Thursday, February 21, 2013

செவிவழிக்கதைகள்



 நான் கடலூரில் படித்து கொண்டிருக்கும் போது இருக்கும் போது என் தம்பியை டபுள்ஸ் அடித்துக் கொண்டு தினமும் பள்ளிக்கு செல்வேன். அவன் குழந்தையிலிருந்தே நல்ல குண்டு. அவனுக்கு சிறு வயதில் பின்னாடி சைக்கிளில் உட்கார்ந்து ஒரு தடவை கால் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு தோல் வழண்டுவிட்டது. அதிலிருந்து பின்னாடி உட்காருவதற்கு பயம். எப்போதும் ஹான்டில் பாரில் தான் உட்காருவான். எனக்கு கிடைத்த பழைய ஹெர்குலிஸ் சைக்கிளும் எவ்வளவுதான் தாங்கும். ஒரு நாள் போய் கொண்டிருக்கும் போது ஹான்டில் பார் உடைந்து விட்டது. நான் உடனே சைக்கிளிலிருந்து குதித்து விட்டேன். சுவற்றில் மோதி என் தம்பிக்கு நல்ல அடி. அவன் ஹாண்டில் பார் உடைந்ததை கவனிக்காமல் நான் திடிரென்று குதித்து வேண்டுமென்றே அவனை அடி பட வேண்டும் விட்டு விட்டதாகவும், சுவற்றில் மோதியதால் தான் ஹாண்டில் பார் உடைந்து விட்டதாகவும் இன்று வரை கூறிக் கொண்டிருக்கின்றான். என்ன? அடி யாருக்கு பட்டதோ அவனிடம் தானே பரிவு எழும்! எனக்கு சின்ன கீறல் கூட கிடையாது. இந்தக் கதையை மறக்காமல் எங்கள் குடும்பத்தில் எல்லா குழந்தைகளுக்கும் சொல்லிக் கொண்டிருக்கின்றான். என் அக்காவின் பேரன்களும் இதில் அடக்கம்.  

சீஏ படிக்கும் போது எங்கள் நிறுவனத்தின் ஒரு பார்டனர் அந்தராமன். இவர் கம்பெனி ஆடிட்களை கவனித்து வந்தார். அப்போது டாய்லெட் ஆபீஸிற்கு வெளியே இருக்கும். ஆபிஸ் முன்புறமும், சீனியர் பார்டனரின் வீடு பின் புறமும் இருந்தது. அப்பொழுது சனிக்கிழமைகளில் ஆபிஸ் அரை நாள். . சீனியர் பார்டனரின் வீட்டில் அனைவரும் எங்கோ வெளியூர் சென்றிருந்தனர். இவர் வீட்டிற்கு போவதற்கு முன் டாய்லெட் சென்றார். யாரோ ஒரு பிடிக்காத அப்ரெண்டிஸ் மாணவன் டாய்லெட்டின் வெளிப்புறம் தாழ்பாளைப் போட்டு விட்டு சென்று விட்டான். மூன்று மணி நேரம் போராடி, யாரும் வராமல் கடைசியில் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார். இது நாங்கள் சீஏ சேருவதற்கு 10 வருடங்களுக்கு முன்னால் நடந்தது. ஆயினும் சீனியர்கள் தெரிந்து கொண்டு, ஜூனியர்களுக்கு தொடர்ந்து தெரிவித்த வந்த காரணத்தால், இந்த கதை முதல் வருடம் சேரும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

வக்கீல் மட்டும் சீஏ ஆபிஸ்களில் சுவரின் இருபுறமும் கண்ணாடி ஷோகேசுக்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நல்ல லெதர் பைண்ட் செய்யப்பட்ட சட்ட மற்றும் கோர்ட் கேஸ் டைஜெஸ்ட்கள் நம்மை அறிவில்லாத ஜடங்களாக ஆக்கி, நம்மை மிரள வைக்கும். ஆனாலும் இவர்கள் அதில் ஒரு சதவிகிதத்தைக் கூட படித்திருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை. நம்மை பயமுறுத்தி அவர்கள் மெத்தப் படித்தவர்கள் என்று நாம் எண்ணுவதற்காகவே இவையெல்லாம் இருக்கும்,

நான் சீஏ படிக்கும்.போது அனந்தராமன் மீட்டிங் ரூமில் இருந்தார். அவருக்கு உதவியாக ஆர்டிகள்ஷிப் செய்யும் அணில் குமார் ரெட்டி இருந்தான். இவர் அவனிடம் “இராமையா” என்றார். இவன் வெளியே வந்து எட்டிப் பார்த்த ஐந்து நிமிடம் கழித்து உள்ளே சென்று “ அப்டி எவுறு லேது சார் இக்கட” என்றான்.

ராமையா என்பவர் கம்பெனி லாவில் அத்தாரிட்டி. அவர் எழுதிய உரை மற்றும் மேற்கோள் காட்டப்படும் கேஸ் லாக்கள் அனைத்து ஆடிட்டர்கள், வக்கில்கள் மற்றும் கம்பெனி செக்ரடரிகளாலும் அடிக்கடி ரெப்பரென்ஸுக்காக பார்க்கப்படும் புத்தகங்களில் ஒன்று. அனந்தராமன் கேட்டது ராமையா எழுதிய புத்தகத்தை. இவன் உள்ளே சென்று இந்த மாதிரி சொன்னவுடன் சிரிப்பை அடக்க முடையாமல் அனந்தராமன் வெளியே வந்து எல்லோரிடம் சொல்லி சொல்லி சிரித்தார். அணில் குமார் ரெட்டியின் திருமணத்திற்கு என்ன பரிசளிப்பது என்ற கேள்வி எழுந்த  போது ஒருமித்த சாய்ஸ் ராமையா எழுதிய புத்தகம்தான். 10 வருடம் கழித்து அந்த கம்பெனியிலிருந்து வெளிவந்தவர்களும் இவ்விரண்டு சம்பவங்களும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருப்பதைப் பார்த்திருக்கின்றேன்.

ஓஷோ ரஜ்னீஷ், வெளியுலகை பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்ததை செய்தவர். அதே போல் எதைப் பற்றியும் கவலைப் படாமல், பலரையும் எதிர்மறையாக விமர்சித்தவர். முதலில் அவர் அதுவரையிலான கட்டப்பட்ட எல்லா பிம்பங்களையும் உடைத்தவர். ஒஷோவைப் போன்றவர்கள் ஒரு கூட்டமாகவே பழந்தமிழகத்தில் இருந்திருக்கின்றனர். எந்த விதமாதான அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல்  அவர்களை மன்னனும் பாதுகாக்கின்றான் என்பது ஆச்சரியத்தியளிக்கின்றது.

சிலப்பதிகாரத்தில் புறஞ்சேரியிறுத்த காதையில்
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து
என்கின்ற வரி இதைத்தான் நமக்கு உணர்த்துகின்து. வரி – என்பது இங்கு காமத்தைக் குறிக்கும். அதைக் கற்றுக் கொள்வதற்காக தம்முடைய வேத நூல் மார்கத்திலிருந்து முறை தவறிய அந்தணர்கள் வாழ்ந்த ஊரையடைந்தனர் என்றால் அரசன் பாதுகாக்காமல் இவர்கள் இவ்வாறிருந்திருக்க முடியுமா?. இவர்கள் இப்படி என்றால் இன்னொரு அந்தணர் ஒரு பறையர் குல மகளைத் திருமணம் செய்து கொண்டதற்காக  தன்னைத் தானே ஜாதிபிரஷ்டம் செய்து கொண்டார்.

விக்ரமாதித்தனுக்கு இராமாயணத்தில்  மிக முக்கியமான வரி எது என்ற சந்தேகத்தை வரருசி எனும் அரசவை புலவரும் அந்தணருமான வரருசியிடம் வினவினான். வரருசிக்கு தெரியவில்லை. ராஜா 41 நாட்கள் கெடு விதிக்கிறார். அதற்குள் பதில் சொல்லாவிட்டால் வரருசி உயிரை இழக்க நேரிடும். அறிஞர்களைக் கேட்டும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. நாற்பாதவது நாள் இரவில் ஒரு ஆலமரத்தின் அடியில் கவலையுடன் அமர்ந்து ஓய்வெடுக்கும் போது, இரண்டு ஆவிகள் காலமேனி பறவைகளின் உருவில் அம்மரத்தின் மீது வந்து அமர்ந்து பேசத் தொடங்கின. அவை ராமாயணத்தைப் பற்றிப் பேசி, அதில் மிக முக்கியமான வரியாக, ராமனுடன் காட்டுக்குப் புறப்படும் லக்ஷ்மணனுக்கு சுமத்திரை கூறும் அறிவுரையாக வரும் “ராமனை உன் தந்தையாக நினைத்துக் கொள். ஜனகன் மகள் சீதையை நானாக நினைத்துக் கொள். காட்டை அயோத்தியாக நினைத்துக் கொள். பயணம் சுகமாகிவிடும்” என்ற ஸ்லோகத்தைக் கூறி அதில் “ ஜனகன் மகள் சீதையை (நானாக) தாயாக நினை” (மாம் விதி ஜனகாத்மஜம்) என்னும் வரி மிக முக்கியமானது என்று கூறின. கூடவே வரருசி இப்பொழுது பிறந்திருக்கிற ஒரு பறையர்குலப் பெண்ணை மணக்க வேண்டும் என்பதும் விதி என்றும் பேசிக்கொண்டன.

அடுத்த நாள் விக்ரமாதித்தனிடம் ராமயணத்தின் முக்கிய வரிகளை கூறி உயிரைக் காப்பாற்றி கொண்ட வரருசி, தனக்கு முன்கூட்டியே தெரிந்த விதியை மாற்ற எண்ணி, நேற்று பிறந்த பறையர் குலப் பெண்ணால் அரசனுக்கு ஆபத்து என்று கூறினான். அரசன் ஆணைப்படி வீரர்கள் பிறந்த பெண் குழந்தைகளைக் கொன்றனர். ஆயினும் ஒரு குழு அரசனது ஆணைப்படி கொல்லாமல் ஒரு பெண் குழந்தையை தெப்பத்தில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர். பல வருடங்கள் கழிந்த பிறகு, வரருசி பிராயாணத்தில் ஒரு அந்தணர் வீட்டில் உணவு உண்ண சம்மதிக்கிறார். அவர் விதித்த நுட்பமான சங்கேத மொழியில் அமைந்த விதிகளை புரிந்து கொண்டு சமையல் அறையிலிருந்து பதிலளிக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அந்த பெண் பராத புழை (நிளா) ஆற்றின் கரையில் உள்ள கொடுமுண்டா கிராமத்தின்  நரிப்பட்டாமனியைச் சேர்ந்த பிராமண குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்ட பறைக்குலத்தில் பிறந்த அதே பெண்தான். வரருசி தன்னைத் தானே ஜாதிப்ரஷ்டம் செய்து கொண்டு அடர்ந்த காடுகளின் வழியிலே யாத்திரையைத் தொடங்கினார்.

ஒவ்வொரு முறை மனைவி பிரசவிக்கும் போதும் “குழந்தைக்கு வாய் இருக்கிறதா?” என்று கேட்கிறார். மனைவி இருக்கிறது என்று சொன்னவுடன் “வாயைக் குடுத்த இறைவன் இதற்கு உணவையும் கொடுப்பான். குழந்தையை இங்கேயே விட்டுவிடு” என்று சொல்லி விடுகிறார். மனைவி பன்னிரண்டாவது குழந்தை பிறந்தவுடன் வாய் இல்லை என்று சொல்லிவிடுகிறாள்; சரி குழந்தையை எடுத்து கொள் என்கின்றார். பாலூட்ட எண்ணி குழந்தையை பார்த்தபோது குழந்தைக்கு உண்மையிலேயே வாயில்லை. தன் தவறால் குழந்தைக்கு நேர்ந்ததை என்ணி வருந்தினாள். வரருசி அந்தக் குழந்தையை அந்த குன்றின் மேலேயே தெய்வமாகப் பிரதிஷ்டை செய்கிறார். அது குன்றில் இருக்கும் வாயில்லா தெய்வம்( வாயில்லா குந்நில் அப்பன்) என்று அழைக்கப்படுகின்றது. அந்த கோவில் கடம்பாழிபுரம் என்னும் ஊரில் இன்றும் உள்ளது.

வரருசிக்கும் பரையர்குல பெண்ணுக்கும் பிறந்த பதினொரு குழந்தைகளும் பின்னாளில் வளர்ந்து ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்கின்றனர். இவர்கள் பல்வேறு ஜாதியினரால் வளர்க்கப்பட்டனர். பிராமணர், பறையர், வண்ணார், இளையது, உயர்குல நாயர், வைஸ்யன், படை நாயர், வள்ளுவர் குலம், இஸ்லாமியர், பாணார் என்று இவர்களால் வளர்க்கப்பட்டனர் என்று கதை கூறப்படுகின்றது.

இராமயணக் கதையில் மிக முக்கியமான வரி என்று அதுவும் சம்ஸ்கிருதத்தில் கூறப்பட்டிருப்பதும் சரியா? வால்மீகியில் அந்த மாதிரி
இருந்ததா?

வசிட்டன் மண்டபத்தையடைந்து அரசர்களிடம் ”கைகேயி தசரனிடம் வாங்கிய கொடிய இரண்டு வரங்களினால் ராமன் காட்டிற்கு போகின்றான்,  பரதன் ஆளப்போகின்றான்.என்றான். இச்செய்தி அஃறிணை விலங்குகளும் அழுததாம் என்றால் நகரமாந்தர்கள் நிலையை சொல்ல முடியுமா?

ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத  கால் வயப் போர்
மாவும் அழுத; - அம் மன்னவனை மானவே.  

ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் வரை அனைத்தும் இராமனது பிரிவால் அழுதன என்பார் முதலும் முடிவும் கூறினார்.

தள்ளூறு வேறு இல்லை; தன் மகற்குப் பார் கொள்வான்,
எள்ளூறு தீக் கருமம் நேர்ந்தாள் இவள்என்னா,
கள் ஊறு செவ் வாய்க் கணிகையரும், ‘கைகேசி,
உள் ஊறு காதல் இலள்போல்என்று, உள் அழிந்தார்.

அந்நகரக் கணிகையர் தம்மைப்போலவே கைகேயியும் தயரதனாகிய
நாயகன்பால் அன்பின்றி மண்ணாசையாகிய பொருட்பற்றினால் இத்தீய
செயலைச் செய்திருக்கிறாள் என்றனர் – கணவன் இறப்பைப் பொருட்
படுத்தாது தன் மகனுக்கு அரசு பெறுவதில் குறியாய் இருத்தலின்
அன்பினால் முயங்காது பொருளாசையால் முயங்கும் கணிகையார் நிலை
கைகேயிமாட்டு உள்ளதாம்.

பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து, பிறந்து உலகம்
முற்று உடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி,
உற்று உறைதும்; யாரும் உறையவே, சில் நாளில்.
புற்று உடைய காடு எல்லாம் நாடாகிப் போம்என்பார்.

பெற்றுடைய மண்’, ‘பிறந்துடைய மண்என்பது அழகிய வாசகம்.
மக்கள் சென்று உறையக்காடு நாடாகும் என்பதால், இராமனின்றிக் கைகேயி
பெற்றுடைய மண்ணை ஆளும் பொழுது மக்கள் இல்லாத நாடு காடாகிவிடும்
என்றாராம். இராமன் சென்ற காடும் நாடாம், கைகேயி ஆளும் நாடும்
காடாகும். ஆதலின் இராமனுக்குக் கைகேயி அளித்த காட்டை நாம்
அவளுக்கு அவள் இருக்கிற நகரத்திலேயே உண்டாக்கிவிடுவோம் என்பதும் நகரமாந்தர் குறிப்பாகக் கொண்டு நயம் காணலாம்.

என்னே, நிருபன் இயற்கை இருந்தவா!
தன் நேர் இலாத தலைமகற்குத் தாரணியை
முன்ன கொடுத்து, முறை திறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்?’ என்பார்.

நகர மாந்தர் அவல மனநிலையினும் இராமன்பால் கொண்ட அன்பின் மனநிலையினும் எழுந்ததாயினும் இஃது ஓர் அரிய வாதம். வரம் கொடுத்து மறுத்தால் சத்தியம் தவறுமாயின், அவையில் சொல்லிய வார்த்தையை அந்தப்புரத்தில் மாற்றினால் அச்சத்தியம் தவறாதோ என்பது மக்கள் வாதம். மேம்போக்காகத் தயரதனை மெய் பிறழ்ந்தவனே என்று காட்டும் இவ்வாதம்; ஆயினும் கூர்ந்து நோக்குவார் உண்மை உணர்வார். கைகேயிக்கு வரம் அளிக்கப் பெற்றது மிகவும் முன்பாகும்; அரசவையில் இராமனுக்கு அரசு உரிமை அளிக்கப்பெறுதற்கு மிக நெடுங்காலம் முன்னரே கைகேயிக்கு அளித்த வரம்தான் இப்பொழுது மீண்டும் எடுத்து மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. வரம் எதுஎன்ற விளக்கம் இப்பொழுது வந்ததே அன்றி, வரம் முன்பே  உள்ளது. ஆதலின் அஃது எதுவாயினும் அதனை அளிப்பதுதான் தசரதனது, வாய்மையாம். முதற்சொல்லிய சொல்லிற் பிறழாமையே வாய்மை காத்தல் ஆதலின், அதனைக் காத்தற்குப் பின்னர்க் கூறிய அவையிடை நிகழ்ந்த உரையை மாற்றுதல் வாய்மை தவறுதலாகாதாம் என்பதால் வாய்மை காக்கவே வரம் கொடுக்கிறான் தசரதன் - அவையினில் கூறிய சொல் தவறாமைப் பொருட்டுத் தன் உயிரை இழக்கிறான்; இதனால் பின்னால் வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்என்று (4018) வாலியால் தயரதன் போற்றப்பட்டதாகக் கம்பர்அமைத்தார் எனலாம்.

இலக்குவனும் நகர மாந்தர்கள் அறிந்த போது தான் இவ்விஷயத்தைத் தெரிந்து கொண்டான். உடனே கோபம் தலைக்கேற போர்கோம் பூண்டு கையில் பூட்டிய வில்லுடன் நாற்சந்தியிலியே திரிந்தான்.

சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!
நங்கைக்கு அறிவின் திறம்! நன்று, இது! நன்று, இது!என்னா,
கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான்.

பொருத்தம் அற்ற செயல் செய்தாள் கைகேயி என்பதை இவ்வாறு
கூறினான். சிறுகுட்டனை -குட்டனுக்குநன்று இதுஇகழ்ச்சிக்குறிப்பு – கங்கை வரை உள்ள நாடு  கோசலம் ஆதலின் இலக்குவன் கங்கைக்கிறைவன்எனப்பட்டான் இனி சரயு நதிக்குஇராமகங்கைஎனும் பெயருண்மையின் அதுபற்றிக் கங்கைக்கிறைவன்” எனப்ப்ட்டான்.

விண் நாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர், மற்றும்
எண் நாட்டவர், யாவரும் நிற்க; ஓர் மூவர் ஆகி,
மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர் வந்தபோதும்,
பெண் நாட்டம் ஒட்டேன். இனிப் பேர் உலகத்துள்என்னா.
இலக்குவன் யார் கூட்டாக வந்தாலும் கைகேயின் எண்ணம் நிறைவேற விடமாட்டேன் என்று நாணின் ஓசை வேறு எழுப்ப்பிக் கொண்டிருந்தான். சுமத்திரையின் மாளிகையில் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த இராமன் காதில் நாணின் ஓசை விழ, இலக்குவனிடம் வந்தான்.

மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற,
பொன் ஒத்த மேனிப் புயல் ஒத்த தடக் கையானை,
என் அத்த! என், நீ, இமையோரை முனிந்திலாதாய்,
சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு ஏது?’ என்றான்..

இவ்வாறு எல்லாம் நிகழத் தேவர்களே மூல காரணம். அவர்களை வெறுக்கா நீ இப்பொழுது வில் ஏந்த என்ன காரணம்என்று வினவியதாகக் கொள்க. இறையேனும் முனிந்திலாதாய்என்ற பாடம் இவ்விடத்தில் சிறப்புடையது. சிறிதளவேனும் எப்பொழுதும் கோபம் வராத சாந்தமூர்த்தியாக விளங்கும் நீ இன்று சினம் மூண்டு வில் ஏந்தக் காரணம் என்ன என்று கேட்டதாக உரைக்கப் பொருள் சிறத்தல் காண்க.

மெய்யைச் சிதைவித்து, நின்மேல் முறை நீத்த நெஞ்சம்
மையின் கரியாள் எதிர், நின்னை அம் மௌலி சூட்டல்
செய்யக் கருதி, தடை செய்குநர் தேவரேனும்,
துய்யைச் சுடு வெங் கனலின் சுடுவான் துணிந்தேன்.

நின் மேல் முறை’ - ‘உன் மேல் உள்ள மகன் என்கின்ற அன்பு முறைமையை என்றும் பொருள் உரைக்கலாம் - இது காறும் கைகேயியின் அன்பு மகன் என இராமன் வளர்ந்ததை அவனும் அறிவான். ஆதலின் இமையோரை முனிந்திலாதாய் இன்று முனிவானேன் என்ற இராமன் வினாவிற்கு; தடை செய்குநர் தேவரேனும்என்பது இலக்குவன் உரைத்த பதில் எனக்கொள்ளின்; ‘இமையோரைஎன்னும் பாடம் வன்மை பெற இதுவும் ஒரு சான்றாகும்.

நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க,
புன்கண் பொறி யாக்கை பொறுத்து, உயிர் போற்றுகேனோ -
என் கட்புலமுன் உனக்கு ஈந்துவைத்து, “இல்லைஎன்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல்?’ என்றான்.
இராமனை வனம் அனுப்பித் தயரதன் உயிர் வாழ்வதாக நினைத்தவன்
ஆதலின் நானும்அவ்வாறானவன் அல்லன் என்று இங்ஙனம் கூறினான்
இலக்குவன்.

இராமன் இலக்குவனிடம்
பின், குற்றம் மன்னும் பயக்கும் அரசுஎன்றல், பேணேன்;
முன், கொற்ற மன்னன், “முடி கொள்கஎனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ? -
மின் குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்!
ஆராயாமல் அரசு ஆள ஒப்புக்கொண்டது என் தவறுதானே அன்றி,
அளி்த்தவன்மேல் தவறு இல்லை என்றான் இராமன். அரசு பலர்
ஆசைப்படக் கூடிய ஒன்று. இதனாற் பின்னர்ப் பல தீமைகள் விளையும்
என்று நான் கருதாமல் ஒப்புக்கொண்டமையால் என்னைத் தான் தண்டிக்க
வேண்டுமே அன்றி, எந்தையைக் குறைகூறல் சரியன்று என்று
சமத்காரமாகக் கூறித் தம்பியை அடக்கினான் இராமன் என்க.

நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்.
ஊழ்வினை செலுத்தத் தாயும் தந்தையும் அவ்வினையின் கருவியாக இருந்து செயல்பட்டனரே அன்றி அவர்களாக நம்மேல் பகை கொண்டு செய்தாரில்லை. மழைநீர் வரத்து இன்மையால் சிலகாலம் ஆற்றில் நீர் வற்றுவது போல் வினைவலியால் பெற்றோர் அன்பின்மை உடையார் போலத் தோன்றுவர், அவ்வளவே என்றானாம். மூவரையும் தாயர் என ஒப்பக் கருதல் பற்றிக் கைகேயியைப் பயந்து நமைப்புரந்தாள்என்றான் இராமன்.

உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க,
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்,
விதிக்கும் விதி ஆகும், என் வில் - தொழில் காண்டிஎன்றான்.
விதிக்கும் ஒரு விதி செய்வேன் என்கின்றான் இளையவன். இராமனோ எல்லாம் விதிப்பயன். இதில் யாரை குறை சொல்லி என்ன பயன் என்கின்றான்.  ராஜ்ஜியம் இல்லை என்ற போதும் எந்த சலனமுமில்லாமல் ஏற்றுக் கொள்ள முடிகின்றது ஏனெனில் இது அவன் தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் இலக்குவனுக்கு இது பொது பிரச்சனை. அதனால் கோபம் மூண்டு சண்டைக்குத் தயாராகிவிடுகின்றான்.

நதியின் பிழையா இல்லை மணல் அள்ளும் கொல்லைகாரர்களின் சதியா என்று தெரியவில்லை தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆறுகளிலும் கூடிய விரைவில் நறும்புனல் கட்டாயமிருக்காது. கேரளா மற்றும் கர்நாடகாவில் எல்லா ஆற்றிலும் மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டிருக்க, தமிழகத்தில் மட்டும் மணல் கொள்ளையை அரசே நடத்திக் கொண்டிருக்கின்றது. எப்படி சாயப்பட்டரையின் கழிவுகளும் தொழிற்சாலைகளின் கழிவுகளும் சாக்கடைகளும் நேரிடையாக ஆற்றில் விடப்படலாம்? பண்டருட்டியிலிடுந்து சிதம்பரம் போகும் வழியில் ஆற்றில் எடுத்த மணலை குவியல் குவியலாக எகிப்து பிரமீடுகள் போல அடுக்கி வைத்திருப்பார்கள். பார்த்தாலே எவ்வளவு சீக்கிரம் இந்த ஆற்றில் தண்ணிர் ஓடுவது நின்று போகும் என்று பகீரென்று இருக்கும். ஆற்று படுகை முழுவதும் 15 அடி 20 அடி வரையிலான பள்ளங்கள்.  ஆற்று படுகை நாசாவின் செவ்வாய்கிரக போட்டோ போலவே செம்மண்ணின் நிறத்தில் பெரும் பள்ளங்களுடன் இருக்கின்றது.

ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு முறை ஆடிட்டிற்கு சென்றபோது உணவு சாப்பிடுவதற்காக  இரவு 8.30 மணிக்கு உட்காரும் போது சங்கு ஊதியது. எதற்காக சங்கு ஊதுகிறார்கள் என்று கேட்டதற்கு பள்ளிப்பாளையத்தில் இருக்கும் ஷேஷசாயி பேப்பர் மில்லில் கழிவுகளை பாவாணி ஆற்றில் விடும் நேரம் இது என்றார்கள்.  10 நிமிடத்திற்கெல்லாம் காற்றில், நம்மீதே யாரோ மலம் பெய்ததைப் போன்ற வாசம் பரவி சுவாசிக்க முடியாமல் செய்தது. 12 கீமீ தள்ளி இருக்கும் ஊரிலேயே இவ்வளவு வீச்சம் என்றால், ஆற்றின் நீரில் என்ன என்ன விளைவுகளை அது ஏற்படுத்தும்? ஏன் எந்த பொது பிரச்சினைக்காக உள்ளுர்வாசிகள் போரிட முன் வருவதில்லை.? எல்லாவற்றிகும் நாம் சுப்ரீம் கோர்ட்டை நாடவேண்டிய அவசியம் என்ன? “சிறுதுளி” எனும் அமைப்பால் நீரின்றியிருந்த நொய்யல் ஆறு நறும் புனல் பெற முடியும் என்றால் கூவத்தில் பச்சையப்ப முதலியார் குளித்தது போன்ற காலமும் வாராதா? வரும்? விதியை மாற்ற.மம் வேண்டும்,

”நீ வேதம் அறிந்தவன்; அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று நீ அறியவில்லையா?” என்ற இராமனின் கேள்விக்கு நீதான் எனக்கு தாய் தந்தையர். தசரதனோ இல்லை கைகேயியோ இல்லை என்று கூறி தன் பிடிவாதத்திலேயேயிருக்க
நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஊற்றம்?’ என்றான் -
தேன்சொல் கடந்தான், வடசொல் - கலைக்கு எல்லை தேர்ந்தான்.

என்னைத் தந்தையும் தாயும் என்று நீ கருதுவது உண்மையாயின் என் சொல்லை மீறுவது உனக்கும் தகாதுஎன்று கூறுவதாகக் கருத்துக் கொள்ளல் வேண்டும்.

இலக்குவன் சீற்றம் தனிந்து இராமனுடன் சுமத்திரையின் மாளிகையடைந்தான்.
மகனிருவரையும் கண்ட சுமத்திரை தன் துன்பம் தீருவதற்கு வழியில்லாமல் சோர்ந்தாள். அவளை இராமன் தேற்றும் விதமாக ”தந்தையை சத்தியம் தவறியவனா செய்ய முடியாத நிலையில் உள்ளேன். சிறுது நேரம் காட்டை சுற்றிப் பார்த்துவிட்டு சீக்கிரம் திரும்பிவிடுவேன் என்று 14 வருடங்களை சிறிது நேரம் என்று கூறினான்.

தாய், ஆற்றுகிலாள்தனை, ஆற்றுகின்றார்கள் தம்பால்,
தீ ஆற்றுகிலார், தனிச் சிந்தையினின் செற்ற
நோய் ஆற்றுகில்லார் உயிர் போல நுடங்கு இடையார்
மாயாப் பழியாள் தர, வற்கலை ஏந்தி வந்தார்.
ஏவர் மகளிர் ஆயினும் அவரும் இராமன் பிரிவுத் துயரத்தால் துடிக்கின்றனர். அவர்கள்கையில் மரவுரி கொடுத்து அனுப்பினாள்  கைகேயி என்பதாம். முன்பும்கைகேசியும் கொடியகூனியும் அல்லாமல் கொடியார் பிறர் உளரோஎன்ற (1704.) படியால் இவ்விருவர் தவிரமற்றவர்  அனைவரும் துயரால் துடிக்கின்றவர்களே என்பது போந்தது.மாயாப் பழியாள்கைகேயி பின்பும் பரதன்மாயா வன்பழி தந்தீ்ர்’ (2177.) என்பது காண்க.. இலக்குவன் அவ்வுடைகளை வாங்கி ”இராஜியத்தை சூழ்ச்சியால் அபகரித்த கைகேயி கொடுத்து அனுப்பிய மரவுரியை இராமனும் அணிவான்.. கையில் வில்லிருந்தும் ஒன்றும் செய்ய முடியாதவானக நான் இருந்து என்ன பயன்,. என் தாய் என்னையும் இவனுடன் போ என்று சொன்னாலாவது மனம் கொஞ்சம் அமைதியடையும்” என்று மனதில் எண்ணி தாயாரின் காலில் ஆடைகளை வைத்து வணங்கினான்.

சுமத்திரை ஆகாதது அன்றால் உனக்கு - அவ் மனம் இவ் அயோத்தி; மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை - என்றே ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்என்றாள்.   
இராமன் இருக்கும் இடம் அயோத்திஎன்னும் உலக வழக்கையே சுமித்திரை மகனுக்குக் கூறினாள். இராமனையும் சீதையையும் தந்தை தாயாகவும், வனத்தை அயோத்தியாகவும் கருதி இங்குள்ளது போலவே வனத்தில் இரு என்றாளாம்.
இரான் இன்னும் சீதையைப் பார்க்கவேயில்லை. சீதைக்கு விஷம் இன்னும் தெரியவே தெரியாது. ஆயினும் சுமத்திரைக்கு கட்டாயம் தெரிந்தி.ருக்கின்றது சீதை இராமன் இல்லாமல் அயோத்தியில் வசிக்க மாட்டாள் என்பது. அதே போல் இலக்குவனும் இராமன் இல்லாமல் இருக்க மாட்டான் என்பதையறிந்தே அவள் இலக்குவனைப் போக சொல்லுகின்றாள்.

பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன்பின் செல்; தம்பி
என்னும்படி அன்று, அடியாரினின் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின், வா; அது அன்றேல்,
முன்னம் முடிஎன்றனள், வார் விழி சோர நின்றாள்.
சுமித்திரை தன் மகனுக்குத் தந்த இவ்வறிவுரை நினைக்க நினைக்கப் பெருமிதம் தருவதாகும். இராமனுக்கு ஏதேனும் ஆபத்து வரின் அதனைத் தடுக்க உன் உயிரை விடவும்  தயங்காதே என்றாள், ‘முன்னம் முடிஎன்ற சொல்லால். இந் நெடுங் சிலைவலானுக்கு ஏவல் செய அடியன்யானேஎன்று (3778.) அனுமனிடம் இலக்குவன் பின்னர் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்வதும் காண்க.

இராமன் தன்னைப் போலவே மரவுறி அணியும் இலக்குவனிடம் தாயும் தந்தையும் எனைபிரிந்து துயருறும் வேளையில் நீ இங்கு இருந்தது அவர்கள் துயரை தீர்ப்பாய் என்றவுடன் இலக்குவன் நான் உனக்கு செய்த பிழைதான் என்ன இராமனிடம் கூறி
நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;
பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்.
நாள் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர்எனின் உளம்? அருளுவாய்!என்றான்
தண்ணீர் உள்ள வரை மீனும் நீலமும் இருக்கும். அதுபோல, இராமன் ள்ளதுணையும் இலக்குவனும் சீதையும் உளர் என்பதாம். மீன் நீர் உள்ள அளவும் இருந்து நீர்வற்றி இல்லாமற் போனால் இறந்துபட்டொழியும். அது இலக்குவனுக்கு உவமை. நீலம் நீர் உள்ள துணையும் வாழும் நீர்வற்றி இல்லாமற் போனால் காய்ந்து கிழங்காகக் கிடக்கும்; மீண்டும் நீர்வந்துழி முளைவிட்டுத் தளிர்த்து மேல் வந்து பூக்கும். அது சீதைக்கு உவமை. பின்னர்ச் சிலகாலம் இராமனைப் பிரித்து அசோக வனத்தில் இருந்து
வற்றிக் கிடந்து மீண்டும்இராமனைக் கண்டு கூடித் தளிர்த்தாள். ஆதலின்,
சிறிதளவு கூடத் தன்னால் பிரிந்து வாழ இயலாது என்பான் இலக்குவன்.
தன்னை மீனாகச் சொல்லிக்கொண்டான் என்பது நயம். பூமி இருந்தால்
எல்லாப் பொருளும் இருக்கும். அது போல இராமன் இருந்தால்
அனைவரும் வாழ்வர். அருளுவாய்என்று இராமனையே பதில் கூறும்படி வைத்த இலக்குவனது சாதுரியம் ஈண்டு நுகரத்தக்கது. இராமனும் இலக்குவனை வர சம்மதித்தான்.

வசிட்டன் அச்சமயம் அங்கு வந்து “ அரசன் உன்னைப் பார்த்து கட்டளையை சொல்லவில்லை. நீ காட்டிற்கு போக வேண்டிய அவசியமில்லை” என்று கூற இராமன்என் தந்தை இரண்டு வரங்கள் கொடுத்தார். என்னை ஏவியது தாய், சகல சாத்திரங்களும் அறிந்தவர் நீங்கள், இதை எப்படி சொல்லலாம் என்று கூறி சீதையைப் பார்த்து விடை பெறுவதற்கு போனான். 

கம்ப ராமாயணத்தில் மட்டுமே இராமன் சுமத்திரை வீட்டிற்கு தனியாவும் பிறகு இலக்குவனுடனும் போய் விடை பெற்றுக் கொண்டு போனதாகவும் உள்ளது. வால்மீகீயில் இது இல்லை என்கின்றார் வை மு கோ. வரருசி வால்மீகியின் இராமயத்தை கட்டாம் மேற்கோள் காட்ட முடியாது. வரருசியின் கதை படிப்பதற்கு சுவையான கதை மட்டுமே. அதன் நோக்கம் இராமயத்தையும் மீறி எல்லோருக்கும் ஒரே முலம் தான் ஜாதி தான் என்பதை நிலைநிறுத்துவது. ஜாதி வித்தியாசம் பார்ப்பது தவறு என்று சொல்தற்காக மட்டுமே உருவாகியிருக்க வேண்டும்.