Monday, February 17, 2014

ஹாங்காங்





1994 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மதியம், சிங்கபூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக ஹாங்காங் வந்து இறங்கினேன். என் நண்பர் திரு. நடராஜனின் மனைவி, அன்று சீனப் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி இந்தியாவில் கழிக்க நான் வந்து இறங்கிய அதே விமானத்தில் பயணமானார்கள். நடராஜன் வீட்டில் 15 நாட்கள் வாசம். அவர் வீடு இருந்தது தைப்போ மார்க்கெட்(Taipo Market). இவ்விடத்தில் ரயில் மியூசியம் இருக்கின்றது. ஏற்கெனவே சிங்கபூர் மற்றும் துபாயை பார்த்திருந்தாலும், ஹாங்காங் அதிலெல்லாம் வித்தியாசமாக இருந்தது. 40 தளங்களுடன் கூடிய அடுக்கு மாடி கட்டிடங்கள் நகரின் எல்லாவிடத்திலும். தீப்பெட்டி கணக்காக வீடு இருந்தும், எல்லாவசதிகளுமே குறைவில்லாமல் இருந்தன. அவருடைய வீட்டில் சமையல் அறை ஜன்னலின் அருகில் தான் துணி உலர்வதற்கு வழி செய்யப்பட்டிருந்தது. இது கீழ் வீட்டின் சமையல் அறியிலிருந்து சிம்னி புகை வெளியாகும் இடத்திற்கு நேர் மேலாகவிருந்தது. அடுத்த நாள் துணியை எடுத்தவுடன் ஒரே பூண்டு, மீன் மற்றும் மாமிச வாடை வயிற்றை குமட்டிக் கொண்டு வந்தது. அந்த சட்டையையேத் தூக்கிப் போட்டுவிட்டேன். அதன் பிறகு குளியலறையிலேயே துணியை உலர்த்தத் தொடங்கினேன்.

”எங்காவது இஸ்திரி போடுபவன் இருக்கின்றானா?” என்று நடராஜனை கேட்டதற்கு ”ட்ரைகிளீன்  ஷாப் இருக்கு. ரொம்ப காஸ்ட்லி, வாரம் புல்லா விழற துணிகளை இந்த ஊர் வண்ணானிடம் (Laundromat) கொண்டுபோய் கொடுத்தா பவுண்டுக்கு 12 டாலர் வீதம் சார்ஜ் பண்ணி சாயந்திரம் மடித்து கொடுத்து விடுவான். மினிமம் ஒரு பவுண்டுக்குச் சார்ஜ் பண்ணுவான்” என்றார். அவருடைய பிலிப்ஸ் இஸ்திரி பெட்டியில், என் வாழ்நாளில் முதல் முறையாக இஸ்திரி போடத் துவங்கினேன். தெரியாமல் சுட்டு கொண்டு முழங்கையில் நல்ல சூடு ரணங்கள். அப்பாவுடன் இருக்கும் போது வீடுகளில் ஒரு ஒரு வண்ணான் தினமும் வந்து இஸ்திரி செய்து கொடுப்பார். சென்னையிலும் அப்போது நடமாடும் இஸ்திரி வண்டி மிகப் பிரபலம். அத்தை வீட்டில் இரு இஸ்திரிக்காரர்கள்  வண்டியை அங்கே நிறுத்தி வைத்திருந்னர்.. CA படிப்பதற்காக அண்ணாநகரில் இருக்கும் போது தினம் சாயந்திரம் ஒருவர் வந்து இஸ்திரி செய்து கொடுப்பார்.    

பதினைந்து நாள் கழித்து இன்னொரு நண்பருடன் சேர்ந்து சையிங் பூணில்(Sai Ying Pun) கிழக்கு வீதியில் 5 வது மாடியில் வசித்தேன். லிப்ட் கிடையாது. அதனால் இறங்குவது மற்றும் ஏறுவது என்பது ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அலுவலகம் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் தான். அதுவும் நேரம் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. அலுவலக நாட்களில் யாரையுமே நான் பார்க்க முடியாமல் போயிற்று. நண்பர் நடராஜன் சில பழைய பாத்திரங்கள் மற்றும் கரண்டி எல்லாம் கொடுத்து உதவினார். நான் திரும்பி வந்து சாதம் ரசம் வைத்துக் கொண்டு, கடையிலிருந்து வாங்கி வந்த தயிருடன்  இரவு சாப்பாடு சாப்பிடுவேன். ஊறுகாய் எப்போதும் கை வசமிருக்கும். காலையில் மீந்த சாதத்தில், ரசம் போட்டு சிற்றுண்டியாக அதை சாப்பிட்டுவிட்டு தயிர் சாதத்தைப் பிசைந்து மதிய உணவிற்கு எடுத்துச்  செல்வேன். நான் முறையாக, ஒரு சாம்பார், ரசம் கறி சமையல் செய்ய கற்றுக் கொண்டவன். ஆனாலும் சின்ன இடத்தில் சமைப்பது, குறைவான பாத்திரங்களுடன் சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. அதுவும் நிறைய பாத்திரங்களை வேறு எடுத்து கையாண்டு பழக்கம், விதவிதமாக் சமைக்கலாம் என்றால் பாத்திரமும் இல்லை சாப்பிடுவது நான் மட்டுமே எனும் போது அதில் சுவையில்லாமல் இருந்தது. எதோ சாப்பிடவேண்டுமே என்று சாப்பிட்டு வந்தேன்.

செப்டம்பர் மாதம் நான் சையிங் பூனிலேயே மேற்கு வீதியில் லிப்டுடன் கூடிய ஒரு கட்டிடத்தில் முதல் மாடியில் குடி புகுந்தேன். என்னுடைய சர்தார் நண்பன் குல்பீர் சிங்( இவன் சென்னை பல்லாவரத்திலிருந்த HIT காலேஜில் ஏரோநாட்டிகல் படித்தவன்) நன்றாக தமிழ் பேசுவான். இரண்டு ரூம், சிறிய ஹால், ஒருவர் மட்டுமே வேலை செய்யக்கூடிய சமையலறை, பாத் டப்புடன் கூடிய பாத்ரூம் மொத்தமே 575 சதுர அடி(Gross) பிளாட்.  அது முதல் மாடி என்பதால் போடியத்தில் 125 சதுர அடி வெளியிடம் முற்றிலும் கவர் செய்யப்பட்டது கிடைத்தது. அருமையான ஒரு இலவச இணைப்பு இது. இங்குதான் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் மற்றும் முதலில் காஸ் அடுப்பும் வைத்திருந்தேன். அதில் தான் சமையல் செய்வேன், குல்பீர் நன்றாக ”தாலும் சப்பாத்தியும்” செய்வான். என்னுடைய நண்பன் சுதர்ஸன் என்பவனால் அந்த ஏரியாவில் இருந்த சில தமிழர்கள் நண்பர்களாயினர். அதில் குறிப்பிடத் தக்கவர் இரண்டாம் தெருவில் வசித்து வந்த குமார் அவர் மனைவி சுதா மற்றும் அவர் அம்மா. வாரத்திற்கு ஒரு தரம் அற்புதமான டிபன் மற்றும் சாப்பாடு அவர்களுடைய வீட்டில். சுதர்ஸன் அப்போது டெல்போர்ட் கார்டனில் அவன் மனைவி வித்யாவுடன் வசித்து வந்தான். எப்போதுமே தெரியாத பார்த்திராத இரு நண்பர்களை அவன் வீட்டிற்கு சாப்பிட அழைப்பது வழக்கம். எனக்கு அப்படி அறிமுக மானவர்களில் ஒருவன் சிவக்குமார் இன்னொருவன் சாம் எனும் சாம்பமூர்த்தி. இன்று வரையிலும் இவர்களோடு தொடர்பலிருக்கின்றேன்.

நான் ஹாங்காங் வந்தவுடன் முதலில் செய்தது CIMA படிப்பிற்கு விண்ணப்பித்தது. படிப்பை மறந்து போய் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தேர்வுகள். நான் படித்த CA மற்றும் ICWAI படிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தேர்வு முறை. 60 மதிப்பென்களுக்கு ஒரு case study. மொத்த பாடதிட்டத்தையும்  முழுமையாக படிக்காமல் பாஸ் செய்வது என்பது நடக்காது. நவம்பர் மற்றும் மே மாதங்களில் பரிட்சை. நான்கு நிலைகளில் முதல் நிலையிலிருந்து ca படித்திருந்த காரணத்தால் முற்றிலும் விலக்கு அளிக்கபட்டிருந்தது. நான் சொல்லி சுதா-குமாரும்,சிவகுமாரும் கூட CIMA சேர்ந்தனர். என் மனைவி நவம்பர் 9ஆம் தேதி ஹாங்காங் வந்தாள். அவள் வந்தவுடன் எனக்கு அப்போதிருந்த ஒரு சில நண்பர்களை, சாப்பிடுவதற்கு சனிக்கிழமை அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.. அவள் வரும்போது பரிட்சைக்கு தயார் பண்ணுவதில் மும்முரமாகவிருந்தேன். பரிட்சை ஹாலில் ஏற்கெனவே ஒரு முறை அறிமுகாமாயிருந்த பாலாஜி என்கின்ற சந்திரமௌளியையும், ஸ்ரீனிவாசன் என்பவனையும் பார்த்தேன். அந்த முறை இரண்டாம் நிலையில் பாஸ் செய்துவிட்டேன். அதன் பிறகு சிவகுமார், மற்றும் சுதா-குமார் தூண்டுதலினால் அமெரிக்க CPA பரிட்சை எழுதுபவதற்காக Kaplan Instituteன் பாடதிட்டத்தை 3 காப்பி எடுத்து பைலில் போட்டு வைத்திருப்போம் மாசத்திற்கு ஒரு புத்தகம்தான் கிடைக்கும். இதுவும் அங்கு வேலை செய்து வந்தவன் ஒருவனின் தயவால் கிடைத்தது. முன்று பைலில் போடவேண்டும் என்பதனால் சனிக்கிழமை மதியம் தோறும் சிவக்குமார் என் வீட்டிற்கு வருவான். வந்து சாப்பிட்டுவிட்டு வேலையினை செய்வோம். சாயங்காலம் ஆனவுடன் நகரத்தைச் சுற்றி பார்க்க செல்வோம். பசிபிக் பிளேஸ் ஷாப்பிங் மால், ஸ்டார் ஃபெரி, டெல்போர்ட் பிளாசா இல்லை சாயந்திரம் நடந்துவிட்டு மெக்டொனால்ட் போய் சாப்பிட்டு வருவோம். சில சமயம் என் நண்பர் நடராஜனும் இதில் சேர்ந்து கொள்வார். அவரும் CPA பரிட்சை எழுதுகின்றேன் என்றார். அவ்ருக்காக மீண்டும் இன்னொரு பைல் தயார் செய்தோம்.

ஏப்ரல் மாதம் லீவு விட்டவுடன் சென்னையில் படித்து கொண்டிருந்த என் மகன் மாமியாருடன் இங்கு வந்தான். அவனுடன் ஓஷன் பார்க் எனும் தீம் பார்க்கிற்கு சென்றோம். பையன் வரும் போதெல்லாம் குறைந்தது இரண்டு தடவையாவது நான் செல்வேன். என் மனைவி ஒரு தடவை மட்டும் வருவாள். இரண்டாவது தடவை வெய்யிலை காரணம் காட்டி வராமல் இருந்து விடுவாள். என் பையனோ மேப்பை கையில் வைத்துக் கொண்டு அவன் சொல்லும் வரிசையில் தான் செல்ல வேண்டும் என்று முதலிலேயே கண்டிஷன் போட்டுவிடுவான். முதல் முதலாக போகும்போது எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம் எனும் போதே அழ ஆரம்பித்து விட்டான். போட்டோ எடுக்கக் கூடாது என்று, நானும் என் மனைவியும் சீன பாரம்பரிய உடையணிந்து தலைபாககையணிந்து போட்டோ எடுத்து ஒரு சாசரில் பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டோம். என் மனைவி பொதுவாக இந்த மாதிரி விஷயங்கள் எதிலுமே பங்கெடுத்து கொள்ள மாட்டாள். நான் வற்புறுத்தியதின் பேரில் அன்று எடுத்துக் கொண்டாள். அதன் பிறகு மகனை போட்டோ எடுத்து கொண்டால் கார் ரேஸ் விளையாடலாம், என்று சொல்லி போட்டோ எடுத்து அதை ஒர் சீலையில் பிரிண்ட் எடுத்துக் கொண்டோம். இரண்டும் இன்னும் வீட்டில் இருக்கின்றது என்ற போதும் கலர் போய் மங்கலாக ஆகிவிட்டது, இருபது வருடங்களாக வைத்திருப்பதனால் தூக்கி போட மனம் வரவில்லை. சரியாக இரண்டு மாதம் முடிந்தவுடன் மகன் ஊருக்கு கிளம்பிவிடுவான். ஒரு தடவை கூட அவன் அழுது நான் பார்த்ததில்லை. ஆனால் எப்போதும் மறக்காமல் “ஆறாம் வகுப்புக்கு இங்க வந்துடுவேன் படிக்கிறதுக்கு” என்று சொல்வான். அது என்ன கணக்கு என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.

நான் படிக்க ஆரம்பித்த பிறகு வெளியிடங்களுக்கு செல்வதை கூடுமான வரை தவிர்க்க ஆரம்பிதேன். தொடர்ந்து மீதி இரண்டு கட்டங்களையும் முடித்துவிட்டு கடைசி கட்ட மே மாதம் பரிட்சை முடிந்த அந்த சனிக்கிழமை பரிட்சை ஹாலில் பார்த்த ஸ்ரீனிவாசன் எங்கள் குடும்பத்தை சாப்பிடுவதற்கு அழைத்தான். அவன் தங்கியிருந்தது சுதர்ஷன் தங்கியிருந்த அதே டெல்போர்ட் கார்டன். அவன் வீட்டிற்கு கோடை விடுமுறையில் வந்திருந்த மகன், மாமியாருடன் நானும் மனைவியும் சென்றோம். ஸ்ரீனிவாசனுடன் இருந்தவன் காசி ராமன். நாங்கள் உள்ளே நுழையும் போது அங்கே கிரிக்கெட் விளையாடுவதற்காக ஸ்ரீனிவாசனின் நண்பர்களான, ராம், ரவி, நாரயணன், மற்றும் வேறு சிலரும் வந்திருந்தனர். வெளியே ஆடச் சென்றவர்கள் பேய் மழையடித்ததானல் விளையாட முடியாமல் திரும்பிவந்தனர். அன்று அவர்களுடன் பேச ஆரம்பித்ததில் விளைந்த எங்கள் நட்பு, இருபது ஆண்டுகள் கழித்தும், நட்பு வட்டம் மேலும் மேலும் விரிந்து பெரிதாகி கொண்டு, இன்றும் வளர்ந்து கொண்டிருக்கின்றது. என் நண்பர் ரமணி  அவருடைய பிரிவு உபசாரத்தின் போது ”நீங்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதோ, பார்ப்பதோ, பழகுவதோ தற்செயலாகவோ தன்னிச்சையாகவோ நடப்பது அல்ல. எல்லாமே விதிப்பயன் வழியே நடப்பது” என்று சொல்லியது என் மனிதில் ஆழப்பதிந்துவிட்டது. இதை நான் முதல் அத்தியாயத்திலேயே சொல்லியிருந்தாலும் மீண்டும் சொல்வதற்குக் காரணம் எனக்கு சிலரைப் பார்த்த்வுடன் பிடித்தால்தான் உண்டு, இல்லையேல் அவரை பிடிக்காமலேயேப் போய்விடும்.

இராமனும் விதிப்பயன் ஏவினதாலேயே இராஜ்ஜியம் இழந்து சீதையுடனும் இலக்குவனுடனும் குகன் உதவியால் கங்கையை கடந்து காட்டிற்குள் நுழைந்தான். காட்டிற்குள் நுழைந்தவுடன் வெப்பம் தணிந்து மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன.  இவனுடைய வரவினால் காட்டில் வெப்பம் குறைந்து குளிர்ச்சிபெருகியதை கோடையிலும்.

பந்த ஞாட்புறு பாசறை,      பொருள்வயின், பருவம்
தந்த கேள்வரை உயிர் உறத்      தழுவினர், பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையின்      கொதிப்பது -அக் கழலோர்
வந்த போது, அவர் மனம் எனக்  குளிர்ந்தது - அவ் வனமே!
போர்களத்தில் பாசறையின் கண்னுள்ள கணவனைபிரிந்த மனைவியர் போலும், பொருளீட்டச்சென்ற காதல் கணவன் ”இந்த காலத்தில் வருவேன் என்று சொல்லி பிரிந்தமையால் முன்பு அக்கணவனை இடையிறாது தழுவி மகிழ்ந்திருக்கும் வாசனை வீடும் மலர் கூந்தலுக்குச் சொந்தக்காரியான  மனைவியின் உள்ளம் போலும் அனல் போல் கொதிக்கும் தன்மையுடையது, அந்தக் காடு. அதுவோ இப்போது இம்முவரும் வந்த போது, பிரிந்து சென்ற அந்த கழலணிந்த காதலர் திரும்பி வந்தால் காதலியின் மனம் எவ்வளவு மகிழ்ந்து குளிர்ந்திருக்குமோ அவ்வளவு குளிர்ந்தது. எப்போதுமே அருகேயேயிருக்கும் பொருளின் சிறப்பு உணரப்படுவதேயில்லை. அதுவே சிறிது பிரிந்து பிறகு மீண்டும் வரும்போதோ உணரப்படுகின்றது என்பது நாம் வாழக்கையில் தவறாமல் சந்திக்கும் நிகழ்ச்சிதானே.
Nature Forest Green Forest River wallpaper 
மூவரும் சிறிது நடந்து சென்றபின் சித்திரக்கூடமலையினை கண்டனர்.
வாளும் வேலும் விட்டு அளாயின      அனைய கண் மயிலே!
தாளின் ஏலமும் தமாலமும்      தொடர்தரு சாரல்,
நீள மாலைய துயில்வன      நீர் உண்ட கமஞ் சூல்
காளமேகமும் நாகமும்      தெரிகில - காணாய்! 
வாளும் வேலையும் ஒன்று சேர்த்து ஒன்றினுள் ஒற்றாக கண்களில் வைத்திருக்கும் மயிலின் சாயாலையடையவளே, மலையடிவாரத்தில் ஏலக்கொடியும் மணமுள்ள பச்சிலைக் கொடிகளும் நிறைந்த இம்மலையின் சாரலிலே, நீரை கர்ப்பத்திலே சுமக்கும் மேகங்களும் உறங்குகின்றன. அவற்றிர்க்கும் மலையில் மேல் உறங்கும் யானைகளுக்கும் வித்தியாசமே தெரிவதில்லை எனும் வியப்பினை இராமன் சீதைக்குக் காட்டினான்.
அளாயின- அளாய –கலந்த. அளவளாவுதல் என்பதும் இப்பொருள் பற்றியதே.

வடம் கொள் பூண் முலை மட மயிலே!      மதக் கதமா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி      அமைதொறும் தொடக்கி,
தடங்கள்தோறும் நின்று ஆடுவ,      தண்டலை அயோத்தி
நுடங்கு மாளிகைத் துகிற்கொடி      நிகர்ப்பன - நோக்காய்!
”முத்துவடத்தையணிந்த தனங்களையுடைய இளைய மயில் போன்றவளே! மதம் பிடித்துச் சீறும் மதயானையும் உண்டு செரித்துக் கொள்ளும் தன்மையுடைய மிகபெரிய வயிருடைய மலைப்பாம்புகள் உரித்த தோல்கள் மலையின் அடிவாரத்திலுள்ள மூங்கில்களில் பிணைந்து ஆடுவது, துகிற்கொடிகள் ஆடும் அயோத்தி நகரத்து மாளிகைகள் போல் விளங்குவதைப் பார்” என்று சீதைக்கு இராமன் காட்டுகின்றான். என்னதான் வெளியிடத்துக்கு வெளிதேசங்களுக்கு வந்துவிட்டாலும், நாம் பிறந்து வளர்ந்த ஊரை மறப்பதோ நாம் காணும் அனைத்திலும் அதன் கூற்றைக் காண்பதோ தவிர்க்கவியலாது என்பதைத்தான் கம்பன் இராமன் கூற்றாக வைத்தானோ என்று எனக்குத் தோன்றுகின்றது. இன்றைக்கும் என் குடும்பத்தினரும், அதே வடபழனியிலிருந்து வரும் என் நண்பன் குமாரும், காலையில் ஆறரை மணிக்கு ராம் தியேட்டர் வளாகத்திலிருந்த ராம் பவன் ஓட்டலில் கிடைக்கும் இட்லி, வடை, பொங்கல், தோசை, சாம்பார் மட்டும் கெட்டி சட்னியை நினைக்காமலிருக்க முடிவதில்லை. அதன் சுவை சரவணபவன் ஹோட்டலிலும் மேலானது என்பது எங்கள் அபிப்ராயம். சரவண பவன் வருவதற்கு முன்பெல்லாம் வடபழனி ஆற்காட் ரோடில் கோவில் வரை ஏழு எட்டு சிறிய ஓட்டல்கள் இருந்தன. ராம் தியேட்டரே கல்யாண மண்டபமாகிவிட்டது. ராம் பவன் இருந்த இடம் மினி ஹாலாக மாறியே 12 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.

மலையிலிருந்து வீழும் அருவிகளை பார்த்துக் கொண்டே செல்லும் அவர்கள்
உருகு காதலின் தழைகொண்டு      மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந் தேனினை      முழைநின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு      பிறை மருப்பு யானை,
பருக, வாயினில், கையின்நின்று      அளிப்பது - பாராய்!
”பிறைமதி போன்ற தந்தத்தையுடைய யானை, முதிர்ந்த கர்ப்பத்தையுடைய தன்னுடைய இளைய பெண்யானைக்கு, மனம் உருகிய அன்பினால், மலைக்குகையிலிருந்து எடுத்த செந்தேனினை, தழை கொண்டு, ரீங்காரமிடும் வண்டுகளை ஓட்டி,தன் கையினால் அப்பெண்யானையினது வாயருகில் ஊட்டிவிடுவதை பார்” என்ற அழகான காட்சியதனை இராமன் சீதைக்குக் காட்டுகின்றான்.

இந்த ஆண்யானைதான் இவர்கள் முதலில் வரும்போது நீரினால் சூல் கொண்ட மேகத்தை தன் பெண்யானையென்று பிடிக்க தன் நீண்ட துதிக்கையை தூக்கியது போலும்.யானைகளின் வழித்தடங்களையெல்லாம் மறித்து காட்டையும் கணக்கில்லாமல் நாம் அழித்துக் கொண்டிருக்கின்றோம். யானை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது கோவில் யானைகள் தாம். நான் பள்ளியில் படிக்கும் போது திருவண்ணாமலையில் ஒரு சிறிய யானை இருந்தது. பெயர் கணேசன் . நான் பார்த்திருந்த ஹாடாரி எனும் திரைப்படத்தில் வரும் “பேபி எலிபண்ட் வாக்” இசைதான் ஞாபகம் வரும் ஸ்கூல் விட்டவுடன் கோவிலுக்குப் போய் அதற்கு ஒரு வாழைப்பழம் கொடுத்து விட்டு அதை பார்க்கும் போது அது தன் சிறிய கண்ணால் சிரிப்பது போலிருக்கும். சில சமயம் தொட்டியிலிருக்கும் தண்ணீரை உறிஞ்சி பவுண்டன் போல அடிக்கும் இரண்டே வருடங்களில் வளர்ந்து மிகப்பெரியதாகிவிட்டது. அதன் சேட்டைகளும் குறைந்து தனிக் கம்பீரம் வந்துவிட்டது. எல்லாக் கோவில்களிலும் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது என் வழக்கம். பள்ளியில் நான் சிறுவனாக படித்த முதல் யானைக் கதை டைலரும் யானையையும் பற்றியது இதை படித்த போது யானைக்கு அவ்வளவு ஞாபகசக்தியிருக்குமா என்று வியப்பதுண்டு. அதன் பிறகு காமாட்சியம்மன் கோவில் யானை ”மீட்சிக்கு” சிகிச்சையளிக்கும் குழுவிலிருந்த என் மாமா டாக்டர். கிருஷ்ணமூர்த்தியுடம் கேட்டறிந்தபோதுதான் அதன் ஞாபகசக்தியும் அதன் குடும்ப பாசமும், அது தன் கூட்டத்தினருக்கு காட்டும் பாதுகாப்பும் அறிந்து கொண்டேன். மீதி எல்லா விலங்குகளிலும் ஆண்தான் அரசனாகவிருக்கும் போது, யானை மந்தைகளில் வயது முதிர்ந்த பெண்தான் தலைவி. அதே போல் யானைகள் இடம் மாறி மாறிப் போகும் போது உணவு கிடைத்தவிடத்திலும் அதை பகிர்ந்து கொள்வதில் நிச்சயிக்கப்பட்ட வரன்முறையிருக்கும். முதலில் கர்ப்பிணிகள், பிறகு குழந்தைகள், பிறகு வயது வரிசைக்கிரமாக மற்றவர்கள். கடைசியில் தான் தலைவி. இந்திய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் வளரும் ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண் இரண்டிற்குமே தந்தங்கள் வளரும்.
ஆண் சிங்கம் வேட்டைக்கு போகாது. பெண் சிங்கங்கள்தான் கூட்டமாக வேட்டைக்கு போகும். வேட்டையாடி எடுத்தவந்த மிருகத்தை முதலிம் ஆண் சிங்கம் வயிறு முட்ட சாப்பிட்டவுடன் மீதியிருக்கும் பங்குதான் மற்றவைகளுக்கு. அதனால் தான் அதற்கு “ Lion’s Share” என்றே பெயர். ஆனால் யானைகளோ விலங்கியலிருந்து மிகவுமே மாறுபட்ட, கிட்டதட்ட ஒரு நாகரீகமடைந்த மனித சமூகத்தின் வழக்கத்தைக் கடைபிடிப்பது போலிருந்தது. சிந்திக்க ஆரம்பித்த மனிதன் அவற்றிடமிருந்துதான் ஒரு தலைவன் எப்படி இருந்தால் அறமாகும் என்று தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே!
மருவு காதலின் இனிது உடன்      ஆடிய மந்தி
அருவி நீர்கொடு வீச, தான்      அப் புறத்து ஏறி,
கருவி மா மழை உதிர்ப்பது ஓர்      கடுவனைக் - காணாய்!      
 
”நீங்காத பெண்மை என்று சொல்லப்படும் ஒருடலுக்கு உயிர் போன்றவளே! மிகுந்த காதலுடன் இன்பமாக ஆண்குரங்குடன்(கடுவன்)  நீராடிய பெண் குரங்கு(மந்தி) அருவி நீரை தன் இணையின் மீது வீச, ஆண்குரங்கானது உடனே மலை மீது ஏறி மேகத்தை ஏறி அதைப்பறித்தி மழை வருவித்து பெண் குரங்கை நனையவைத்து தன் ஆண்மையை காட்டும் அழகினைப் பாராய்” என்று இராமன் சீதைக்கு காட்டுகின்றான்.
கருவி – தொகுதி எனப்பொருள்படும் -  உரிச்சொல்.(தொ). இங்கு தொகுதியாவது இடி, மின்னல் முதலியவற்றின் கூட்டம்.
ராணி எனும் பத்திரிகை முன்பு வாரம் புதன் கிழமை வரும். அட்டையில் “”இது ஒரு குடும்பபத்திரிக்கை” என்று கொட்டைஎழுத்தில் எழுதியிருக்கும். 3ம் பக்கம் ”இந்த வார கவர்ச்சிப்படம்” என்று ஏதோ ஒரு நடிகையின் புகைப்படம் இருக்கும். அதே போல் “குரங்கு குசலா” என்று கார்ட்டூன் வேறு வரும் ஒரு பெண்ணிற்கு குரங்கு முகத்துடன் சேலைகட்டிய வடிவம். அவள் பேசுவது போல அந்த் கார்ட்டூன் இருக்கும். அழகில்குறைந்தவர்களை குரங்கு என்று கேலி செய்வது பாலிருக்கும். ஒரு குடும்பப்பத்திரிக்கை என்று அறிவித்துக் கொண்டு எப்படி பெண்ணினத்தை ராணி“குரங்கு குசலா” என்று கூறியது,  அதை மாதர் சங்கங்களும் எப்படி பொறுத்துக் கொண்டன என்பது எனக்கு புரியவில்லை.


நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும்      நேரிழை! நிறை தேன்
வனைந்த வேங்கையில், கோங்கினில்,      வயின்தொறும் தொடுத்துக்
குனிந்த ஊசலில், கொடிச்சியர்      எடுத்த இன் குறிஞ்சி
கனிந்த பாடல் கேட்டு      அகணமா வருவன - காணாய்!
நினைக்கும் போதே அமிழ்த்தை உண்டது போன்ற மகிழ்ச்சியூட்டுகின்ற நேரிய அணிகளை அணிந்தவளே! மிகுந்த தேனால் நிறைந்த வேங்கை மரத்திலும் கோங்க மரத்தினிலும் பக்கங்கள் தேரும் வளைத்து ஆடுகின்ற உஞ்சளில் ஆடிக் கொண்டு, இனிய குறிஞ்சிப்பண்ணால் அமைந்த பாடல்களை குறச்சியர் பாட, அந்த இனிமையை அனுபவிக்க அகணமா ஓடிவருவதைப் பாராய்.
நினைத்த போதிலும் அமிழ்து ஒக்கும்—இது இக்குறளை நினைவுறுத்திடும்

உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

அகணம்- இனிய இசையை நுகரவரும் ஒரு விலங்கு.ஒருவகை பறவை என்பாரும் உளர்-(பிங்கலந்தை).இதையே அசுனம் என்றும் சொல்லுவதும் உண்டு.  இன்னோசையை முதற்கண் எழுப்பி இவ்விலங்கினை வரவழைத்து.  அது இனிய இசையில்சொக்கித் தன்னை மறந்து நின்றவழி வலிய ஓசையை எழுப்பி அதனை இறந்துபடச் செய்து பிடிப்பது குறவர் வழக்கம். 
வளைகள் காந்தளில் பெய்தன      அனைய கைம் மயிலே!
தொளை கொள் தாழ் தடக்      கைந் நெடுந் துருத்தியில் தூக்கி,
அளவு இல் மூப்பினர் அருந்தவர்க்கு,      அருவி நீர் கொணர்ந்து,
களப மால் கரி குண்டிகைச்      சொரிவன -  காணாய்                                       
வளையல்களைக் காந்தள் மலரில் இட்டு வைத்தாற் போன்ற கைகளை
உடைய மயில் போல்பவளே!; பெரிய யானைக் குட்டிகள் ளவுபடாத முதுமை
உடையவர்களாய அரிய தவ முனிவர்களுக்கு அருவியில் உள்ள நீரை
துவாரத்தைக் கொண்ட தொங்குகிற பெரிய தமது கையாகிய நீண்ட
தோல்பையிலே முகந்து கொண்டு வந்து முனிவர்கள் கமண்டலத்தில்
ஊற்றுவனவற்றை காண்பாய்.
சித்திரகூட  மலையின்பண்பு நலம் கூறியதாம்.  களபம் - யானைக்கன்று.   முப்பது  வயதுடைய யானையைக்குறிக்கும் என்பர். துருத்தி - தோல்பை. (தண்ணீர் முகக்க உதவும்.) அஃறினைகளான விலங்குகளும் தவம் மேற்கொண்ட முனிவர்களுக்கு எப்படியெல்லாம் உதவுகின்றன என்பதை பல பாடல்களின் வழியாக சுட்டிக் காட்குகின்றார். அறவழியில் தவத்தோர் நிற்பதால் விலங்குகளும் தம் பகையை மறந்து சித்திரக்கூடப் பகுதியில் வசித்தன.
மயில்கள் தன் அடர்ந்த தோகையால் முனிவர்களது ஹோமகுண்டத்தை அணையாமல் பாது காக்கின்றன. அதே போல் குரங்குகளும் ஏன் பண்றிகளும் கூட உதவுகின்றன அம்மலையில் மாதவர்களுக்கு என்றும்,     ஆண் குரங்குகள் மா, பலா, வாழை என்னும் பழங்களைத் தருகின்றன, பன்றிகள் கிழங்குகளைத்தருகின்றன என்பதாம். கிளிகள் லை நெல், தினைக் கதிர், சோளக் கதிர்,அவரைகள்;உடலால் வளைவு பொருந்திய மூங்கிலிற் பிறந்தமென்மையான அரிசி ஆகியவற்றை பொய்யை ஓட்டிய
முனிவர்களது ஆசிரமக் குடில்கள் தோறும்நுழைந்து கொடுத்து அன்பு செய்வனவற்றைக் கண்டார்கள்.
இடி கொள் வேழத்தை எயிற்றொடும்     எடுத்து உடன் விழுங்கும்.
கடிய மாசுணம், கற்று அறிந்தவர்என அடங்கிச்
சடை கொள் சென்னியர், தாழ்வு இலர் தம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பந் பாராய்!
இடி போலப் பிளிறுதல் கொண்ட யானையை தந்தத்தோடு ஒருசேரத் தூக்கிவிழுங்கி விடக்கூடிய கொடிய மலைப் பாம்பு, நூற்பொருளைக் கற்றுத்தெளிந்தவர் போல அடக்கம் உடையதாய் (தம் ஆற்றலைஒடுக்கிக் கொண்டு சடா முடியை  உடைய முனிவர்கள் சரிதல் இல்லாதவராய் தாமே மலையின் மேல் மிதித்து ஏறிச் செல்லும்படி படிக்கற்களைப் போல மலை அடிவாரங்களில் கிடக்கின்றவற்றைப் பாராய்!
ஆற்றல் சான்ற மலைப்பாம்புகள் அடங்கி இருத்தலுக்குக் கற்றுணர்ந்தவர் அடக்கம்உவமையாகும். தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிஎன்ற சிந்தாமணியை  இங்குக்(நாமகள் - 53) கருதுக.  மலைப் பாம்புகளும் படிகளாகக் கிடந்து  முனிவர்கள் தாழாது  மலையேற உதவியது.
மாலையும் வந்தது.  இரவு நேரம் வருதலின் குரங்குகள் மரங்களைப்பார்த்தன. ஆண்யானையும் பெண்யானையும் தங்கள் இருப்பிடம் செல்லும் வழியினை நோக்கின. பறவைகளோ தம் கூடு உள்ள நீண்டவழிகள் (?) பார்த்தன. மெய்பொருளை நோக்கி அறிவதற்கு உரிய இராமன் மாலைக் காலத்தில் செய்வதற்கு உரிய கடமைகளை செய்யத் தொடங்கினான். இலக்குவனும் அவனோடு சேர்ந்து கொண்டான். இதற்கு முன்னால் இராமன் சீதையிடம் சொன்னபோது ( u mean while he was discussing the nature with her ?) இலக்குவன் மட்டும் தனியே இவர்கள் தங்குவதற்கு பர் சாலையமைத்தான். அவன் அதை எப்படி அமைத்தான் என்பதை

நெடுங் கழைக் குறுந் துணி நிறுவி, மேல் நிரைத்து,
ஒடுனக்கல் இல்நெடு முகடு ஒழுக்கி, ஊழுற
இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி, எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே.
நீண்ட மூங்கில்களின் சிறியதுண்டுகளை நிறுத்தி மேலே வரிசையாக அமைத்து,
வளைதல் இல்லாத நீண்ட தூலத்தை நேராக நிறுத்திமுறையாகப் பொருந்தக் கீழே தாழ்தல் இல்லாத பக்கக் கழிகளை மேல் ஏற்றி நன்கு இறுக்கிக் கட்டிவளைதல் இல்லாத அந்தக் கட்டியவரிச்சுக்களின் மேலே எவ்விடத்தும்   விரித்து மூடி செய்து, தேக்கின் இலை கொண்டு மேல் கூரையைச்செறிய மூடி, பிறகு பூத்துவிளங்கும் நாணற் புல்லை மேலே பரப்பி;
கீழேநிறுத்தப் பெற்ற மூங்கில் கழிகளால்  சுற்றுப்பக்கமெல்லாம் சுவரைச் செய்து அதன்மேல் மண்ணை அடித்து தண்ணீரால் மெழுகிப் பூசினான்.
பிராட்டிக்காக தனியாக ஒரு குடில், குங்குமச் சாந்து குழைத்து சுவர்கள் சமைத்து உட்புறம் ஆற்றில் கிடைத்த முத்துக்களையும் மாணிக்கங்களையும் கோர்த்து அலங்கரித்திருந்தான் இலக்குவன்.
மேவு கானம், மிதிலையர்கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன்;
தா இல் எம்பி கை சாலை சமைத்தந்
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே? (pls dbl chk)
மிதிலா நகரத்து அரசனாகிய சனகன் மகளாகிய சீதையின் பூவைக் காட்டிலும் மிக மெல்லியவாகியபாதங்களும் கொடிய காட்டில் நடந்து  வந்தன. குற்றம் அற்ற என் தம்பியின் கைகள் குடிலைஅமைத்துத்  தந்தன;எந்தத் துணையும் இல்லாதவர்களுக்குவந்து  சேராதன எவை (ஒன்றும் இல்லை.)
 ‘பாதமும்என்ற  உம்மை சிறப்பும்மைமென்மைத் தன்மையை
நோக்கியது.    
என்று சிந்தித்து,இளையவற் பார்த்து, ‘இரு
குன்று போலக் குலவிய தோளினாய்!
என்று கற்றனை நீ இதுபோல்?’ என்றாந்
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்.
ன்று இவ்வாறு நினைத்துஇலக்குவனைப் பார்த்து இரு மலைகளைப்போலப் பொருந்திய தோள்களை உடையவனே!;  நீ இவ்வாறு குடில் அமைப்பதற்கு எப்பொழுது கற்றுக் கொண்டாய்?; கேட்டவனாய் நெருங்கிய தாமரை போலும்கண்கள் நீர் சிந்தப் பெறுகின்றவனாக ஆனான்.
அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்,
படரும் நல் அறம் பாலித்து, இரவியின்
சுடரும் மெய்ப் புகழ் சூடினென் என்பது என்?
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள்என்றான்.
தயரனது சத்தியவாக்கைக் காப்பாற்ற வனம் புகுந்து  புகழ் சூடினேன்
ஆயினும், ஒரு பாவமும்அறியாத தம்பியான உனக்கு வனத்தில் என்னோடு
அலைவதாகிய துன்பத்தை நெடுநாளாக இழைத்துள்ளேனேஎன்று  இராமன்
இரங்கியதாகக் கொள்க. பிறருக்குத் துன்பம் செய்து தனக்குப் புகழ் உண்டாக
நடப்பது  அறநெறி ஆகுமா என்றான் இராமன்.     

அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும்
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான்.
எந்தை! காண்டி, இடரினுக்கு அங்குரம்
முந்து வந்து முளைத்தது அன்றோஎன்றான்
இராமன் வருந்திக் கூறியது கேட்ட இலக்குவன் நீ மூத்தவனாகப்
பிறந்ததனாலேயே வனவாசமாகிய துன்பத்தை அனுபவிக்க வேண்டியவனாக
ஆகிவிட, உனக்குப் பணிவிடை செய்வதில் உவப்பாய் இருக்கும் எனக்குத்
துன்பம் இழைத்ததாக நீ சொல்வது சரியாகுமா?’ என்று கேட்பது போல
இலக்குவன் மறுமொழி கூறினான். எனக்கு இது மகிழ்ச்சி தருவதுஉன்
துன்பமே பெரிதுஎன்றானாம். இனி, இவ்வாறன்றி உன்னால் எனக்குத்
துன்பம் பெரிது உண்டாகவில்லை; துன்பத்துக்கு முளை முன்னாலேயே
கைகேயியாகிய என் தாய் பெற்ற வரத்தால் வந்து தோன்றிவிட்டது
அல்லவா? இதனால் நீ நெடுநாள் எனக்குத் துன்பம் இழைத்ததாகக் கருதி
வருந்துதல் சரியன்றுஎன்றானாகக் கூறுதல் பொருந்தும். ஆயினும், அது
இலக்குவன் தான் துன்பம் உறுவதாகக் கூறுவதாகப் பொருள் படும்.
ஆதலின், அது பொருந்தாது. பொதுவாக இத்துன்பத்துக்கெல்லாம்
காரணம் நின்னால் ஆகியதன்று; முன்னரே தயரதன் கைகேயிக்கு வரம்
தந்ததனால் உண்டாகியதே. இதற்கு நீ வருந்துதல் தகாதுஎன்றானாகவும்
கூறலாம்.                
பின்னும் தம்பியை நோக்கி, பெரியவன்,
”மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு, இதற்கு
என்ன கேடு உண்டு? இவ் எல்லை இல் இன்பத்தை
உன்னு, மேல் வரும் ஊதியத்தோடு” என்றான். இராமன் மறுபடியும்;இலக்குவனைப் பார்த்து; (உலகில்) பெறும்
பொருட்செல்வத்திற்கு இவ் வளவு என்று ஒரு எல்லை உண்டு;இந்த வனவாசத்  
தவம்ஆகிய செல்வத்துக்கு என்ன அழிவு உண்டு; - இந்த அளவுபடாத அழிவுபடாத இன்பவாழ்க்கையைமறுமையில் இத்தவத்தால் பெறும் நற்கதியாகிய இலாபத்தோடு சேர்த்து நினைப்பாயாக;’  என்றான்-.
     அரசச் செல்வம் அழிவுடையது; அளவு உடையது. ஆனால்தவச்
செல்வமோ அழிவற்றது;அளவற்றது; மறுமைக்கும் பயன் தரவல்லது.
ஆகவே அரச போகத்தைவிட, வனவாசமே எனக்கு மகிழ்ச்சி தருவது
ஆதலின், எனக்குத் துன்பம் விளைந்ததாகவே நான் கருதவில்லைஅதனை
நினைத்து நீதுன்புறுவானேன்என்றானாம் - இது இடரினுக்கு அங்குரம்
முந்தி வந்து முளைத்தது அன்றோஎன்றுஇலக்குவன் கூறிய சொற்களுக்குப்
பதில் போல் அமைந்து ஆறுதல் தருவதாயிற்று.              
அவர்கள் அமைதியாக அவ்விடத்தில் தங்கி அமைதியான வாழக்கை வாழத் துவங்கினர். ஆனாலும் எப்போதுமே நாம் எதிர்பார்ப்பது நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவையேது?


    

No comments:

Post a Comment