டெல்லியில் இருந்த 7 மாதங்களில், அதற்கு முன் தீபாவளி பட்டாசில் இரட்டை சரம் எலெக்டிரிக் வெடியில் பார்த்த RED FORTஐ பார்க்க பஸ்லில் போகலாம், என்று பஸ் நம்பரை எல்லாம் கரெக்ட்டாக கேட்டுக் கொண்டு நின்றால் பஸ் நம்பரும் இந்தியில். ஆங்கிலம் எங்கோ பின்னால் கண்ணுக்குத் தெரியாத இடத்தில். எல்லா பஸ் கண்டக்டரும் “லால் கீலா, லால் கீலா” என்று கத்திக் கத்திக் கூப்பிட்டாலும் தமிழ் அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரிந்த என் சிற்றறிவிற்கு அது தான் ” RED FORTஎன்று தெரியாமல், தோல்வியைத் தழுவி வீடு வந்தேன். பிறகு மன்னியிடம் கேட்டு என் அறியாமையை போக்கி கொண்டு போய் பார்த்த போது பெரிய சுற்றுலா தலமாகவும், மொழி தெரியாத காரணத்தால் மற்றவர் வைத்த கைட் என்ன சொல்கின்றார் என்றும் புரியாமல், வீடு வந்தால் போதுமென்று திரும்பினேன். எனக்கு RED FORT பிடிக்கவில்லை.மெட்ராஸில் பீச் ரோடு வழியாக முன் மாலை வேளைகளில் டவுனிலிருந்து ஸ்கூட்டரில் வரும் போது, போகும் போது வியர்வையில் நனைந்த உடலை வருடும் குளுமையான கடல்காற்று St. George கோட்டையை ஏறெடுத்து பார்க்க வைத்ததில்லை.
திருவண்ணாமலையிருந்து இரண்டு சகோதரர்களும் மாமா நாரயணனுடன்” (அம்மாவின் மாமா பையன். என் அம்மாவழி தாத்தாவீட்டில் வளர்ந்து படித்தவன். எங்களுடனேயே வசித்து வந்தான்) ஒரு நாள் விடியற்காலையில் கிளம்பி செஞ்சிக் கோட்டைக்குச் சென்றோம். வெயில் வருவதற்கு முன் ராணி கோட்டை மற்றும் ராஜா கோட்டை ஏறி மேலிருந்து பச்சை தாவணி அணிந்திருக்கும் ”டேனிஷ் மிஷன் பள்ளி” பெண் பிள்ளைகள் போல் தோற்றமளிக்கும் வயல்களைப் பார்த்தோம். செஞ்சிக்கு அருகில் வணக்கம்பாடி எனும் கிராமத்தில் வசித்து வந்த மாமாவின் சொந்த அக்கா அத்திம்பேர் அவர்கள் பசங்களையும் பார்த்து விட்டு, அன்றிரவு அவர்கள் வீட்டில் தங்கி, அடுத்த நாள் காலை திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.
வேலூரில் அப்பாவின் ஆபிஸ் கோட்டையிலிருந்தது. இக்கோட்டை 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டது. அவர்கள் காலத்தில் இது “ராயவேலூர் கோட்டை” . விஜயநகர அரசர்களுக்குப் பிறகு சத்ரபதி சிவாஜி, அதன் பிறகு ஆற்காடு நாவாப், கடைசியில் ஆங்லேயர்களும் என இக்கோட்டையைக் கைப்பற்றினர். விஜய நகர சாம்ராஜயத்தை சேர்ந்த வாரிசு ஒருவர் மர்மமான முறையில் இக்கோட்டையில் கொல்லப்பட்டார் என்பதும், அங்கிலேயர் காலத்தில் கடைசி இலங்கை அரசன் மற்றும் திப்பு சுலதான் குடும்பத்தினர் இக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும் ஊரிலே சொல்வார்கள். அதே போல் இந்தியாவின் முதல் சிப்பாய் கலகம் நடந்த இடமும் இதுதான். நாங்கள் மூன்று சகோதர்களும் என்றாவது அப்பாவின் ஆபிசுக்கு செல்வோம். அகழியில் தெரியும் கோட்டையின் பிரதிபிம்பம் அந்த இடத்தையே அழகாக மாற்றிவிடும். அகழியில்
முதலை இருப்பதாக கூறியதை நம்பியிருக்கின்றேன். போலிஸ்காரர்கள் பயிற்சி நிலையம் கோட்டையில் இருந்ததால் எப்பொதும் நிறைய போலிஸ்காரர்கள இருப்பர். இவர்களை வைத்தே “அதிகாரமில்லாத போலிஸ்” என்பது வேலூரின் ஏழு அதிசயங்களில் ஒன்றானது அப்போது கோட்டையில் இருந்த கோவிலில் சாமி சிலை ஏதுமில்லை. கோவிலிலிருந்து வெளியூர் செல்வதற்கு நிறைய சுரங்கப்பாதைகள் இருந்ததாக கூறப்பட்டதை, நம்பி கிணற்றிலிருந்து யாரேனும் வெளி வருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்போம். 6 மணிக்கு கொடியிறக்கப் பட்டு கோட்டை தன்னை மூடிக் கொண்டுவிடும்.
இன்று வரையரைச் செய்யப்பட்ட தேசங்களின் எல்லை கோடு போல், முந்நாளில் மக்கள் சிறு குழுக்களாக வசித்த போது இல்லை. பல்வேறு சிறு குழுக்கள் தங்களில் வலிமையுள்ள பெரியவன் ஒருவனுடன் சமரசம் செய்து, அவனுக்கு சேனை மற்றும் விளைச்சலில் பங்கீடளித்து, எல்லைகளைக் காப்பது போன்ற பணிகளை செய்து, பெண் கொடுத்து, பெண்ணெடுத்து, சண்டைகளைத் தவிர்த்து, சமாதானத்தைப் பேணி அதன் மூலம் வளமையை பெருக்கி வாழிவியல் ஆதாரங்களளையடைந்தது.
குறுநிலக்கிழார்கள், அரசர்கள் மற்றும் பேரரசர்கள் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் கோட்டையையும் அகழியையும் வசிப்பிடங்களையும் கட்டி அதில் வசித்துவந்தனர். அதனால்தானோ தமிழ் மரபில் நகரவர்ணனையில் கோட்டை மதில். அகழி, கொடி, மாளிகைகள் அங்கு வசிக்கும் மக்கள் என்ற வரிசை கிரமமாக வர்ணனை செய்வது வழக்கமாயிற்று.
அயோத்தியா நகர வர்ணனையில் கம்பர்
செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்.
வவ்விய கவிஞர் அனைவரும். வடநூல் முனிவரும். புகழ்ந்தது; வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும். தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர். இழிவதற்கு அருத்தி புரிகின்றது - அயோத்தி மா நகரம்.
வவ்விய கவிஞர் அனைவரும். வடநூல் முனிவரும். புகழ்ந்தது; வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும். தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர். இழிவதற்கு அருத்தி புரிகின்றது - அயோத்தி மா நகரம்.
நல்ல கவிதைக்கு உரிய இயல்புகளை முற்றிலும் கொண்ட கவி நாயகராகிய கம்பர் பல இடங்களில் நற்கவிதை மற்றும் மாகவிதையின் இயல்புகளைக் கூறுவார்; அவற்றுள் இஃது ஓர் இடம். கவிதைக்கு இன்றியமையாதவை இனிய சொற்கள்; அந்தச் சொற்களிலே அழகு இருக்க வேண்டும்; அழகு என்பது பல்வகைச்செம்மையால் அமைவது. அழகோடு இனிமை சேர வேண்டும்.செம்மையும் இனிமையும் மட்டும் போதா; சொல்லப்படும் பொருளும் நல்லதாக இருக்கவேண்டும். செம்மை. இனிமை. நற்பொருள் இவற்றைக் கொண்டுதரும் சொற்கள் சீரியனவாய். நுட்பம் சுட்டும் கூர்மை கொண்டனவாய் இருத்தலும் இன்றியமையாதது. ‘செவ்விய. மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய தீம் சொல் வவ்விய கவிஞர்’ என்ற தொடர் கொண்டே சிறந்த இலக்கியத் திறனாய்வையும் இலக்கியக் கொள்கையையும் உருவாக்கலாம்.
அயோத்தியை வர்ணிக்கும்போது
நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள் வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்? மதில்கள் பல்வேறு வகையாகக் கட்டப்படிருக்கின்றன அயோத்தியா கோட்டையின் மதில்கள் பொன்னாலானது.
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள் வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்? மதில்கள் பல்வேறு வகையாகக் கட்டப்படிருக்கின்றன அயோத்தியா கோட்டையின் மதில்கள் பொன்னாலானது.
மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால். வேதமும் ஒக்கும்; விண் புகலால்.
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும். திண் பொறி அடக்கிய செயலால்;காவலின். கலை ஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால். காளியை ஒக்கும்;யாவையும் ஒக்கும். பெருமையால். எய்தற்கு அருமையால். ஈசனை ஒக்கும்.
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும். திண் பொறி அடக்கிய செயலால்;காவலின். கலை ஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால். காளியை ஒக்கும்;யாவையும் ஒக்கும். பெருமையால். எய்தற்கு அருமையால். ஈசனை ஒக்கும்.
வேதம் மிகப்பரந்து நுண்பொருள்களை உள்ளடக்கி முடிவு காண முடியாதிருத்தல் போல அம்மதிலும்மிகப்பரந்து நுண்னிய வேலைப்படுகளைக் கொண்டு முடிவுகாண முடியாதிருக்கின்றதென்றும், தேவர்கள் விண்ணுலகத்தை அடைந்திருத்தல் போல மதிலும் உயர்ச்சியால் விண்ணுலகத்தை அடைந்திருக்கின்றதென்றும், முனிவர் ஐம்பொறிகளையடக்கி நிற்பது போல் மதிலும் பல்பொறிகளைத்(சினத்து அயில். கொலை வாள். சிலை மழு.தண்டு.சக்கரம் தோமரம்.உலக்கை கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல: கொதுகின் இனத்தையும்.உவணத்து இறையையும் இயங்கும் காலையும்இதம் அல நினைவார் மனத்தையும். எறியும் பொறி உள என்றால். மற்று இனி உணர்த்துவது எவனோ?) தன்னுள்ளடக்கிக் கொண்டிருக்கின்றதென்றும், சூலம் தாங்கியதால் காளியைப் போலும், மாற்றரசர்க்கு அடைய முடியாததால் அப்பரம்பொருளை ஒத்திருந்தது என்கின்றார் கவி.
விலைமகளிரின் குணத்தை பல இடங்களில் கூறும் கவி, மதிலைச் சுற்றியிருக்கும் அகழியை .
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி.
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய். புன் கவி எனத் தெளிவு இன்றி.
கன்னியர் அல்குல்- தடம் என யார்க்கும் படிவு அருங் காப்பினது ஆகி.
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;- நவிலலுற்றது நாம்.
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய். புன் கவி எனத் தெளிவு இன்றி.
கன்னியர் அல்குல்- தடம் என யார்க்கும் படிவு அருங் காப்பினது ஆகி.
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;- நவிலலுற்றது நாம்.
கீழ்ப்போதலால் விலை மாதர் மனமும், தெளிவின்மையால் புல்லறிவாளர் கவியும், காவலுள்ளமையால் கன்னியரல்குல் தடமும், அகப்பட்ட பொருளைப் பற்றிக் கொண்டு வருத்தும் முதலையையுடமையால் ஐம்பொறிகளும் அகழிக்கு உவமையாக கூறுமிடம் இது.
அப்படிபட்ட மதிலும் அகழியும் சூழ்ந்தவிடத்திலுள்ள மாளிகைகள் மிக நெருக்கமாகவும் உயர்ந்தும் வரம்புஇல்(இந்த தொடரையும் கம்பர் பல இடங்களில் பயன் படுத்துகின்றார்.) எண்ணிக்கையிலும் உள்ளன என சித்தரித்துக் காட்டும் கவி, மாளிகையின் தூண்களுக்கு விலை மகளிரை ஒப்பிடுமிடம் இது.
பாடகக் கால்அடி பதுமத்து ஒப்பன.
சேடரைத் தழீஇயின. செய்ய வாயின.
நாடகத் தொழிலின. நடுவு துய்யன.
ஆடகத் தோற்றத்த. மகளிர் போன்றன.
சேடரைத் தழீஇயின. செய்ய வாயின.
நாடகத் தொழிலின. நடுவு துய்யன.
ஆடகத் தோற்றத்த. மகளிர் போன்றன.
மாளிகைகளில் உள்ள வேலைப்பாடமைந்த தூண்களின் அடிப்பகுதி அஸ்திவாரத்தின் ஆழத்தால் நாகலோத்தாரை தழுவுவதாகவும், வேலை திறத்தால் செப்பமுள்ளனவும், விரும்பிக் காணும் உள்வேலையை உடையனவும் நடுவிடமெல்லாம் சுத்த வெளியாய்யுள்ளனவும், பொன்னினாலாகிய வெளியமைப்பை உடயனவுமான அவை, பாடகமெனும் ஆபரணமைந்த காலெனும் அடித்தாமரையை பெற்றிருத்தலும், யௌவன புருடர்களை தழுவுவதாலும், செந்நிறவாயுடனிறத்தாலும் தம்முடைய இடை சிறுத்திருத்தலால் பஞ்சின் தொடர் நுனியை பொன்போல் மேனியை உடையவராதலால் மாளிகைகள் விலை மகளிரை ஒத்தன எனகின்ற இப்பாட்டில் அடைமொழிகளின் ஒற்றுமையால் ஒருவிஷயத்தை வருணிக்கையில் மறைமுகமாக விலை மகளிரை குறிக்கும் மற்றொரு பொருள் தொனிப்பதை காண்க. நம் இன்றைய மொழியில் “double meaning”. ஆனாலும் எவ்வளவு அழகு. கடைசி வரி “ஆடகத் தோற்றத்த. அளவு இலாதன” என்பது கம்பன் கழகம். இப்படியும் ஒரு பாடம் உண்டு என கூறும் வை மு கோ, ”மகளிர் போன்றன” என்றே பதிப்பித்திருக்கின்றார். ”மகளிர்” எனும் நேரடி தன்மையான பொருளைத் தரும் வார்த்தையை கம்பன் பயண்படுத்தியிருப்பான் என்பது நம்பதகுந்ததாக் இல்லை.
தொடரும்
தொடரும்

No comments:
Post a Comment