சித்தூர் பாட்டி இரவில் படுத்து தூங்குவதற்குமுன் எங்களுக்கு எல்லாம் தன் நினைவிலிருந்து மஹா பக்த விஜயம், இராமாயணம் மற்றும் மஹாபாரத்திலிருந்து கதைகள் சொல்லுவார். எனக்கு மஹாபாரதத்தில் மூன்று பாத்திரங்கள் பரிதாபத்திற்கு உரியவை எனத் தோன்றும். கர்ணன், கடோத்கஜன் மற்றும் அபிமன்யு. அபிமன்யு அர்ஜுனனின் மகன். சுபத்திரையின் வயிற்றில் கர்பத்திலிருக்கும் போது, அர்ஜுனன் சக்கரவியூகத்தைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கையில் சுபத்திரை தூங்கிவிட, ”ஊம்” கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்ததாம் கருவிலிருந்த குழந்தை. சக்கரவியூகத்தின் உள்ளே புகுவது முழுதையும் கேட்டது. வெளியே வருவதைப் பற்றி அர்ஜுனன் ஆரம்பிக்கும் முன்னே கிருஷ்ணன் அர்ஜுனனை அழைத்துச் சென்றுவிட்டார். அபிமன்யுவிற்கு சக்கரவியூகத்திற்கு உள்ளேச் செல்லத் தெரியும். உடைத்து வெளியே வரத்தெரியாது. யுத்தத்தில் பரிதாபமாக இறந்தான்.
பாட்டி கதை சொல்லும் போதெல்லாம் ”ஏன் அப்படி செய்தார் கிருஷ்ணர்? இவனும் பாண்டவ குடும்பம்தானே?”என்றால், ”அபிமன்யுவும் அரக்க குணமுடையவன்; பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்த கடோத்கஜன் மற்றும் கர்ணண் போல, இவா எல்லாரையும் இந்த அவதாரத்திலேயே முடித்துவிட வேண்டும் என்பது பகவான் சித்தம். சும்மா சும்மாவா அவதாரம் எடுக்க முடியும் பகவானால்” என்று முடித்து விடுவார். அதற்கு மேல் கேட்க தோன்றியதில்லை. பாட்டி மிக அருமையாக கதை சொல்லும்போது கேள்வி கேட்டு அநாவசியமாக அவ்வனுபவத்தை இழக்க விரும்பாதது கூட ஒரு காரணம்.
பிறகு விஞ்ஞான பூர்வமாக குழந்தைகளுக்குக் கர்பத்திலேயே கேட்டு உணரும் அறிவும் ஆற்றலும் உண்டு என்று படிக்கும்போது, அபிமன்யு கதைதான் ஞாபகத்தில் வரும். பெண்கள் விசேஷமாக கர்ப்பகாலம் முழுவதும் ”சந்தோஷமாக இருக்கணும், நல்லதையே நினைக்கணும், நல்லதையே பார்க்கணும், கேக்கணும்” என அம்மா அடிக்கடி கூறிக்கொண்டேயிருப்பார்கள்.
எங்கள் குடும்பத்திற்கும் இசைக்கும் ரொம்ப தூரம். என் தங்கை (சித்தியின் பெண்) விழுப்புரத்தில் பாட்டுக் கற்றுக் கொண்ட போது அவளுடைய டீச்சருக்கு(நல்ல இனிமையான குரல்) குயிலி என்று பட்டப் பெயர் சூட்டியது, அப்பா தினம் சாயி பஜன் பண்ணும்போது “ மதுரம் மதுரம் “ என்று பாடினால் “ கோன் மதுரம்?” என தூர்தர்ஷன் உதவியால் கற்றுக் கொண்ட இந்தியில் கிண்டலடிப்பது என்பது மட்டுமே என்னுடைய நேரடித் தொடர்பு சங்கீதத்துடன். ஆனாலும் ரேடியோ பிறகு டேப்ரிக்கார்டர் முதலியவற்றின் பின்னணியில் தான் எப்போதுமே படித்தேன். அதுவும் நட்ட நடு ஹாலில்தான் படிப்பு. நடக்கும் எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்டு, அவ்வப்போது அவர்கள் ஏதாவது மறந்து விட்டால் அதை ஞாபகப்படுத்துவது என் பிரதான வேலையாகவிருந்தது.
மனைவி பாட்டோ நடனமோ கற்றுக் கொள்ளவில்லை. சாஸ்திரிய சங்கீதத்தை ரசிக்குமளவுக்கு ஞானம் உண்டு. கற்றுக் கொள்ளாததை நினைத்து இப்போது வேதனைப் படுகின்றாள் எனக்கு ஒரு தலைவலி கம்மி என்ற சந்தோஷம். இல்லையென்றால் பாட்டுப் பாடி ”எப்படியிருக்கு?” என்றால் என்ன பதில் சொல்வது. எப்படி பதில் சொன்னாலும் சிக்கல்தான். நல்ல வேளை அந்த அபாக்கியம் நான் பெறவில்லை.
அவள் கர்ப்பம் தரித்திருந்த காலத்தில், எனக்கு இல்லாத ஞானம் குழந்தைக்காவது இருக்கட்டும் என்று நல்ல மியூசிக் சிஸ்டம் வாங்கி, நல்ல கர்நாடக சங்கீத இசையை அவள் கேட்கும்படி செய்தேன். இன்று என் மகன் பாடாவிட்டாலும் (நல்ல இனிமையான குரல் ஆனால் எல்லாவற்றையும் மீறி கூச்சம்) கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை (சிம்பொனி) , திரையிசை(தமிழ் மற்றும் ஹிந்தி) இவைகளை ரசிக்கின்றான். டிசம்பரில் இரு வருடங்களாக சென்னையில். அவன் தாத்தாப் பாட்டியுடன் மியூஸிக் சீஸனில் நடக்கும் கச்சேரிகளுக்குப் போகின்றான். என்னையும் வா வா என்கின்றான். எனக்குக் கூட போகவேண்டும் என்றுதான் ஆசை,நாரத கான சபாவில் வருடா வருடம் ”ஞானாம்பிகாவின்” அருமையான சாப்பாடு மற்றும் டிபன் வகைகளை சாப்பிட மட்டும்.
என் மகன் இசையை ரசிப்பதற்கு, அவனுக்கு இவ்வூரில் கட்டாயமாக இருந்த இசைப் பயிற்சி மற்றும் நுண்கலையை இரசிப்பதற்கும், நாடகத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் பெற்ற பயிற்சியும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
அண்ணாவின் மகன், மகள் இருவருமே அதிர்ஷ்டசாலிகள். தாத்தப் பாட்டி, சித்தப்பாக்கள், அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் என பெரிய பட்டாளத்துடன் வளர்ந்தவர்கள். என் நண்பன் பாஸ்கர் மந்தைவெளியிலிருந்து வேளச்சேரிக்கு, அவர்கள் சொந்த வீடு வீடு கட்டிக் கொண்டு போகும் போது, அவனுடைய அப்பா எனக்காகவே ஒரு கெஸ்ட் ரூம் வைத்திருந்தார். எஸ் பி பி போலவே மிக அருமையாகப் பாடுவான். அவன் வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் வசித்த அண்ணாநகர் வந்து எங்களுடன் தங்குவான். நான் சனிக்கிழமை வேளச்சேரி செல்வேன். இது அடுத்த வாரம் அப்படியே மாறும். அண்ணாவின் மகனுடன் வெளியில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தவன், பிராக்டிஸ் ஆரம்பித்தப் பிறகு அண்ணாவின் மகளுடன் மோட்டார் சைக்கிளில் செல்ல ஆரம்பித்தேன். நானும் பாஸ்கரும் அண்ணாநகர் கிராண்ட் தியேட்டரில் மௌனராகம் படத்தை, அந்தப் படம் ஓடிய 4 வாரங்களிலும் வாரக் கடைசிகளில் பார்த்தோம்.
சமீபத்தில் சென்னையில் மௌனராகம் படம் பார்த்துக் கொண்டே நாஙகள் கிராண்ட் தியேட்டரில் அந்த படத்தை எத்தனை தடவைப் பார்த்தோம் என்று நினைவிருக்கின்றதா என்று குறுஞ்செய்தியனுப்பினான் .
ஒவ்வொரு தடவையும் வீட்டிலிருந்து நாங்கள் கிளம்புவதற்கு முன்பு அண்ணாவின் மகள் ஓடிப் போய் மன்னியிடம், ”நான் சித்தப்பாவுடன் பாஸ்கு வீட்டுக்குப் போறேன். சாப்ட வரல” என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்புவாள். பாஸ்கரும் (தமிழகப் பட்டி மன்றங்களில் பரவலாக அறியப் பெற்ற பாரதி பாஸ்கரில், பாஸ்கர் இவன் தான்) ஒவ்வொரு தடவையும் ”ஆகா! என்ன பொறுப்பு. இந்த வயசுலேயே” என்பான். எங்காவது கிளம்புவதற்கு முன்பு, எங்கு போகிறேன், சாப்பிட வருவேன் இல்லை என்று கட்டாயம் சொல்லவேண்டும் என்பது எங்கள் வீட்டின் டென் கமாண்ட்மென்ட்ஸ்லில் ஒன்று.
இக்கட்டான சூழ்நிலைகளில் இராமன் எப்படி முடிவெடுக்கின்றான் என்பதில் அவனுடைய ஆளுமை வெளிப்படுகின்றதை தாடகை வதத்தில் அதை மிக அழகாகச் சித்தரிக்கின்றார் கம்பர்
இராமனும், இலக்குவனும் ”தாடகை எங்கே?” என்று வினவுமுன்னே நேரிலே வந்த தாடகை
ஆர்த்து. அவரை நோக்கி நகைசெய்து. எவரும் அஞ்ச.
கூர்த்த நுதி முத் தலை அயில் கொடிய கூற்றைப்
பார்த்து. எயிறு தின்று பகு வாய்முழை திறந்து. ஓர்
வார்த்தை உரைசெய்தனள் – இடிக்கும் மழை அன்னாள்
கூர்த்த நுதி முத் தலை அயில் கொடிய கூற்றைப்
பார்த்து. எயிறு தின்று பகு வாய்முழை திறந்து. ஓர்
வார்த்தை உரைசெய்தனள் – இடிக்கும் மழை அன்னாள்
‘கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட. கருவறுத்தனென்; இனி. ‘’சுவை கிடக்கும்
விடக்கு அரிது’ எனக் கருதியோ? விதிகொடு உந்த.
படக் கருதியோ? - பகர்மின். வந்த பரிசு!’ என்றே.
கெட. கருவறுத்தனென்; இனி. ‘’சுவை கிடக்கும்
விடக்கு அரிது’ எனக் கருதியோ? விதிகொடு உந்த.
படக் கருதியோ? - பகர்மின். வந்த பரிசு!’ என்றே.
எள்ளலின் காரணமாக நகைத் தோன்ற “ நீங்கள் இங்கே வந்தது மரணத்திற்குக் காரணமான உங்கள் ஊழ்வினை உங்கள் கழுத்தை நெட்டித் தள்ளிக் கொண்டு வந்ததனாலா? அன்றி இங்கு உள்ள உயிர்களையெல்லாம் கொன்று தின்றுவிட்டு இரைக் கிடைக்காமல் பசியால் உழல்கின்ற எனக்கு உணவு தரவேண்டுமென்ற கருத்தினாலா?” என்று தாடகை வினாவினள்.
அது மட்டுமின்றி விழித்துப் பார்த்து மலைகளும் பொடிபட காலால் உதைத்து இந்த வேற்படையை இவர்கள் மார்பில் அழுந்தும்படி வேகமாக விடுவேன் என்று கர்ஜித்தாள்.
அண்ணல் முனிவற்கு அது கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை பெருந்தகை நினைந்தான்.
உண்’ என. வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை பெருந்தகை நினைந்தான்.
பேராரவாரம் செய்து கொண்டு பெருஞ்சினத்துடன் வந்த தாடகையை இராமபிரான் கொல்ல வேண்டுமென்று முனிவன் கருதினானாயினும், அம்முனிவன் குறிப்பை உணர்ந்தும், இராமபிரான் பெண்கொலை பெரும்பாவமென்று கருதி வாளாவிருந்தனன். ஆவியுண்ணுதல் – கொல்லுதல்; வடிக்கணை- ஆராய்ந்தெடுக்கப்பட்ட அம்பு.
சிறு வயதிலேயே குழந்தைளின் ஆளுமை, அவர்கள் எவ்விதம் தீர்மானிப்பர், இக்கட்டில் எப்படி நடந்து கொள்வர் என்பது தெரிந்துவிடுகின்றது. என் மகனுக்கு மூன்று வயது கூட நிரம்பாத நிலையில் சென்னையிலிருந்து இங்கு வந்தேன். பிறகு ஒருவருடம் கழித்து மனைவி. இங்கு அப்பொழுது பள்ளியில் சேர்க்கும் காலம் இல்லையாதலால், ஏப்ரல் மாத கோடை விடுமுறையின் போது மகன், என் மாமியாருடன் வந்தான். மெட்ராஸிலே தனிவீடு, கார், டிரைவர் என்ற வாழ்க்கை. இங்கு எல்லாமே பெட்டி பெட்டியாக வீடுகள். காரும் கிடையாது. அவனுக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு பொருளையுமே ”உங்கவீடு சின்னது. அதான் சின்னதா இருக்கு. எங்க வீடு பெரிசு அதான் பெருசாயிருக்கு” என்பான். இரண்டு மாதம் கழித்து ”யாயா நம்ம சாமானெல்லாம் எடுத்துக்கோ. நாம கிளம்பணுமே” என்று கிளம்பிவிடுவான். அவன் ஒரு நாள் கூட கிளம்பும் போது அழுததில்லை. ஆனால் ஓவ்வொரு தடவையும் ”ஐந்தாவது வரை மெட்ராஸ்ல படிப்பேன். அதுக்குப்புறம் இங்கே வந்துடுவேன்.ஆறாவதுலேந்து இங்கேதான் படிப்பேன்” அப்போது அவன் சரஸ்வதி வித்யாலயாவில் ஒன்றாவது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையின் போது வந்து எங்களுடன் இரண்டு மாதமிருந்துவிட்டு கிளம்புவான்.
எனக்கு பழக்கமான ஒருவரின் மனைவிக்கு சந்தேகம். ”ஏன் பையன் உங்களுடன் இல்லை. “அவனுக்கு இஷ்டமில்லை" என்றால், “சின்ன குழந்தைக்கு என்ன தெரியும்?” என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். ”நாளைக்கு உன் வீட்டிற்கு அவனை அனுப்பி வைக்கிறேன் நீயே கேட்டுக் கொள்” என்றேன். அவன் ஆறாவது போகும் சமயம் என்னுடைய பழைய வேலையைவிட்டுவிட்டு சென்னையில் இன்னொரு வேலை ஒப்புக் கொள்ளும் சமயத்தில், இங்கும் இன்னொரு வேலை வாய்ப்பும் வைத்துக் கொண்டு, நான் முடிவெடுக்கத் தடுமாறிய சமயத்தில், மகன் இங்கு வந்து படிக்கின்றேன், என சொல்லவும் அதன்படி இங்கேயேயிருப்பது என்று தீர்மானித்தேன். அச்சமயம் நான் சென்னையில் வேலையில் சேர வேண்டிய கம்பெனியில் பணியாற்றிய நண்பனும் இங்கிருந்தான். ”ஏழுவருடம் கழிச்சு வரவிருந்த பெர்மனென்ட் ரெசிடென்சியை எங்கே வேணாம்னுட்டு அங்கே வந்திடுவியோன்னு பயந்தேன். நல்லவேளை” என்றான்.
12 வது முடித்துவிட்டு இவ்வூர் வழக்கப்படி அவன் கனடா தான் போகப் போகிறேன் என்றான். அதே போல் அவனுக்கு டொரண்டோ யூனிவர்சிட்டியில் வணிகம் ற்றும் பொறியிலில் சிவில் பிரிவிலும் இவன் பரிட்சை எழுதுவதற்கு முன்பே அட்மிஷன் வந்து விட்டது. நான் பொரியியலுக்கு வேண்டுமானால் நீ கனடா செல்லலாம். ஆனால் வணிகத்திற்கு ஹாங்காகிலேயே நல்ல யூனிவர்சிட்டியிருக்கும் போது கனடா செல்ல வேண்டாம் என்றேன்..ஹாங்காங் பல்கலை கழகங்களுக்கும் விண்ணப்பிக்க சொன்னவுடன் “ உனக்காகப் பண்ரேன் ஆனா நான் கனடாதான் போகப் போகிறேன்” என்றான். நானும் சரி வரட்டும் பார்க்கலாம் என்றுதான் இருந்தேன். இங்கும் அவனுக்கு உடனேயே சீட் வந்துவிட்டது, இங்கும் கனடாவிலும் ஹாஸ்டலுக்கும் முன் பதிவு செய்திருந்தேன். அவன் எதற்கு வேண்டுமானாலும் போய் படிக்கட்டும் என்று. அவன் கனடாதான் போகப் போகிறான் என்று நான் முடிவுக்கு வந்ததிருந்த வேளையில் ”நான் இங்கேயேப் படிக்கப் போகிறேன். கனடா போகப் போவதில்லை” என்று நண்பர்களுடன் ஓஷன் பார்க் சென்று திரும்பி வந்த மாலைப் பொழுதில் கூறினான். இன்று பட்டப் படிப்பை முடிக்கப் போகின்றான். வெளிநாடு போய் படிப்பதுதான் உயர்ந்தது எனும் மோகத்தையும் மாயையையும் உடைத்து ஒரு பெரிய ரோல் மாடலாகத் திகழ்கின்றான். எங்கள் குடும்பத்தில் உறவினர்கள் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி “ஏன் இஞ்சினியரிங் படிக்கவில்லை?”. நல்ல மானேஜர் 10 இஞ்சினியரை வேலைக்கு அமர்த்தலாம் என்று என் பெரிய அண்ணா கூறினதை நினைத்துக் கொள்வேன்.
குழந்தைககளுக்கே திடமான எண்ணங்கள் இருக்கும் போது பதினாறு வயது இராமனைப் பற்றிக் கேட்கவாவேண்டும்! .
இராமன் குறிப்பறிந்த விசிவாமித்திரன் இந்தத் தாடகையை பெண்ணென்றால் தகாது
‘தீது என்றுள்ளவை யாவையும் செய்து. எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
‘நாண்மையே உடையார்ப் பிழைத்தால். நகை;வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்.
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே?
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்.
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே?
”சாரமிள்ளாத பொருள் என்று எங்களை தின்னாமல் விட்டது மட்டுமே இவள் குறை, மீதி அனைத்தையும் செய்திருக்கின்றாள். அது மட்டுமின்று நீ நினைக்கின்றபடி பெண்களைக் கொல்வது பலரும் ஏளனம் செய்யும் நகைப்புக்குறியதுதான் என்றாலும், இவள் பெண்ணேயல்ல ஆணே; அன்றியும் தன் பெயரை சொன்னாலும், அது கேட்ட மாத்திரத்திலேயே பெருவீரரும் தங்கள் வலிமை முழுவதையும் இழந்து இவளுடன் போரிடப் பின்வாங்குவாரென்றால். இவளிடத்திலே ஆண்மையுள்ளதென்பதா, மற்றையோரிடத்தில் ஆண்மையுள்ளதென்பதா? என்ற கேட்ட முனி மேலும் இந்திரனும், விஷ்ணுவுமே பெண் கொலையினால் புகழைப் பெற்றவர். நான் ஆராய்ந்து கூறுகின்றேன் நீ தயங்காமல் இவளைக் கொல்” எனக் கூறுகின்றான்.
மிக நீண்ட பரம்பரையிலே சில அடிப்படையான கொள்கைகள், பண்பாடுகள் போற்றி வளர்க்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று சுத்தவீரன் பெண்களைக் கொல்லக் கூடாது என்பதாகும். அந்த மரபில் வளர்ந்தவனாகிய இராகவனுக்கு தாடகையைக் கொல்வது என்பது நினைக்க முடியாததாக அமைகின்றது. இந்த நிலையில் விசுவாமித்திரன் மிக அற்புதமான பல காரணங்களைக் காட்டி ‘இவள் பெண்ணே அல்லள் - பெண் உருவத்திலுள்ள அரக்கி’ என்று எவ்வளவு சொன்னாலும், ‘பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான்’ இராமனுக்கு வித்தைகள் கற்றுக் கொடுத்தவன் மாபெரும் முனிவனாகிய வசிட்டன். அவன் ரகுவம்சத்தின் அரசகுரு. அவன் சொல்லியது ஒரு பொது தர்ம கொள்கை. “ பெண்ணைக் கொல்லக் கூடாது” என்பது அது. விசுவாமித்திரனோ அரசன். பிறகு தவமியற்றி பிரம்மரிஷியானவன். அவன் பொது சட்டத்தை மாற்ற வேண்டும் மக்கள் வாழும் தற்சமய சூழ்நிலைக்குத் தக்கவாறு என்ற கருத்தைக் கொண்டவன். அதனால் தாடகையை பெண் என நினைக்காதே என்று இராமனுக்கு கூறுகின்றான். ”பெண் உருவம் படைத்தவள் ஆயினும் பெண்மை குணம் உள்ளவள் அல்ல, அரக்கி” என்று எடுத்துக் கூறுகின்றான்.
2ஜீ அலைவரிசை ஊழலில் கனிமொழி கைது செய்யப்பட்டபோது முதலில் “நான் பெண் என்பதால் எந்த சலுகையையும் கோரப்போவதில்லை” என்று கூறியவர் தன் ஜாமின் மனுவில் கூறிய முதல் காரணம் “ நான் பெண். என் குழந்தையை கவனித்துக் கொள்ளவேண்டும். ஆகவே எனக்கு ஜாமின் வழங்கவேண்டும்” என்பதுதான். இந்த வழக்கில் இன்னுமொரு விநோதம். வாதாடியவர் பெயர் பெற்ற வழக்கறிஞர் திரு. ”ராம் ஜெத்மாலினி”. இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்காடுவர். ஆயினும் பணத்திற்காக, பேருக்காக ஒரு சாதாரண “ செஷன்ஸ் கோர்டில்” ஆஜரானார். அதை விட விநோதம் இவர் உச்சநீதிமன்றத்தில் வெளிநாட்டிலிருக்கும் கருப்பு பணத்தை கொண்டுவரவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று பொதுநல வழக்குத் தொடர்ந்தவர். எத்தனை விசுவாமித்திரர்கள் வந்தாலும் அசுரசக்தி (பணம், அதிகாராம்) இன்றும் அழியாமல்தான் இருக்கின்றது.
ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்?பகின்றேன் அலேன்;ஆறி நின்றது அறன் அன்று; அரக்கியைக்
கோறி’ என்று. எதிர் அந்தணன் கூறினான்.
”இவள் மேல் உள்ள கோபத்தினால் சொல்லவில்லை, அழிவில்லாத நல்ல தருமத்தைப் பார்த்து இசைத்தேன். இவ்வரக்கியைக் கொல்வாயாக” என்று கௌசிகமுனிவன் கூறினான்.

இந்த விசுவாமித்திரன் இப்போது ‘கோறி’ என்று கட்டளை இடுகிறான்.
ஐயன் அங்கு அது கேட்டு. ‘அறன் அல்லவும்
எய்தினால். ‘’அது செய்க!’’ என்று ஏவினால்.
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு’ என்றான்.
எய்தினால். ‘’அது செய்க!’’ என்று ஏவினால்.
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு’ என்றான்.
எனக்கு உன்னைப் போன்றவர் ஒன்றை ஏவினால் அதனைச் செய்ய வேண்டுவது கடமையென்று கூறினான் இராமன்.
வளர்ந்து, காளைப்பருவம் அடைந்த ஒருவன் தனக்கென்று சில எண்ணங்கள், நினைவுகள், குறிக்கோள்கள் முதலியவற்றை உடையவனாக இருப்பான். முதன்முதலாக இப்போது அந்நிய மனிதனோடு பழகுகிறான் இராகவன். விசுவாமித்திரன் முன்பின் பழக்கம் இல்லாதவன். அப்படிப்பட்ட ஒருவன் ஒன்றைச் சொன்னான் என்றால் சாதாரண மனிதர்கள்கூட அதை ஏற்றுக் கொள்வது கடினம். அப்படியிருக்க அரச குமாரன் எப்படி ஏற்றுக்கொண்டான்?
அதிலும் ஓர் அடிப்படை இருக்கின்றது. கீதையில் சொன்னபடி சமதிருஷ்டி உடையவனாக,ஸ்திதப்பிரக்ஞனாக ஒருவன் வாழ்வானேயானால் அவன் தான், தனது, தன்னுடைய எண்ணம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எது கடமை என்று சொல்லப்படுகிறதோ அதை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பான். அந்தக் கடமையை நிறைவேற்றும்போது தன்னுடைய விருப்பு வெறுப்புகள் குறுக்கிட அவன் இடம் கொடுப்பதே இல்லை. இராமன் தனது கருத்து எதுவாயினும் உலகங்களையெல்லாம் சிருஷ்டித்தவனும், காயத்ரீ மந்திரத்தைத் தோற்றுவித்தவனும், யாவராலும் போற்றப்படுகின்றவனும், பிரும்மரிஷி என்ற பட்டம் பெற்றவனுமாகிய விசுவாமித்திரன் ‘இதுதான் அறம்’ என்று சொல்வானேயானால், இதுவரையில் அறம் என்பதற்குத் தான் கொண்டிருந்த கருத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு விசுவாமித்திரன் ‘இவளைக் கொல்வதுதான் அறம்’ என்று சொல்லும்போது அதனை ஏற்றுக் கொள்கிறான் என்று காணுகின்றோம் அப்படி ஏற்றுக்கொள்ளும்போது இராமனுடைய வளர்ச்சியையும் நாம் அறிய முடிகிறது. உண்மையில் சமதிருஷ்டி உடையவனாக
அவன் வளருகிறான் என்பதைக் காண முடிகிறது. ஆனாலும் பெண்ணைக் கொலை செய்வதை இராகவன் முழுமையாக் ஒப்புக் கொண்டானா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
அவன் வளருகிறான் என்பதைக் காண முடிகிறது. ஆனாலும் பெண்ணைக் கொலை செய்வதை இராகவன் முழுமையாக் ஒப்புக் கொண்டானா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
இவர்களுடைய கருத்தையறிந்த தாடகை
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை. அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா.
செங் கைச் சூல வெந் தீயினை. தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள்.
அவன் மேல் சிவந்த கையிலுள்ள சூலாயுதமாகிய கொடிய நெருப்பை, கொடிய தனது பயங்கரமான கண்களினின்று எழுகின்ற அக்கினிச் சுவாலையுடனே மேலெ செல்லும்படி வீசினாள். மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா.
செங் கைச் சூல வெந் தீயினை. தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள்.
மாலும். அக் கணம் வாளியைத் தொட்டதும்.
கோல வில் கால் குனித்ததும். கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர்.இராமன் பாணத்தைத் தொட்டதும் அழகிய வில்லின் குதையை வளைத்ததையும் கண்டிலர்; கண்டது சூலாயுதத்தின் துண்டங்களையே. கண்டிலர் அகண்டனர் என்பதற்கு விசுவாமித்திர லட்சுமணர் எழுவாய் என்பாருமுளர். காரண காரியங்களை விளக்கும் பொருட்டு அம்பைத் தொட்டதை முன்னும், விற்கால் குனித்தலைப் பின்னுமாக வைத்துக் கூறினார்.
கோல வில் கால் குனித்ததும். கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர்.இராமன் பாணத்தைத் தொட்டதும் அழகிய வில்லின் குதையை வளைத்ததையும் கண்டிலர்; கண்டது சூலாயுதத்தின் துண்டங்களையே. கண்டிலர் அகண்டனர் என்பதற்கு விசுவாமித்திர லட்சுமணர் எழுவாய் என்பாருமுளர். காரண காரியங்களை விளக்கும் பொருட்டு அம்பைத் தொட்டதை முன்னும், விற்கால் குனித்தலைப் பின்னுமாக வைத்துக் கூறினார்.
அவள் கல் மழை பொழிய இராமன் வில் மழையால் அதைத் தடுத்தான்.
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம். கரிய செம்மல்.
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல் விடுதலும். வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது. அப்புறம் கழன்று. கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருள் என. போயிற்று அன்றே!
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல் விடுதலும். வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது. அப்புறம் கழன்று. கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருள் என. போயிற்று அன்றே!
இராமபிரானது பாணம் முனிவர்களின் சாப சொல்லுக்கு உவமையாகி “ இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுவது போல” புல்லர்க்கு மேலோர் சொன்ன சொல்லைப் போல் அவள் உடம்பில் தங்காது பின்னே உருவி போய்விட்டது.
தாடகை இறந்ததை இராவணனின் வீழ்ச்சிக்கு துர்நிமிதமாக
பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை. தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு. அந் நாள். முந்தி உற்பாதம் ஆக.
படியிடை அற்று வீழ்ந்த வெற்றிஅம் பதாகை ஒத்தாள்.
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை. தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு. அந் நாள். முந்தி உற்பாதம் ஆக.
படியிடை அற்று வீழ்ந்த வெற்றிஅம் பதாகை ஒத்தாள்.
தேவர்களும் அரக்கர்தம் வீழ்ச்சி நிச்சயம் என்று மகிழ்ந்து
‘யாமும் எம் இருக்கை பெற்றேம்;
உனக்கு இடையூறும் இல்லை;கோமகற்கு இனிய தெய்வப்
படைக்கலம் கொடுத்தி’ என்னா.
உனக்கு இடையூறும் இல்லை;கோமகற்கு இனிய தெய்வப்
படைக்கலம் கொடுத்தி’ என்னா.
முனிவனினும் அவ்வாறே படைகலங்களை அருள அஸ்திரங்கள் யாவும் வேண்டி இராமனுக்கு அடிமையாயின.
எனவே, தர்மசங்கடமான நிலை வரும்போது மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எப்படி இராகவன் முடிவெடுக்கின்றான் என்பதை மிக அற்புதமாக அவனுடைய கன்னிப் போரிலே வைத்துக் காட்டுகிறான் கம்பநாடன்.
முதன்முதலாக அரச குமாரனாகிய இராகவன் எப்படிப் பிற்காலத்தில்
வளரப்போகின்றான், எப்படிப் பிரச்சினைகளைச் சமாளிக்கப் போகிறான் என்பவற்றை நாம் அறிந்துகொள்வதற்கு முதல் முதல் ஒரு சூழ்நிலை ஏற்படும்போது இவன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதை வைத்துத்தான் இவனுடைய பிற்கால வாழ்க்கை அமையும்
என்பதை எடுத்துச் சொல்பவன்போலக் கம்பன் இந்த அற்புதமான காட்சியை நமக்குக் காட்டுகிறான்.
வளரப்போகின்றான், எப்படிப் பிரச்சினைகளைச் சமாளிக்கப் போகிறான் என்பவற்றை நாம் அறிந்துகொள்வதற்கு முதல் முதல் ஒரு சூழ்நிலை ஏற்படும்போது இவன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதை வைத்துத்தான் இவனுடைய பிற்கால வாழ்க்கை அமையும்
என்பதை எடுத்துச் சொல்பவன்போலக் கம்பன் இந்த அற்புதமான காட்சியை நமக்குக் காட்டுகிறான்.