும் நாளடைவில் வித்தியாசமே இல்லாமல் போய்விட்டது. இவர் முதல்வாராயிருக்கும் வரை சேத்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரியின் வாசலில் எப்போதும் இரண்டு போலிஸ் வேன்கள் சூழ்ந்து நின்று கொண்டிருக்கும். அந்த பஸ் நிறுத்ததில் மாணவர்களின் அநாகரீக அராஜகத்திற்கு முடிவு கட்டப்பட்டது. முன்பெல்லாம் இரண்டு மூன்று வாசல்கள் வழியாக வந்து கல்லெறிந்து போராடும் மாணவர்கள் ஒரு திட்டி வாசலுக்குள் நுழைந்துதான் கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்தது. பொதுவாகவே சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாகவிருந்தது. இவர் உயிரோடிருக்கும் வரை தமிழக மக்கள் மூன்று முறையும் இவரையே முதல்வராக்கினர். இவர் மறைந்த பின்னும் செல்வி ஜெயலலிதா மூன்று முறை முதல்வராக முடிந்தது இவரால்தான்.

மக்கள் அன்றிலிருந்து இன்று வரைக்கும் தங்களை உய்விக்க ஒரு நல்ல தலைவன் வரமாட்டானா என்று ஏங்கி ஓவ்வொரு முறை தலைவன் பதவியேற்கும் போதும் எதிர்ப்பார்ப்பையும் கனவுகளையும் சுமந்து ஏமாந்து கொண்டேயிருக்கின்றார்கள்.

இராமன் பட்டாபிஷேகத்தின் போதும் மக்கள் ஏமாந்தனர். ஆனால் அதற்கு காரணம் சிறிய தாய் செய்த சதி. ஒன்றும் அறியாமல் மக்கள்  உறங்கி கொண்டிருக்க விழிதெழும் மிருகத்தின் வழியாகவும் குவியும் குமுதத்தின் வழியாகவும் கவி கைகேயின் செயலைக் குறித்து வருத்தப்படுகின்றான்.

சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த இன் துயில் செய்தபின்,
வாம மேகலை மங்கையொடு வனத்துள், யாரும் மறக்கிலா
நாம நம்பி, நடக்கும்என்று நடுங்குகின்ற மனத்தவாய்,
யாமும் இம் மண் இறத்தும்என்பனபோல் எழுந்தன - யானையே.
யானைகள் துயில் எழுந்திருக்குபோதே ”அழகிய மேகலையணிந்த சீதையுடன் எவராலுமே மறக்கமுடியாத நாமத்தையுடைய இராமன் காட்டிற்குப் போகப் போகின்றான். நாமும் அவனுடனேயே புறப்பட்டு போவோம்” என்பது போல் எழுந்தது என்று கூறுகின்றார்.

சாய் அடங்க, நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும்
போய் அடங்க, நெடுங் கொடுங் பழிகொண்டு, அரும் புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல்கண்டு, சீரிய நங்கையார்.
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த - வண் குமுதங்களே.
தன் பெருமையும், தன் குலப்பெருமையும் அழியவும், நெடுங்காலம் பழி சுமக்கவும், பெருதற்கறிய புகழைச் சிதறுகின்ற கைகேயின் தீச்செயலைப் பார்த்து சிறந்த பெண்களின் வாய்கள் அடங்கி மூடினார் போல் செவ்வாம்பல் மலர்கள் வாய் மூடின.

இதையெல்லாம் ஒன்றுமறியா மக்களோ

மாதர்கள், கற்பின் மிக்கார், கோசலை மனத்தை ஒத்தார்;
வேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் ஊர்ச்
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார்.
ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் என்பதினால் பெரும்பாலான மக்கள் அவனுடைய தாய் தந்தையரைப் போலவும், சீதையைப் போலவுமே உணர்ந்து மகிழ்ந்தனர் என்று கவி மிக அழகாகக் கூறினார்.

முடிசூட்டுவிழாவுக்கு வந்திருந்த மன்னவர்கள் அனைவரும் மண்டபத்தையடைந்தனர். வராத மன்னவர்கள் என்று கவி
நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறுந் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் -
இலங்கையின் நிருதரே; இவ் ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும், ஆசை நின்ற விடா மத விலங்கலேயால். அரக்கர்களும், அஃறிணைப் பொருள்களான மலைகளும், திசையானைகளும் மட்டுமே வரவில்லை என்பதால் பிறர் எல்லாரும் வந்தனர் என்பதாம். அரக்கர் பகையானும், மலைகள், அசைதலின்மையானும், திசையானைகள் திசைகளைச் சுமத்தலைவிட்டு வரக்கூடாமையானும் வரவில்லை.

முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டபடியால் தசரதனை அழைத்து வர சுமந்திரன் கைகேயியின் இல்லத்தையடைந்தான். பெண்டிரில் கூற்றம் அன்னாள், ‘பிள்ளையைக் கொணர்கஎன்றாள்.. வனை கொல்லத் துணிந்தவள் என்பதினால் மகளிருள் யமனைப் போன்றவள் என்கின்றான் கவி.

சுமந்திரனும் இராமனை வாழ்த்தி அவனை தசரதனுடனேயே அனுப்பிவைக்க வேண்டியே கைகேயி வரச்சொல்லியிருக்கின்றாள் என்று பேருவுகைப் பொங்க வேகமாக தேரை ஒட்டிக் கொண்டு இராமனிடம் செல்ல இராமனும் உடனே தேர் மீது ஏறிச் சென்றான். இவன் செல்வதை பார்பத்ற்காக கூடியிருக்கும் மக்கள் கூற்றாக கவி

தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள,
ஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால்,
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது?’ என்பார்.
”கோசலையிடம் இவன் வளரவில்லை.; வளர்ந்தது மாதவம் செய்த கைகேயியிடம், அவள் உள்ளத்தில் பேருவகை சொல்லவும் முடியுமோ என்று நினைத்தார்கள்” என்கின்றான். POETIC IRONYக்கு.இது ஒரு மிகச்சிறந்த உதாரம், கைகேயியைப் பார்த்து இவன் முடிதுறந்து கானகம் போகப் போகின்றான். இன்னும் சிறிது நேரத்தில் எல்லோரும் கைகேயியை தூற்றப்போகிறார்கள். ஆயினும் கவி இராமனை கைகேயி வளர்த்தது அவள் செய்த மாதவத்தால் என மக்களின் கூற்றாக வைக்கின்றான்.

தசரதனை தேடி இராமன் மாளிகையில் நிற்கையில் கைகேயி வருதல்.
ஆயன நிகழும் வேலை, அண்ணலும் அயர்ந்து தேறாத்
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி,
நாயகன் உரையான் வாயால்; நான் இது பகர்வென்என்னா,
தாய் என நினைவான் முன்னே கூற்று எனத் தமியள் வந்தாள்.

தமியள்- நிகரற்ற
அன்பு பொழியும் தாய் என்று கருதுபவன் முன்னே துன்பம் தரும்
எமன் போல வந்தாள் கைகேயி.நாயகன் உரையான் வாயால்.
இராமனுக்கு நன்மை பயப்பனவற்றையே சொல்லிப் பழகியவாய் என்று அறிவித்தற்கு கூறினார். ”இது என்றது. அவள் பெற்ற இருவரங்களைத் தெரிவித்தலைச் சுட்டியது.

வந்தவள் தன்னைச் சென்னி மண் உற வணங்கி, வாசச்
சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து, மற்றைச்
சுந்தரத் தடக் கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்-
அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான்
மாலைப்பொழுதில் வந்து சேர்ந்த  தாய்ப்பசுவைக் கண்ட பசுவின்
கன்றைப் போன்ற இராபிரான்  தன் முன்னே வந்த அக்கைகேயியை நெற்றி தரையில் பொருந்த விழுந்து வணங்கி மணம் வீசுவதும் சிந்தூரத்தையும் பவளத்தையும் போன்ற சிவந்த வாயை  சிவந்த (வலக்) கையால் பொத்திக் கொண்டு மற்றொன்றாகிய அழகுபொருந்திய பெரிய இடக் கையானது ஆடையை மடக்கிக்கொள்ள வணங்கி நின்றான். இப்பாட்டு இராமபிரானுடைய அடக்கத்தைக் காட்டுகிறது. அடக்கம் என்பது உயர்ந்தோர்முன்பணிந்த மொழியும், தணிந்த நடையும், தாளை மடக்கலும், வாய் புதைத்தலும், தலைதாழ்த்திநிற்றலும் கொண்டு அடங்கியொழுகுதலாம். இராமபிரான் அடக்கத்திற்கு விளக்கம் தருவதுபோல நிற்றல் போற்றி மகிழத்தக்கது.

நின்றவன்தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர்இன்றிக் கொடுமை பூண்டாள்,
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின், ஆகும்:
ஒன்று உனக்கு உந்தை, மைந்த! உரைப்பது ஒர் உரை உண்டுஎன்றாள்
இரும்பினால் ஆகிய மனத்தோடு உயிர்களைக் கொன்று திரியும் எமன் என்னும் பெயர்மட்டும் இல்லாமல் வனுடைய கொடுந்தன்மையை மேற்கொண்டவளாகிய கைகேயிமகனே உன் தந்தை உனக்குச் சொல்வதாகிய சொல் ஒன்று உள்ளது. ப்பொழுது எனக்கு (உன்னிடம் அதைச்)சொல்வது பொருத்தமானது என்று நீ கருதினால் நான் அதனைத்தெரிவிக்கலாம் என்றாள்.

கைகேயி தான் சொல்லப்போவது இன்னாத சொல்லாதலின் அதனை விரையக் கூறாது, இராமனுடைய இசைவு பெற்றுத் தெரிவிக்க எண்ணி நயமாகப் பேசுகிறாள். இது கைகேயியின் வஞ்சக மனத்தைக்காட்டுகிறது

எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல்,
உய்ந்தனென் அடியேன்; என்னின் பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே; தலைநின்றேன்; பணிமின்என்றான்.
என் தந்தையாரே கட்டளையி (அதனை) நீரே தெரிவிக்க இசைவதானால்;
நான் ஈடேறிவிட்டேன்  என்னைச் காட்டிலும் (மேன்மைஅடையும்படி) பிறந்தவர்
வேறொருவர் இருக்கின்றாரோ? (இல்லை);என் முன்னைத் தவத்தால் உண்டாகிய பயன்

வந்துவிட்டது  இதனினும் சிறந்ததாக வரக்கூடிய நற்பயன் பிறிதொன்று உள்ளதோ? (இல்லை); எனக்கு நன்மையானவற்றைச் செய்யும் தகப்பனும், இனிமையானவற்றைச் செய்யும் தாயும் நீரே ஆவீர்  நீர்சொல்லப்போவதைத் தலைமேற் கொண்டு நின்றேன் கட்டளையிடுங்கள்.


 ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி
,
ஏழ் - இரண்டு ஆண்டின் வாஎன்று, இயம்பினன் அரசன்என்றாள். இது, கைகேயியின் மனத்தையும் அவள் பேச்சின் நயத்தையும் காட்டுகிறது. பரதனே என்பதில்உள்ள பிரிநிலை ஏகாரம் அவள் ஆசையைக் காட்டுகிறது. தாழ்இருஞ் சடை தாங்குதல், தவம்

மேற்கொள்ளல், கானம் சேர்தல், புண்ணியத் துறைகள் ஆடுதல் முதலிய நற்பயன்கள் கிட்டவே அரசன் இவ்வாறு பணித்தான் என்று கூறித் தான் வரங்கேட்டதை மறைத்தலின் அவளது வஞ்சகம்தெரிகிறது. பதினான்கு ஆண்டுகள் என்னாதுஏழ் இரண்டு ஆண்டுஎன்று சுருக்கிக் கூறுதல் அவளது கரவுப் பேச்சைப் புலப்படுத்துகிறது. தான் பழியற்றவள் என்பதைக் காட்டுவதற்காக இயம்பினன்அரசன்என்றாள். மேலும் தந்தை

இப் பொழுது, எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தா மரையினை வென்றது அம்மா!
இராமனுடைய முகத்திலே ஏமாற்றமோ வருத்தமோ சிறிதும் இலலை. தந்தை அரசு பதவி ஏற்றுக் கொள் எனும் போது எப்படி, மகிழ்ச்சியோ சந்தோஷமோ இல்லாமல் அரசன் கட்டளை என்று நினைத்தானோ, இப்போதும் அப்படியே இருக்கின்றான். இரமனுடைய முகத்தை செந்தாமரை மலருக்கு நிறையவிடங்களில் கவி ஒப்பிட்டுக் கூறுகின்றான். இவ்விடத்தில்  கைகேயின் பேச்சைக் கேட்பதற்கும் கேட்ட பின்னும் ஒரே போலத்தான் இருந்தது. அவ்வாசகம் உணரக்கேட்டபோது அப்பொழுது அலர்ந்த செந்தாமரை மலரையும் வென்றதம்மா என்னும் அற்புதமான வரிகளை பிரயோகிகின்றான் கவி. பெரும்பாலான உரைகளில் ”அன்று மலர்ந்த செந்தாமரை போலிருந்ததம்மா” என்றுதான் உரை எழுதுகின்றார்கள். அப்படியெனில் கவி பேசாமல் அன்று மலர்ந்த செந்தாமரை என்றே கூறியிருக்கலாமே? ஏன் கூறவில்லை? மலர்தல் ஒரு தொடர் நிகழ்வு. அலர்தல் அந்நிகழ்வின் முடிவு பெற்ற நிலை, என்பதுதான் காரணம்.

 இராமனுடைய முகமோ எப்போதும் செந்தாமரையை போலவிருக்கும். கைகேயி வாசகம் கூறுவதற்கு முன்பு  ஓவ்வொரு இதழாக அவிழ்ந்து முகத்தாமரை மலரத் தொடங்கியது. அது உரைக் கேட்டபின்னும் தொடர்கின்றது. அவ்வாசகத்தை அவன் உள் வாங்கி உணர, எப்படியும் பல நொடிகளோ இல்லை சில நிமிஷங்களோ ஆகும். அதுவரையில் மலர்தல் என்ற தொடர் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. கைகேயின் உரையை உணர்ந்த பின் அந்நிகழ்வு முழுமையடைந்து முகத்தாமரை மலர்ந்து முடித்து விட்டது என்பதை குறிக்கவே அவன் அலர் என்ற வார்த்தையை பயன் படுத்தியிருக்க வேண்டும். (நண்பர் குருநாதன் அவர்கள் ”அவன் அலர்ந்த என்ற வார்த்தைக்கு மலர்ந்த என்ற பொருளையே பலர் குறிக்கின்றார். ஆனால் இது இரண்டுமே வேறு. மலர்தல் .  ஒரு தொடர் நிகழ்வு. அலர்தல் என்பது இந்த தெடர் நிகழ்ச்சி முழுமையடைந்தை மலர்ந்த நிற்கும் தாமரயைக் குறிக்கும் .(அலர்- fully blown) ” என்று இலக்கிய வட்டத்தில் கூறினார். அதனடிப்படையில் நான் என் சிற்றரிவிற்கு ஏற்ப விரித்து கொண்டது.       

 மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப் பணி தலைமேல் கொண்டேன்;
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.
அரசன் கட்டளை அன்று என்றாலும் நுமது கட்டளையை யான்
செய்யமாட்டேன் என்பேனோ?; என் தம்பி பரதன் அடைந்த பேறு நான் அடைந்தது அன்றோ? இதற்குப் புறம்பான நன்மை வேறு யாது?
இக்கட்டளையைத் தலையின்மேல் ஏற்றுக்கொண்டேன் மின்னல் போல வெயிலொளி வீசும்காட்டிற்கு இப்பொழுதே போகின்றேன் நும்மிடம் விடையும் பெற்றுக்கொண்டேன்.

இவன் உடனேயே கிளம்பி தாய் கௌசல்யையின் மாளிகையடைந்தான். கைகேயியின் மிகத் திறமையான வாக்கு சாதூர்யத்தைப் பார்தோம். இவள் வளர்த்த இராமன் மட்டும் இவளுக்கு சற்றும் குறைந்து விடுவானா வாக்கு சாதூர்யத்தில்?



                                                                                                                                                                            தொடரும்