பெரியண்ணன் ராகவனின் கல்யாணம் பெங்களூரில். எங்கள் குடும்பம் தவிர எங்கள் சித்தி சித்தப்பா அவர்கள் குழந்தைகள் மூவர், அம்மாவின் மாமா(சாமு), மாமாவின் மகன்(நாரயணன்), பாட்டி என மொத்தம் 20 பேர். விழுப்புரத்திலிருந்து சித்தூருக்கு ”மீனாக்ஷி எகஸ்பிரசில்” ஏறி திருவண்ணாமலை வேலூர் வழியாக சித்தூர் சென்றோம். எல்லா சாமான்களையும் ஏற்றியிறக்குவது என்பது சாமு மாமா, நாராயணன் மற்றும் அண்ணன் கணேசனுடைய பொறுப்பு. என் தம்பி சித்தி பசங்கள் இவர்களை ஒழுங்காக ஏற்றி இறக்கவேண்டியது என் பொறுப்பு. ராகவனுக்கு பாட்டி அம்மா இவர்களை ஏற்றி சீட்டில் உட்காரவைக்க வேண்டிய பொறுப்பு. அக்காக்கள் இருவருக்கும் எல்லோருக்கும் உணவளிக்கும் பொறுப்பு என பலவாறாகப் பிரித்து நன்றாகாவே இணைந்து பணியாற்றினோம்.
சித்தூர் வீட்டில் பந்தக்கால் நட்டு வாழை மரம் கட்டப்பட்டு பந்தல் போடப்பட்டிருந்தது. வீட்டிற்குள் நுழைவதற்கு முன் அப்பா அம்மா மற்றும் அண்ணனுக்கு மட்டும் ஆரத்தி எடுத்தனர். மதராசிலிருந்து மாமா, அத்தைகள், அத்திம்பேர்கள், அவர்கள் பசங்கள் என மொத்தம் 65 பேருக்கும் மேல். சிலருக்கு ரெகுலர் பஸ்ஸில் டிக்கெட் வாங்கியிருந்தனர். சித்தூரிலிருந்து பெரிய பஸ் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார் அப்பா. சுமங்களி பிரார்த்தனை மற்றும் சுவாமி சமாராதனையெல்லாம் வீட்டிலேயே. சமையலுக்குக் கூட வெளியிருந்து ஆட்கள் வரவில்லை.. காமாட்சி அத்தை, பத்து அத்தை, ஞயானா அத்தை, அம்மா மற்றும் பிரேமா மாமி இவர்களே ஹெட் குக். சுத்து வேலைக்கு சித்திகள் (சாந்தி, நித்தாய்), என் அக்காக்கள் இருவர். எச்சலிட பரிமாற என தங்கைகள். எல்லா வேலைகளுமே வீட்டிலுள்ளோர் மட்டுமே அவர்களுக்குள்ளேயே பேசி பங்கிட்டுக் கொண்டனர்.
அருமையான கலந்த சாத சாப்பாடு எல்லாம் தயார் செய்து கொண்டு, பஸ் வீட்டிற்கு முன் வர முதல் ஆளாக நான் பஸ்சின் மேலே ஏறி நின்று கொண்டேன். ரொம்ப நாளக மனதிலிருந்த ஆசை அன்று நிறைவேறியது. சமான்களையெல்லாம் மேலே ஏற்றி தார்பாலின் போட்டு கட்டிவிட்டு சூரக்காய் உடைத்து விட்டு கிளம்பினோம். சித்தூர் வீட்டைப் பார்த்துக் கொள்வதற்காக கீரிம்பேட்டையிலிருந்து ராதாபாய் மாமியும் அவர் மகனும் வந்திருந்தனர். வழியில் ஒரிடத்தில் பெரிய கிணற்றுடன் கூடிய வெளியில் அமர்ந்து சாப்பிட்டோம். அந்த கிணற்றில் நம்மூர் கிணறுககளிலிருப்பது போல் ஏற்றமோ இல்லை மாடு இழுப்பது போலிருக்கும் மாதிரியான அமைப்போ இல்லை. நடுவில் பெரிய சக்கரத்தில் பல வாளிகள் சாய்மான கோணத்தில் கொண்டிருந்த்து. சகக்ர்ம கீக்ஷே போகும் தண்ணிரை முகர்வதற்கும் மேலே வர வர கட்டப்ட்டிருக்கும் கால்வாயில் நீரை விடுவதுமாக பார்பதற்கு புதுமையாகவிருந்தது.
மதியம் போய் பெங்களூர் அடைந்தோம். அன்று இரவு தான் நிச்சயதார்த்தம் மற்றும் ஜானவாசம். அடுத்த நாள் காலையில் கல்யாணம். கல்யாணம் முடிந்தவுடன் ஊர் சுற்றிப் பார்க்க அவரவர் வயது துணையுடன் கிளம்பினோம். எனக்கு பெரிய அண்ணன் பணம் கொடுத்திருந்தான். நான் மற்றும் என் அத்தை மகன்கள் இருவரும் விஸ்வேஸ்வரய்யா மூயூஸியம் பார்த்தோம். இரண்டு மணி நேரம் கழிந்த்து. சுமாராக இருந்த ஒரு பாரில் ஆளுக்கு இரண்டு பாட்டில் பீர் மட்டுமே குடிப்பது எனத் தீர்மானித்து(அதில் ஒருவன் குடிக்கவில்லை என்றான். ”குடிக்கலேன்னா பரவாயில்லை. ஆனா பைசா மட்டும் குடுத்திடணும். உன் பேரை சொல்லி நாங்க குடித்துக் கொள்கின்றோம். முடிக்கும் போது மணி மாலை 4.30. வாசனை தெரியாமல் இருக்க ரோஜா பாக்குப் போட்டும் சத்திரம் வந்த உடனேயே குளித்து விட்டே ரிசப்ஷ னுக்கு தயாரானேன். அடுத்த நாள் காலை டிபன் சாப்பிட்டு விட்டு கட்டு சாதம் கட்டி கொண்டு சித்தூர் நோக்கி பயணம், மன்னியடனும் மேலும் சில பெட்டிகளுடனும். சென்றது போலவே அதே ரயிலேறி மீண்டும் விழுப்புரம் வந்தடைந்தோம்.
அப்போதெல்லாம் எல்லோருமே சத்திரத்தில்தான் தங்குவோம். தலையணை நிச்சயமாகப் பத்தாது. இரவில் சினிமா பார்த்து விட்டு வருபவர்கள் கட்டாயம் சிறுவர்களிடமிருந்து தலையனைகளை உருவிவிடுவர். அதே போல் இரவெல்லாம் நடக்கும் சீட்டாட்டம். காசு வைத்துதான் விளையாடுவார்கள். அதனால் நாங்கள் பங்கேற்க முடியாது என்றாலும் ஒவ்வொருத்தருக்கு ஆலோசகர்களாகயிருப்போம். நான் எப்பவும் எங்கள் கடைசி சித்தப்பாவிற்கு ஆலோசகன். அவர் அவசரமாக எழுந்து போகவேண்டியிருந்தால் அவர் வரும் வரை நானே ஆடுவேன். ஆடுவது முழுவதும் அப்பா, சித்தப்பா, மாமா, அத்தைமகன்கள் என்பதால் குடும்ப பழங்கதைகள் மற்றும் அவரவர் உத்தியோக ரீதியில் வரும் சங்கடங்கள் மற்றும் மறக்கமுடியாத சம்பவங்கள் என்று பொழுது விடிவதே தெரியாது.
ஒரு சமுயம் என் கடைசி சித்தப்பா ரொம்ப பெருமையாக” இந்த வருஷம் காந்தி ஜெயந்தி அன்னிக்கு சித்தூர் வீட்டிலிருந்த காந்தி படத்துக்கு மாலையணிவித்தேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த போதே இரண்டாவது சித்தப்பா ” பிராந்தியடிகள் காந்தியடிகளுக்கு மாலையிட்டார்” எனறார். சிரித்து முடிப்பற்குள்ளே இன்னும் கொஞ்சம் ”போடுவான்” (இட்லி பஞ்சு போல் வருவதற்காக ஒரு கைப்பிடி உளுந்து அதிகமாகப் போட்டு ஊறவைத்து அரைப்பது வழக்கம். அந்த ஒரு கைப்பிடி உளுந்தை எங்கள் குடும்பத்தில் “போடுவான்” என்பர்) சேர்த்து பல வகையாக மாற்றி விட்டோம்.
ஒலையுடன் மிதிலையிலிருந்து புறப்பட்டவர்கள் அயோத்தியைடைந்து திருமண விஷயத்தை தசரதனிடம் சொல்ல அவனும் மிக்க மகிழ்ந்து அவர்களுக்கு பரிசும் கொடுத்து, மறுவோலையையும் கொடுத்து, இராமனின் திருமண செய்தியையையும் மக்களையும் சேனையையும் புறப்படச் சொல்லவும் முரசரைவதற்கு ஏற்பாடு செய்தான். .
தசரத மன்னனின் ஆணைப் படி இராமனின் கல்யாண வைபவம் அறிவிக்கப்பட்டவுடன் அவனுடைய சேனைகள், மக்கள் அனைவரும் புறப்படுகின்றனர். அவன் இன்னும் அவையை விட்டே எழுந்திருக்கவில்லை. ஆனால் அவன் சேனையின் மிகுதியால் அது மிதிலை புறவாசாலையடைந்தது.
உழுந்து இட இடம் இல்லை உலக எங்கணும்
அழுந்திய உயிர்கு எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து படரும் சேனையின்
கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே!
அயோத்தியினின்று மிதிலை வரையில் கூடிய ஒரு படர் கொடி போலும் எனும் குறிப்புத்தோன்ற “ படரும் சேனையின் கொழுந்து போய்” என்றார். சீதாராம கல்யாணத்தின் பொருட்டு நிகழும் எழுச்சியாதலின் “எள்ளிட இடமின்று என்னாது மங்களகரமாக உழுந்து(உளுந்து) இட இடமின்றி” எனக் கூறினார்.
பாலகாண்டத்தினை நான்கு தொகுதிகளாகப் பிரிக்கலாம். அதில் கடைசியாக வருவது சந்திரசைலப்படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய்படலம், நீர்விளையாட்டுப்படலம், உண்டாட்டுப் படலம் முதலியவை. இந்த ஐந்துபடலங்களையும் எடுத்துவிட்டாலும் கூட காப்பியத்தில் பெரிதாக ஒன்றும் குறை பாடு வராது. ஆனாலும் இதை கம்பன் இவ்விடத்தில் சேர்த்திருக்கின்றான். காரணம் தொலகாப்பிய விதியிருந்தாலும் சேர்த்ததனால் மட்டும் இது பெருங்காப்பியமாகிவிடவில்லை.
ஏதோ ஒரு கால ஒட்டத்தில் மக்கள் மனதில் கிளுகிளுப்பு உண்டாவதற்காக இந்த ஐந்து படலங்களியும் வைத்திருக்கின்றான் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அது மட்டுமில்லாமல் பல்லவராஜ்ஜியத்தில் மற்றது எப்படியிருந்தாலும் மக்கள் இன்ப வாழ்க்கை, இன்பவேட்டையில் இறங்கிவிட்டிருக்கின்றார்கள் என நினைக்கத் தோன்றுகின்றது. அதே நிலைதான் சோழ சாம்ராஜ்ஜியத்திலும் தொடர்கின்றது. தசரதன் பல மனைவியருடன் வாழ்ந்தான் எனக் கூரிய கவி செல்வந்தரில் சிலர் இப்படியும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை காட்டவேண்டும் என்பதற்காகவே இப்படலங்களைப் படைத்தான் எனத் தோன்றுகின்றது. இம்மாதிரி குறிக்கோளில்லாமல் மக்கள் வாழந்ததைப் பார்த்த 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அப்பர் ” மக்கள் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஒடுகின்ற வகையில் சீரும் சிறப்புமாகத்தான் வாழ்கின்றனர். ஆனாலும், என்ன பயன். குறிக்கோள் இல்லாமல் வாழ்கின்றனர்” என்பதைத்தான் தன் தேவராத்தில் “ குறிகோளிலாது கெட்டேன் “ என்று பாடுகின்றார். கம்பன் அதனால்தான் நாட்டுப் படலத்தின் முதல் பாடலிலியே ”ஆசலம் ஐம்பொறி வாளியும் புறம் செலா கோசலம்” என்கின்றான்.
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
போகிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான்; நெறி அந்தரில் சென்று ஒரு
மூரி மா மத யானையை முட்டினான்.
ஒரு மாதின் கச்சையணிந்த தனங்களில் வைத்த கண்களை பேர்ந்து வாங்கிடாது விளங்குகின்ற முகத்தினையுடைய ஒருவன், தான் செல்ல வேண்டிய வழியைக் காணமுடியாதவனாகி, குருடர்களைப் போல் ஒரு வலிமையுள்ள பெரிய மத யானையின் மீது முட்டிக் கொண்டான்.
இன்னொரு இளைஞனோ ஒரு பெண்ணிடம் பேச வேண்டியே
தரங்க வார் குழல் தாமரைச் சீரடிக்
கருங் கண் வாள் உடையாளை ஓர் காளைதான்
நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்
மருங்குல் எங்கு மறைத்து வைத்தீர் என்றான்.
1000 வருடங்களுக்கு முன் இராஜராஜ சோழன் காலத்து ஐம்பொன் சிலைகள்தான் இந்தியர்களின் (ஆண்களுக்கும் பெண்களுக்குமான) அழகை அளவெடுத்து நிறுத்தியது. இன்று மிக புகழ் பெற்றிருக்கும் “ 0 சைஸ்” க்கும் இதுவே மூலம். முன்பு கொடியிடைப் போல் கல்யாணத்திற்கு முன் இருக்கும் பெண்கள் பலர் கல்யாணம் ஆன பிறகு, அதிலும் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, வாழ்க்கையே முடிந்துவிட்ட திருப்தியில் உடலை பேணுவதில் கவனமே செலுத்தாமல் இருந்தனர். இன்றோ உடலை மட்டுமே பேணுவதில் மிக கவனம் செலுத்தி வேறு எதைப் பற்றியும் அக்கரையின்றி இருக்கின்றனர் என்பதும் வருத்தப்பட வைக்கின்றது.
தசரதனின் சேனை சந்திரசைல மலையடிவாரத்தில் தங்கி அடுத்த நாள் காலை சோணையாற்றின் கரையில் உள்ள சோலையை அடைந்தது.
பூ எலாம் கொய்து கொள்ள பொலிவு இல் துவள நோக்கி
“யாவை ஆம் கணவர் கண்ணுக்கு? அழகு இல் இவை” என்று எண்ணி
கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழையப்பூட்டி
பாவையர் பனி மொன் கொம்பை நோக்கினர். பரிந்துநிற்பார்.
அங்கு மலர்களையெல்லாம் கொய்துவிட்டதினால் தங்கள் கணவர்கள் கண்ணுக்கு அப்பூங்கொடிகள் அழகில்லாமல் போய்விடுமே என்று வருந்தி தாங்கள் அணிந்திருந்த முத்து, பவளம் இரத்தின ஆரத்தையும் பூங்கொடிகளுக்கு அணிவித்து அவற்றைப் பரிவுடன் நோக்கினர். தம் நலங்கருதாத் தகைமையர் அம்மகளிரென்பதும், கணவர் கண்ணுக்கு இனிமையாகத் தோன்றுவதே தமது கடமையென்று கொண்டுள்ளாரென்பதும் இங்கு பெறப்படும்.
மயில் போல் வருவான் மனம் காணிய காதல் மன்னன்
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர
பயில்வாள் இறை பண்டு பிரிந்து அரியாள் பதைத்தாள்
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள்.
ஒரு மன்னவன் தான் பிரிந்தால் தன் மனைவி எவ்வாறு வருத்தபடுவாள் என அறியும் பொருட்டு ஒரு மாதவி பந்தலில் மறைந்திருக்க, ஒரு போதும் கணவனை பிரிந்தரியாத அவள், உயிரை நாடித் திரியும் உடம்பு போல கணவனைத் தேடி உழன்றாள்
செம்மாந்த தெங்குன் இளநீரை ஓர் செம்மல் நோக்கு
’அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்’ என்ன
‘எம்மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன?’ என்று ஓர் ஏழை
விம்மா வெதும்பா வெயரா முகம் வெய்துயிர்த்தாள்.
ஓங்கி வளர்ந்த தென்னை மரத்திலுள்ள இளநீர்க்காயை ஒரு தலைவன் நோக்கி ஆச்சர்யத்துடன்” இவை மகளிரின் தனங்கள் போலத் தோன்றியுள்ளன” எனக் கூற அது கேட்ட பேதமைக் குணமுடைய பெண் ஒருத்தி “மங்கையர் கொங்கை” என கணவன் பொதுப்பட பன்மையாகக் கூறியதால் வருந்தினாள்.
தைக்கின்ற வேல் நோக்கினள் தன் உயிர் அன்ன மன்னன்
மைக் கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப
மெய் கொண்ட நாணம் தலைக் கொண்டிட விம்மி மென் பூக்
கைக் கொண்டு மோந்தாள்; உயிர்புண்டு கரிந்து அன்றே!
ஒரு மன்னவன் தன் மனைவியினெதிர் மாற்றவள் பேரைச் சொல்லியழைத்தானாக அது கேட்ட அம்மங்கை பிறமாதர் முன் அவமானமடைந்ததனால் தலையிறக்கம் கொண்டு கண்ணீர் விட்டு, தன் நிலை பிறர்க்குத் தெரியாதிருக்க வேணுமென்ற கருத்தினால் தன் கையில் கொண்ட பூவை மோந்தவண்ணம் குனிந்து நிற், அவளிடைய உள்ளத்து வெதுப்பினால் மோந்த அம்மலர் கரிந்து போய்விட்டது எனக் கூறும் கவி, அம்மாது ”தன்னுயிரே இவன்” என்னுமாறு பேரன்புள்ளவளாக இருக்கையில் அவன் அவ்வாறு இல்லாத காரணத்தால் அத்தலைவிக்கு மிக்க அவமானம் நேர்ந்தது என்று நேரிடையாக சொல்லாமல் புரியவைக்கின்றார்.
அந்த நாட்களில் பெண்கள் அவ்வளவு வெள்ளந்தியாகவா இருந்திருப்பார்கள் என்ற நினைப்பே இனிக்கின்றது. இன்றைக்கு பெண்களிடம் ஆண்கள் படும் பாடு வடிவேலு பாஷையில் “ ரூம் போட்டு யோசிப்பாங்களோ” என்ற ரேஞ்சில் தான் இருக்கின்றது. எனக்கும் என் மனைவிக்கும் வரும் சண்டையில் பெரும்பாலான விஷயங்கள் எங்களுக்கு துளிக் கூட சம்பந்தமில்லாதது. கல்யாணமான புதிதில் இவர்கள் காலனியில் தெலுங்குகாரர்கள் மாடியும் கீழுமாக வீடு கட்டியிருந்தனர். வீடு அழகாகவிருந்தது. என் தந்தை சிவில் எஞ்சினியர். என் அண்ணா அப்போதுதான் சாலிகிராமத்தில் வீடு கட்டியிருந்தான். பொதுவான என் ஈடுபாட்டாலும் வீடு கட்ட எவ்வளவு ஆகும் என்பது குறித்து எனக்கு சரியாகத் தெரியும் என்று நம்பிக்கை. அவர்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது “ 50-60 லட்சத்திலே நல்லாவே கட்டியிருக்கான்” என்றேன். என் மனைவிக்கோ அவளுடைய அம்மா போய் அவர்கள் வீட்டை பார்த்துவிட்டு வந்து வர்ணித்ததிலிருந்து குறைந்தது ஒன்றறை கோடியாவது அதற்கு செலவழித்திருப்பார்களோ என்று அபிப்ராயம். அண்ணாநகர் போகும் வரைக்கும் போய் மன்னி வீட்டிலும் தொடர்ந்தது எங்கள் வாக்குவாதம்.
”உங்களுக்கு என்னத் தெரியும். வீடு முழுக்க மார்பிள் போட்டிருக்கா”
”மார்பிள் விக்கற ரெட் சன் மார்பிள் என்னுடைய கிளையன்ட். வேணா அவன் கிட்டேக் கூட்டிண்டு போறேன். நீயே கேட்டுப்பார். அவன் கிட்டேயிருக்கிற காஸ்ட்லியான மார்பிள் 1800 சதுரடிக்கு எவ்வளவு ஆகும்னு. சும்மா ஒண்ணும் தெரியாமா பேசவேண்டியது”
”நானா ஒண்ணும் தெரியாம பேசறேன். உங்களுக்குத் தான் ஒண்ணும் தெரியாது. அவன் வீட்டுலே எல்லா பெட்ரூம்லேயும் பால்ஸ் சீலிங் போட்டு ஏசி போட்டிருக்கா”
”நான் எல்லாத்தையும் மனசுல வெச்சிண்டுதான் என்னுடைய காஸ்டிங்கை சொன்னேன்”
“நீங்கள்ளாம் எப்படியோ ஒண்ணும் தெரியாமலேயே சீ ஏ பாஸ் பண்ணிட்டீங்க” வீட்டில் நுழைந்ததும் இதே ரீதியில் எங்களுடைய வாக்கு வாதம் தொடர்ந்தது. நான் என் அப்பாவைக் கேட்கின்றேன் என்றதற்கு அவருக்கு சென்னை பத்தி ஒண்ணும் தெரியாது என்றாள். எனக்கோ பயங்கர கோபம். பிறகு மன்னி “யார் எவ்வளவு செலவழிச்சி கட்டினாலும் உங்களுக்கு என்ன? உங்களுக்காக் கொடுக்க போறான். பேசாம வாயை மூடிண்டு டிபன் சாப்பிடுங்க” ஆனாலும் அடுத்த இரண்டு நாளும் எங்கள் வாக்குவாதம் தொடர்ந்தது. எனக்கோ அவள் போய் பார்க்கமலேயே அவள் அம்மா சொல்வதை மட்டும் வைத்து என்னிடம் சண்டையிடுகின்றாளே என்ற வருத்தம். என் அப்பாவைக் கேட்டதற்கோ நான் சொன்னதை விட 5 லக்ஷ்ஷம் கம்மியாகத்தான் சொன்னார்.
யாழ் ஒக்கும் சொல் பொன் அனியாள் ஓர் இகல் மன்னன்
தாழத் தாழாள்; தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள்
ஆழ்ந்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும்
சூழற்கே தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்
கணவன் தன்னை வணங்கி நிற்கவும் ஊடலினால் ஒருத்தி அவனை மதியாதிருந்தாள். முகம் பெறாமையால் அவன் அவ்விடத்தினின்று நீங்கிச் சென்றான். அவள் “ஒருகால் வேறொரு மங்கையைத் தன் கணவன் சேர்ந்துவிடுவானோ?” என்ற எண்ணத்தையும் கொண்டு “தானே கணவனை நாடிச் செல்வது என்றாள் அது தன் தலைமைக்கு இழுக்காம்” என்ற கருத்தினால் முதலில் தன் கிளியை அவனுள்ளவிடத்துக்குப் போக்கி, அக்கிள்ளையைத் தேடிச் செல்பவள்போல அத்தலைவி கணவனை நாடிச் சென்றாள். கணவன் மீது ஐயங்கொண்டனளென்பதை “ஆழ்த்துள்ளுங்கள்ள நினைப்பால்” என்றார். பாடபேதமாக “ஆழத்துள்ளும் கள்ளம் நினைப்பாள்’ என்றும் உள்ளது. அதற்கு வை மு கோ கணவனை நாடிச் செல்வதென்று தான் கொண்ட கருத்து முகக்குறிப்பு முதலிய எவ்வகையாலும் வெளிப்படாதபடி தன் நெஞ்சிற்குள்ளேயே கிடக்குமாறு நினைப்பவளென்று கருத்து கொள்ளுதலும் உண்டு.
காக துண்ட நறும் கலவை களி
ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால்
பாகு அடைந்த பனிக் கனி வாய்ச்சியர்
வேகடம் செய் மணி என மின்னினார்
உடம்பிர் பூசிய அகிலோடுக் கூடிய நறுமணமுள்ள சந்தன சேறு யாவும் நீரில் விளையாடிதனால் அழிந்திட்டதனால் பாகின் தன்மையுள்ள இன் சொற்கள் பொருந்திய குளிர்ந்த கோவைப்பழம் போன்ற வாயையுடைய மகளிர் சாணை பிடித்த இரத்தினம் போல விளங்கினர். பாகடர்த்த என்ற பாடத்திற்கு பாகைப்பகைத்த இன் சொல்லுடைய மாதர் என்றும் பாகடர்ந்த என்ற பாடத்திற்கு பாகின் இனிமை மிகுந்த என்றும் பொருள் கூறுவர்.
களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனங் குழை கள்ளின் உள்ளால்
வெளிப்படுகின்ற காட்சி வெண் மதி நிழலை நோக்கி
‘அளித்தனென் அபயம்; வானத்து அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை; அஞ்சல்! என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள்.
ஒருத்தி கள்ளுண்ட மயக்கத்தாற் சாடியிளுள்ள கள்ளினுள்ளே பிரதி பிம்பமாகத் தோன்றும் சந்திரனை உண்மை சந்திரனே இராகுவுக்கு அஞ்சி அங்கு ஒளிந்திருப்பதாகக் கொண்டு அபயமளித்து சில உணர்த்தலானாள். உணர்த்துகின்றாளென்ற சொல்லினாற்றலால், பிறருக்கு இன்னாதவற்றை ஒருவன் முற்பகலிர் செய்தால் அவ்வினைப் பயன் பிற்பகலில் தானே தீப்பயனை விளைக்கு மென்பதையும், இன்னா செய்யப்பட்டவரிட்த்துச் சென்று குறையிரக்குங்காலமும் நேர்தல் கூடுமென்பதை உணராமல், யான் கணவனை பிரிந்த காலத்திலும் ஊடிய காலத்திலும் நீ வெவ்விய நிலாவை என் மீது வீசி வருந்தினாயன்றோ! அங்ஙனம் செய்த நீ வானத்து அரவுக்கு அஞ்சி எந்து மதுஜாடியுள்ளே பதுங்கும் காலமும் வந்ததல்லவா? இனியாவது நீ முன்போற் செய்யாது நல்லொழுக்கத்தை மேற் கொள்க என்று அறிவுறுத்தினாள் என்ற கருத்து தோன்றுமென்பார்.
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி வேந்தன் வந்து
எதிர்த்தலும் தன் மனம் எழுந்து முன் செல,
மதிமுகம் கதுமென வணங்கினாள்; அது
புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்ததே.
தினம் தின்ம் நடக்காத புதுமையாக மதுவருந்திய காதலி வணங்கவும் அதனால் அந்த வணக்கம் எத்தனை கோபத்தையடக்கியதோ என்று தலைவன் வருந்துவதாக கவி கூறுவது சாலப் பொருத்தமே.
புள் உறை கமல வாவிப் பொரு கயல் வெருவி ஓட
வள் உறை கழித்த வாள்போல் வசி உற வயங்கு கண்ணாள்
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள) மஞ்சை அன்னாள்
“உள் உறை அன்பன் உண்ணான்” எஅனஉன்னி நறவை உண்ணாள்
நீர்ப் பறவைகள் வாழ்கின்ற தாமரைத் தடாகத்திலுள்ள ஒன்றோடொன்று மோதுகின்ற கயல்மீன்கள் ஒப்பாகாமல் தாம் நிலைகெட்டு ஓடும்படி, தோலாற்செய்த உறையினின்றும் உருவியெடுத்த வாட்படை போலக் கூர்மைமிக விளங்குகின்ற கண்களையுடையவளும், தேன் தங்கிய மலயணிந்த மெல்லிய கூந்தலையுடையவளுமாகிய ஒருத்தி தனது மனத்தினுள் எப்போதும் தங்குகின்ற தனது காதலன் மதுவை உண்ணானென்ற காரணத்தினால் தானும் மதுப்பருக எண்ணாதவளாயினாள்.
கலாசாராக் காவலர்களாக காட்டிக் கொள்ள முயலும் பா மா கா ராம்தாஸ், திருமா வளவன் கர்நாடகாவில் அனுமன் சேனா இவர்கள் எல்லாம் இதைப் படித்தால் என்ன நினைப்பார்கள். ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர்ந்து மதுவருந்திகின்றார்கள். கூடி களைக்கின்றார்கள். எல்லாமே ஒரு நிதானத்தில் ஒரு அளவில் இருந்ததால் தவறில்லை என்பது அன்றைய நிலை. ஏதோ ஐ டி வந்துதான் நம் கலாச்சார சீரழிவு ஏற்பட்டது என்பது எத்துணை அபத்தம். சமுகம் என்பது அசைவில்லாத மாற்றமில்லாத ஒரு விழுமியத்தை உள்ளடக்கியது அல்ல. ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டேயிருப்பது தக்கான புதிய விழுமியத்தை தேடிக் கொண்டேயிருப்பது.