Friday, February 3, 2012

தலைமகன்

என் தாத்தாவிற்கு என்னுடைய பாட்டி இரண்டாம் தாரம். அவருக்குப் பிறந்தது 16 குழந்தைகள். நான் பிறந்த சமயத்தில் உயிருடன் இருந்தவர்கள் 9 பேர். என் தாத்தா அந்தக் காலத்தில் ஹைவேசில் ஒவர்சீயராக இருந்து ஓய்வுபெற்றவர். அவரிடம் கேட்பேன் இவ்வளவு பசங்கள்ல யாரைப் பிடிக்கும்?  “உங்க அப்பன்தான் என்ற பதில் யோசிக்காமல் வரும். பாட்டியிடம் கேட்டால் எல்லாருமே ஒரே மாதிரிதான் என்பது வரும். அப்பா வீட்டிற்கு முதல் ஆண் பிள்ளை. அப்பாவிற்கு மேலே இரண்டு பெண்கள். என் அப்பா வேலையில் இருந்த வரைக்கும் சித்தூரிலிருந்து 100 மைல் தாண்டி எந்த ஊரிலும் வேலை பார்த்ததில்லை, ஒரு 10 மாதம் திருச்சியில் இருந்ததைத் தவிர.

தாத்தாவிடம் ஏன் அப்பாவிடம் மட்டும் தனிப் பாசம் என்றால் என் சுமையைக் கொஞ்சம் அவனும் சுமந்தான். அதுவுமில்லாம முதல் பிள்ளைக்கே உரிய பொறுப்புடன் செயல் பட்டான் என்பார். இதையெல்லாம் மீறி எனக்குப் பின் என் பரம்பரையைத் தொடர்ந்து எடுத்துச் செல்வது அன்று என் மண்டையில் ஏறாத விஷயங்களை எல்லாம் சொல்வார்.

அப்பாவும் தாத்தா சொன்ன சொல்லை ஒரு நாளும் மீற மாட்டார். அவரிடம் எதிர்த்துப் பேசியும் பார்த்ததில்லை. அதற்கு அவர்களுக்குள் இருந்த ஒரு புரிதலும் கூட இருக்கலாமோ என்று இன்று தோன்றுகின்றது. அப்பாவிற்கு கோபம் வரும் விஷயம் எதைப் பற்றியும் தாத்தா பேசிப் பார்த்ததில்லை.

பொதுவாகவே முதல் குழந்தைகள் எல்லாவற்றிலுமே பொறுமையாக, பொறுப்பாக, குடும்பத்தில் அக்கறையுள்ளவர்களாக இருப்பர். இரண்டாவது அல்லது அதற்குப் பிறகு வருபவர்களுக்கு எல்லாம் ஒரு ரோல் மாடல் இருப்பதால் அனைத்துமே இலகுவாக நடந்துவிடுகின்றது. ஏன் பேச்சு கூட இரண்டாவது குழந்தைகளுக்குச் சீக்கிரம் வந்துவிடுகின்றது. அதுவும் பெண் குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம். என் பெரிய அண்ணன் உண்மையிலேயே மிகப் பொறுப்பானவன். வீட்டிற்கு வருகின்ற நெருங்கிய உறவினர்கள் ஊருக்கு புறப்படும் சமயம் ஒரு ரூபாய் இல்லை ஐந்து ரூ (நான் சொல்வது 1966) தருவார்கள். அதையெல்லாம் ஒரு மண் உண்டியில் போட்டு வைத்து ஒரு வருடம் கேரம் போர்ட், ஒரு வருடம் பாம்பே டிரேட், கிரிக்கெட் பாட் என பல வாங்கி நாங்கள் அனைவரும் விளையாடுவோம். அதிலும் என தம்பிக்கு Tongue Tie. பேச்சு சுத்தமாக வராது அவனுக்கு தெரிந்த வார்தைளே மொத்தம் மூன்றுதான். வெளியே போவதற்கு “ ஓ கில்கி” . குளிப்பதற்கு “ ஜோ கில்கிஉறவினர்களிடம் பைசா வேண்டும் என்பதற்கு “ கில்கு. கில்கு”. அவன் தான் எங்கள் ஸ்டார், பண வசூலில். என் பெரிய சித்தப்பா டாக்டர் (எம் ஸ் ) கடைசி சித்தப்பா எம் பி பி எஸ் முடித்து ஹவுஸ் சர்ஜன். இவர்களிருவரும் கூட ஏன் எதற்கு என்று கண்டு பிடிக்கவில்லை. என் அத்தை கல்யாத்திற்கு போனபோது கடைசி சித்தப்பாவின் நண்பன் தான் அது டங் டை என்று சொல்லி அவனுக்கு வேலூர் சி எம் சி ஹாஸ்பத்திரியில் ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணி, ஸ்கூல்; போவதற்கு முன் பேச ஆரம்பத்து விட்டான்.

என் பெரியண்ணன் எங்கள் குடும்பத்தின் பெஞ்ச் மார்க். அப்பா, அம்மா இருவழியிலும். எஸ் எஸ் எல் சி யில் 499/600க்கு அந்தக் காலத்தில். கணிதத்தைத் தவிர வேறு எதிலும் நூறு மார்க் வாங்க முடியாது. தேசிய அளவில் ஸ்காலர்ஷிப் வேறு வாங்கியவன். பியூஸி யில் ஒரு H  இரண்டு D+. அப்போதெல்லாம் மார்க இல்லை. க்ரேடிங் முறைதான். ராகவன் மாதிரி படிங்க, அவன் எவ்வளவு பொறுப்பா இருக்கான் இது என்னைப் போலவே என் அத்தை, சித்தி பசங்கள் எல்லாரும் கேட்டுக் கேட்டு, புளித்து போன ஒன்று. சில சமயம் சபதம் கூட எடுத்திருக்கின்றேன் இவன் எஸ் எஸ் எல் சி லே வாங்கின மார்க்கை விட ஒரு மார்க் அதிகமாக வாங்கி இவன் மூக்கை உடைக்கணும். அது நடக்கவில்லை. 23 மார்க்குகள் கம்மியாக வாங்கினேன். அவ்வளவு மோசமான மார்க் இல்லையாதலால் தப்பித்தேன். அதன் பிறகு “ஒப்பிடுவது எனக்குப் பிடிக்காத விஷயம். நான் தனி”  என்று சொல்லி ஆரம்பிக்கும் முன்பே முடித்துவிடுவேன். ஒரு காலத்தில் பெரிய அண்ணனுக்கு எதிராக மிகப் பெரிய கும்பல் ஒன்றிருந்தது. இக்காலத்தைப் போலில்லாமல், அஹிம்சாவதிகளாக அவனை மிஞ்சுவது என் முடிவெடுத்து ஏதோ பேரைக் காப்பாற்றிக் கொண்டோம்.



 தசரதனுக்கு இராமனைத் தவிர வேறு பிள்ளைகள் இருப்பதே நினைவில்லாத படி இராமன் ஒருவனிடத்து மட்டுமே, அதிகப் படியான பாசம் வைத்திருந்தான். அவனுக்கு இராமனைப் பற்றிக் கூட முழுமையாகத் தெரியுமா என்றால் இல்லை. பரதனைப் பற்றியோ அவனுடைய குணங்களைப் பற்றியோ சிறிதும் அறியக் கூட முயலாதவன். கீழ்வரும் பாடல் பிறந்த குழந்தைகளுக்கு வசிட்டன் பேரிட்ட உடனேயே வருவது. தசரதன் இராமனின் பேரில் வைத்த அதீதப் பாசம்தான் இவன் மரணத்திற்குக் காரணமோ என எண்ணத் தோன்றுகின்றது. 

காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே
ஓவிய எழிலுடை ஒருவனை அலது. ஓர்
ஆவியும் உடலமும் இலதுஎன. அருளின்
மேவினன் - உலகுடை வேந்தர்தம் வேந்தன்.
ஓவியம் போன்ற அழகுடைய ஒப்பற்ற ஒருவனாகிய ராமனை;  அல்லது வேறு உயிரும் உடலும்  தனக்கு இல்லை எனும்படி நினைத்து உலகனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆளும் மன்னர்   மன்னனான  தயரதன்;  மூத்தகுமாரனிடத்து பேரன்போடு பொருந்தியிருந்தான்.

என தந்தையும் தாத்தாவைப் போலவே என்னுடைய பெரிய சகோதரனிடம் அளவற்ற அன்புடையவர். எனக்கு யாரிடத்தில் ஆதிக ஆசை வைப்பது என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. என் நண்பனின் தந்தை அடிக்கடி கூறுவது போல்  “ஓர்  ஏர் உழவன்நான்.  

தசரதன் இனிது ஆண்டு கொண்டிருந்த ஒர் நாள் மாமுனி விசுவாமித்திரன் அவனுடைய அவையை சேர்ந்தான். அரசனும்
நிலம் செய் தவம் என்று உணரின்  அன்று; நெடியோய்! என்
நலம் செய் வினை உண்டு எனினும்.    அன்று; நகர். நீ. யான்
வலம் செய்து வணங்க. எளிவந்த    இது முந்து என்
குலம் செய் தவம்என்று    இனிது கூற. முனி கூறும்:
நிலம்: மக்களை உணர்த்திற்று. தவம் தவப்பயன் அல்லது புண்ணியமும். தயரதன். முனிவனை நோக்கி ‘’நெடியோய்’’ என்றது. நீண்ட தவத்தை உணர்த்தி நின்றது.
முறைப்படி அந்த முனிவனை உபசரிக்க, முனியும் தசரத சக்ரவர்த்தியினைப் புகழ, அரசன் “யான் செய்ய வேண்டியது யாது? எனக் கேட்க முனி
தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறா. தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என. நிருதர் இடை விலக்கா வண்ணம்.
‘’
செருமுகத்துக் காத்தி’’ என. நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என. உயிர் இரக்கும் கொடுங் கூற்றின். உளையச் சொன்னான்.
“சித்தாஸ்ரமத்தில் நான் செய்கின்ற யாகத்துக்கு ஊறு விளைவிக்கின்ற இராட்சதர்களை யுத்தத்தில் நின்று காப்பாயாக என ஆணையிட்டு, உன்புதல்வர் நால்வரிலும் கரிய செம்மல் ஒருவனை என்னுடன் அனுப்பு என்று உயிரைத் தா என கேட்கும் கூற்றுவன்(யமன்) போல் கேட்டான்.
தசரதனுடைய நினைவு முழுவதுமே இராமனையேச் சுற்றியிருந்ததால் “நால்வரினும்என்பதை அவன் சிந்திக்கவேயில்லை. அதனால்தான் கவி கரிய செம்மல் ஒருவனை தந்திடுதி எனக் கூறியது உயிர் இரக்கும் கொடுங் கூற்றினுனைய சொன்னான் எனத் தோன்றுகின்றது  
தசரதனுக்கு இரண்டு பிள்ளை கருப்பு, இரண்டு பிள்ளை சிகப்பு. நான்கு பிள்ளைகளில் ஒருவனிடத்து மட்டுமே அன்பு வைத்ததால் அதற்குறியத் தண்டனையை அனுபவித்தேத் தீர வேண்டும்”  என்கின்றார் அ. ச ஞா. முனியோ முக்காலமும் உணர்ந்தவன். இராமன் வந்தால்தான் அவதார நோக்கம் நிறைவேறும். அப்படியிருக்கையில் தசரதன் தெரியாமல் பரதனை அனுப்பியிருந்தால் கெட்டது குடி என்ற போதிலும் கவி இவ்வாறு கூறுகின்றான். இது தான் முதல் முறையாக கவி கரிய செம்மல் என்றழைக்குமிடம்.
விசுவாமித்திரன், குலமுறைப் படலத்தில் ஜனகனுக்கு பரதனைப் பற்றிக் கூறுமிடத்து
தள்ள அரிய பெரு நீதித்    தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை.    பரதன் எனும் பெயரானை.
எள்ள அரிய குணத்தாலும்    எழிலாலும் இவ் இருந்த
வள்ளலையே அனையானை. கேகயர்கோன் மகள் பயந்தாள். என்கின்றான்.


ஐயா உன் பக்கத்தில் அமர்ந்துள்ள இராமனைப் போன்றே அரிய குணத்தாலும், எழிலாலும் ஒத்தவன் பரதன்என்கின்றான் விசுவாமித்திரன்.அது பிறந்த சிறு குழந்தைகளைப் பற்றியது என்றாலும் வள்ளலையே அனையானை என்ற வார்த்தைக் கவனிக்கப்பட வேண்டும்.
.கரிய செம்மல் என்றதும் இராமன் என நினைத்த தசரதனுக்கு
எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த. ஆர் உயிர் நின்று ஊசலாட.
கண் இலான் பெற்று இழந்தான்என உழந்தான் கடுந் துயரம் - கால வேலான்.
அந்த சொல்லானது கண் இல்லாதவன் காட்சி தெரிய ஆரம்பித்து சட்டென்று பார்வையிழப்பதைப் போலும், பகைவனுடைய வேல் பாய்ந்த மார்பில் இருக்கும் பெரு ஓட்டையினும் எரியும் கொள்ளிக் கட்டை நுழைவதை போலும் அச்சொல் அவன் காதில் புகவும், அவனுடைய உயிர் ஊசலாடியது. வைரமுத்துவின் வார்த்தைகளில் “ தீப்ட்ட காயத்திலே தேள் வந்து கொட்டுதடி கண்மணி”  போல் தசரதன் உணர்ந்தான்.
தம்பியுடன் வசித்து வந்த என் தந்தை தன்னுடைய 82 வயதில் உடல் நிலை மோசமாகி ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டிருந்தார்.  அவருடைய பிறந்த நாளுக்கு நான் இங்கிருந்து மூன்றாண்டுகளாக போவதை வழக்காக கொண்டிருந்தேன்.  சின்ன அண்ணனும் பெங்களூரிலிருந்து அதே சமயம் வந்துவிடுவான். அப்பாவின் பிறந்த நாள் அக்டோபர் 10 ஆம் தேதி. இங்கிருந்து சென்ற என் நெருங்கிய நண்பனின் மகன் திருமணம் அக்டோபர் 8 ஆம் தேதி. ரிஸப்ஷன் இப்போது வழக்கதிலிருப்பது போல் முதல் நாளில். அதற்கும் போவதற்காக இங்கிருந்து 6 ஆம் தேதி கிளம்பி 7 ஆம் தேதி விடியற்காலை சென்னை சென்றடைந்தேன்.  காலை ஹாஸ்பிட்டலுக்கு போவதற்கு முன்பே அப்பாவின் நிலை மோசமாவதாகவும் வென்டிலேட்டர் போடவேண்டும் என்றதற்கு நாங்கள் டாக்டரான எங்கள் சித்தப்பாவை கேட்டுச் சொல்கின்றோம் எனக் கூறி அப்போதைக்கு பதில் சொல்வதிலிருந்து தப்பித்தோம். சித்தப்பா வந்த உடன் கேட்டது “ராகவன் எப்ப வரான்? இன்னிக்கு ராத்திரி வரான்” . ரெண்டு வருஷமா சீனண்ணா ரொம்ப கஷ்டப்பட்டுட்டான். வென்டிலேட்டர்லாம் வேணாம். இன்னிக்கு ராத்திரி ராகவனைப் பார்க்காமல் ஒன்னும் ஆகாது. நான் கியாரன்டி என்றார். வாழ்க்கையை நல்லா ருசித்து ரசித்து அனுபவித்தவர் அப்பா.  சித்தப்பா என்னமோ சினிமா ஷோ முடியப் போற மாதிரி சொல்லிட்டு போறாளே. அவர் சொல்லுக்கு மரியாதை வைத்து டாக்டர்களிடம் “ வென்டிலேட்டர் போட வேணாம்என சொல்லி விட்டோம். பெரிய அண்ணன் நேராக ஏர்போர்டிலிருந்து வந்து அப்பாவைப் பார்த்து விட்டுப் புறப்பட்ட போது இரவு 11.40. அன்று இரவு 11. 55 என் தந்தையின் உயிர் பிரிந்தது.   

உயிர் ஊசலாட தசரதன் முனிவனிடம்
தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான்    ஒருவண்ணம் துயரம் நீங்கி.
படையூற்றம் இலன். சிறியன் இவன்; பெரியோய்!    பணி இதுவேல். பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும். புரந்தரனும்    நான்முகனும். புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய். யான் காப்பென்;   பெரு வேள்விக்கு எழுக!என்றான். இராமன் படைகலப் பயிற்சியில் முழுமையடையாத சிறியவன் எனவே நானே வந்து உன் வேள்வியைக் காப்பேன் என கூறியவுடன் முனிவனுக்கு மிக்க கோபம் எழுந்தது.
என்றனன்; என்றலும். முனிவோடு எழுந்தனன்.    மண் படைத்த முனி; ‘இறுதிக் காலம்
அன்று’ ‘என. ஆம்என இமையோர் அயிர்த்தனர்;    மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன; மேல் நிவந்த கொழுங்    கடைப் புருவம் நெற்றி முற்றச்
சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்;    இருண்டன. போய்த் திசைகள் எல்லாம். முனிவோடு:     கோபத்துடன். ஆயினும்  முனிவன்   எழுவதற்கு  முன் சினம் எழுந்தது  என்னும்  குறிப்பைக் காட்டி நின்றது. இம்முனிவனது சீற்றத்தால் விளைந்த செயல்களைக் கண்ட தேவர்கள் ஊழிக்காலமோ? அன்றோ   என   அஞ்சினர். நின்றனவும் அங்கும் இங்கும் திரிந்தன என்று மொழிமாற்றி, நிலத்தினைப் பொருளாகிய தாவரங்களும் அங்கும் இங்குமாகச் சுழலாயு (I think..not sure of this word) என்றும் பொருள் உரைக்கலாம்.  கூர்ந்து மனித மனநிலையையும் அதானால் உடலில் ஏற்படும் மாறுதல்களையும் கவி அற்புதமாக, புருவம் நெறித்து நெற்றி முற்றச் சென்றது, கண் சிவந்தது, கோபத்தால் எள்ளலுடன் கூடிய சிரிப்பும் உண்டாகியது”  என்பதன் மூலம் குறிப்பிடுகின்றார்.   நிகழ்வுகளை  கவி மூமே வசிட்டனும்
கறுத்த மா முனி கருத்தை உன்னி. நீ
பொறுத்திஎன்று அவற் புகன்று. நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?’ எனா. வசிட்டன் கூறினான். சினந்த விசுவாமித்திரனின் எண்ணத்தையறிந்த வசிட்ட முனி நோக்கி நீ இதைப் பொறுத்து அருள்வாயாக என்றே கூறி “மன்னா உன் மகனுக்கு ஒன்றும் ஆகாது. பெரிய நன்மைகளகூடி வரும் போது நீ தடுப்பாயோ என தசரதனும் புத்தி தெளிந்து இராம இலக்குவனர்களை முனியின் கையில் ஒப்புவித்து 

வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி. நல்
தந்தை நீ. தனித் தாயும் நீ. இவர்க்கு.
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!என்றான் அவர்களும் முனியுடன் காட்டிற்குச் சென்றனர். 
                                                               தொடரும்

No comments:

Post a Comment